D Muthu Prakash, Kanchipuram 💐
644 views
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 30.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== கயிலை தனில்வரவே காரிருளுந் தான்மறைய மயிலையொத்த ஈசர் மாயவரைக் கண்டாவிச் சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல் வந்தந்த ஈசுரரும் மார்போ டுறவணைத்து இத்தனை நாளும் யானும்மைக் காணாமல் புத்திரனுந் தாயைப் போகவிட்டாற் போலிருந்தேன் மாரி காணாத வாய்த்த பயிர்போலும் ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன் இனம்பிரிந்த மான்போல் இருந்தே னுமைத்தேடித் துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன் என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும் சென்றாவிக் கொண்டு சிணுங்கி யழுதுசொல்வார் இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே துணையு மெனைமறந்து தூரநீர் போனதென்ன . விளக்கம் ========= மகாவிஷ்ணு, சிவலோகமாகிய கயிலாசத்திற்கு வந்து சேர்ந்த உடன் அங்கே சூழ்ந்திருந்த காரிருள் அகன்றது. சிவபெருமானோ மகாவிஷ்ணுவைக் கண்டதும் தம் குழந்தையைக் காணாமல் தவித்த தாய் அந்தக் குழந்தையைக் கண்டதும் அன்புப் பெருக்கால் அள்ளி அணைப்பதைப் போல் மகாவிஷ்ணுவைத் தம் மார்போடு அணைத்துக் கொண்டார். . பின்பு மாயவா, இத்தனை நாளும் நான் உம்மைக் காணாமல் பெற்றவளைப் பிரிந்து வாடும் பிள்ளையைப் போல் ஆகிவிட்டேன். மழையைக் காணாத பயிரைப் போல் வதங்கிவிட்டேன். ஏரியைக் காணாத நீரைப் போன்று நிலை குலைந்து விட்டேன். தன்னுடைய இனத்தைப் பிரிந்து தனிமையாகிவிட்ட மானைப் போன்று உம்மைப் பிரிந்து நான் வாடுகிறேன். உம்மைத் தேடித் தேடி தக்க துணையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மகாவிஷ்ணுவை வாரி அணைத்துக் கொண்ட சிவபெருமான், தொடர்ந்து தம் துயரத்தை வெளிப்படுத்துகிறார். . மைத்துனரே இணை பிரியாத புறாவைப் போன்று நாம் இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருந்தோமே… உமது துணையாகிய என்னை மறந்துவிட்டு நீர் வெகுதூரம் வெல்வதற்குக் காரணமென்ன? . . அகிலம் ======= என்னைவிட்டு நீரும் எழுந்தருளு மன்றுமுதல் வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன் துணையிழந்த அன்றிலைப்போல் தினமு முமைத்தேடிக் கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே உயிர்த்தோ ழமைபோல் உறவுகொண்ட நாரணரே மெய்த்தோ ழமையை விட்டுப் பிரிந்தமுதல் பிரிந்து மலைத்தேன் பச்சை நிறமாலே சரிந்துபள்ளி கொண்டு சதாவருட மாச்சுதல்லலோ இத்தனைநாளும் என்னைமிகப் பாராமல் மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன கயிலைக்கு மென்றனக்கும் கட்டான மந்திரிதான் அகில மீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான் நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே தானீ தமான சர்வபர நாரணரே இந்த விதமாய் இகபர விதத்தோடும் உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ . விளக்கம் ========= நீர் என்னை விட்டுப் பிரிந்த நாள் முதலாய் உமயவளைக் கூட நான் பார்க்கவில்லை. ஒன்றை ஒன்று பிரியாத அன்றில் பறவை, அதில் ஒன்றை இழந்து தவிப்பதுபோல், கணவனை இழந்த மனைவியைப் போல் இத்தனை நாளும் கலக்கமுடன் காத்திருந்தேன். . உயிர்த் தோழனைப்போல் உன்னிடம் உறவு கொண்ட நாராணரே, நீர் என்னை விட்டுப் பிரிந்த நாள் முதலாய் என்னுடைய மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நான் நித்திரையில் ஆழந்து நூறு வருடமாகி விட்டது. . எனக்கும் பிரம்மதேவருக்கும் மத்தியில் நடுநாயகமாய் இருந்து சித்தமாய் செயல்படுகின்றவரே நீர் என்னை விட்டுப் பிரிவதற்குக் காரணந்தான் என்ன? கயிலாசத்திற்கும் எனக்கும் ஏன் பதினான்கு லோகங்களையும் ஆளுகின்ற மந்திரியே, நீர் இல்லாமல் அச்செயலை எவரால் செய்ய இயலும். இகபர தவஞ் செய்தல்லவா நான் உம்மை அடைந்தேன். . . அகிலம் ======= அப்படியே நீரும் ஆதிநா ராயணராய் முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும் ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும் கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர் மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும் வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும் நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும் இப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக் கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல் சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம் எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும் வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச் செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது எல்லா முமது இச்சையது போல்நடத்தும் சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப் பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை . விளக்கம் ========= என்னுடைய இகபர தவத்தின்படியே ஆதி நாராயணராய் தோன்றி வந்த மாயவனே, கயிலை வாசிகளான தேவாதிகளும், மகாலட்சுமியும், வேத விற்பனர்களும், உற்ற ரிஷிபுங்கவர்களும், கின்னரர்களும், கிம்புருடர்களும், கேதாரர்களும், மன்னர்களும், மாமுனிவர்களும், நான்கு வேதங்களும், சாஸ்திரங்களும், பிரம்மாவும், நந்தியும் விதவிதமான பல சித்தர்களும், இப்படி மேலோகத்திலுள்ள அனைவருடைய ஆலோசனைகளையும் கேட்டு என்னுடைய காலில் நானே கல்லை இழுத்துப் போட்டதுபோல் கலியைப் படைத்துவிட்டு அதனால் ஆன அனைத்துத் துன்பங்களையும் அணுபவித்துவிட்டேன். . வல்லவனே உம்முடைய ஆலோசனையைக் கேளாமல் கலியனைப் பிறவி செய்ததால் அதைப்பற்றி உம்மிடம் சொல்லவே எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இதனால் சத்தியத்தையே நித்தியமாகக் கொண்ட தாங்கள் என்மீது சினங்கொள்ள வேண்டாம். . இனிமேல் நடப்பவை யாவும் உம்முடைய விருப்ப்படியே நடத்தும், இந்த உலகத்தை உம்முடைய சொல் ஒன்றுக்குள்ளாக்கி தன்னிகரில்லாத் தர்மத் திருமுடி சூட்டி ஆட்சிபுரியும் என்று மகாவிஷ்ணுவின் மனம் மகிழும்படியாக பாலினுள்ளிருக்கும் மோர்போன்று மகாவிஷ்ணுவின் மனதிற்குள் உறைந்த சிவபெருமான் கூறினார். . . அகிலம் ======= அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார் எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள் முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால் பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப் பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண் யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில் சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும் மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில் இனிதிருக்கும் போது என்னை நினையாமல் மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார் . விளக்கம் ========= அதைக் கேட்ட மகாவிஷ்ணு சிவபெருமானைப் பார்த்துச் சொல்லுகிறார் மைத்துனரே, எப்போதும் உமக்கு இதே வழக்கமாகிவிட்டது. நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரமெடுத்து உம்மால் உருவாக்கப்படுகின்ற அரக்கர்களை ஒரு சாதாரண வேடனைப் போல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறேனே அதைப் பற்றி நீங்கள் என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? . பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் உம்மால் உருவாக்கப்பட்ட குறோணி, பிறகு துரியோதனனாகப் பிறந்து அவன் சாகும் வரையில் நிகழ்ந்த ஆறு யுகத்திலும் அந்தக் குறோணியின் உயிரைக் கொல்வதற்கு நான் பட்ட பாடென்னவென்று உங்களுக்குத் தெரியுமா? . நான்பட்ட அந்த துன்பங்களை வேறு யாராலும் அனுபவிக்க முடியாது. எனவேதான் இத்தனை யுகங்களிலும் அனுபவித்த வேதனைகள் போதுமென்றெண்ணி, இனிமேல் எந்த பகையும் இல்லாமல் இருப்பதற்காக தேவலோகத்தவர்களில் ஏழுபேரைத் தேர்ந்தெடுத்து, அயோக அமிர்த கங்கையருகில் நான் அனலாகி நின்று, ஏழு தேவமாதர்கள் மூலமாக ஏழு பிள்ளைகளை என் மகவாய்ப் பெற்றெடுத்து, நாம் எல்லாரும் ஒருமித்திருந்து உற்ற பெயரிட்டு, வல்லோராய் வாழுங்கள் என்று வரங்கொடுத்து வைத்துவிட்டு, இனிமேல் நமக்கு தொல்லைகளே இல்லை என்று நான் ஸ்ரீரங்க மாபதியில் களைப்பாறிக் கொண்டிருக்கும் போது, என்னை எள்ளளவும் எண்ணிப் பார்க்காமல் அந்த கபடமான கலிநீசனைப் பூமியிலே ஏன் படைத்தீர்? என்றார். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚