D Muthu Prakash, Kanchipuram 💐
552 views
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி சம்பூரணத் தேவனும் பரதேவதையும் தவமிருத்தல் ==================== என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால் வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல் தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல் நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம் அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான் பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும் நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார் . விளக்கம் ========= என்னுடைன் பரதேவதையைச் சேர்த்து வையுங்கள் என்ற என்னுடைய கோரிக்கைக்கு, இனித் தாங்கள் மறுப்புச் சொல்ல வேண்டாம் சுவாமி என்று சம்பூரணத் தேவன் மகாவிஷ்ணுவிடம் சொன்னதுமே, மகாவிஷ்ணு, சம்பூரணனைப் பார்த்துச் சொல்லுகிறார், தேவா என் பேச்சை ஏற்க நீ மறுக்கிறாய். என்னுடைய புத்திமதிகளை உன் மனது ஒத்துக் கொள்ளவில்லை. தாழ்ந்த நிலையுடைய அந்தப் பெண்ணை மேல்நிலைக்கு உயர்வடையச் செய்ய வேண்டுமென்றால் யானையைப் போன்று மதம் பிடித்துள்ள நீ கடுமையாகத் தவஞ்செய்ய வேண்டும். . அதுமட்டுமல்ல நீ தவஞ்செய்வதைப் போல், தன்னை மேல்நிலைக்கு உயர்த்தும்படி வேண்டி, பரதேவதையையம் கடுந்தவஞ் செய்யச் சொல். இப்படி நீங்கள் இருவரும் கடுமையாகத் தவம் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் இருவரும் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று தவமிருக்கும் போது, நீங்கள் செய்யும் தவத்தில் நினைத்தவை எல்லாம் உங்களுக்கு அருள்பாலிப்பேன் என்றார். . மகாவிஷ்ணு அவ்வாறு சொன்னதால், சம்பூரணத் தேவனின் மனம் சந்தோசமடைந்தது. உடனே மகாவிஷ்ணுவிடம் சுவாமி தாங்கள் சொன்னபடியே நாங்கள் இருவரும் தவம் செய்கிறோம் என்று சொல்லி மகாவிஷ்ணுவை வணங்கி விடைபெற்று, பரதேவதையையும் அழைத்துக்கொண்டு, இறைவனை நினைத்துப் பிரம்ம மந்திரத்தைச் செபித்து இறைவனே தஞ்சமென இணைந்து தவம் செய்யலானார்கள். . அகிலம் ======= எமலோகத்தார் மனுப்பிறப்பு =========================== அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும் ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத் தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார் உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால் ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர் இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில் போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில் இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார் . விளக்கம் ========= சம்பூரணத்தேவன், பரதேவதை தவத்திற்கு வழிவகை உரைத்த மகாவிஷ்ணு அடுத்தபடியாக எமலோக வாசிகளான தபோதனர்களை எல்லாம் அழைத்து, தபோதனர்களே நான் உங்களை இங்கே அழைத்ததின் நோக்கத்தை அறிவீர்கள். இது பற்றிய உங்கள் கருத்துக்கள் ஏதேனுமிருந்தால் சொல்லுங்கள். இல்லையேல், நீங்கள் வாசம் செய்து கொண்டிருக்கும் எமலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்னுடைய பிள்ளைகளாகப் பூலோகத்தில் பிறந்து வளர்ந்து பெருகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிதிர் வழியில் நீங்களெல்லாம் பிறந்து மானமுள்ள மனிதர்களாக வாழவேண்டும். . பூலோகத்தில் பிறக்கும் உங்களுக்கு இறப்பு வரும். அதன்படி இறந்து பிறந்தாலும் அதே சான்றோர்களாகவே பிறப்பீர்கள். என்றாலும் உங்களை அணுகி இருப்போருக்கெல்லாம் நீங்கள் ஏதாவது ஒர் இடையூறு செய்து கொண்டே வாழ்வீர்கள். ஆயினும் சான்றோர்களின் உதவியால் இருளகன்று வாழுவீர்கள் என்று கூறி எமலோக வித்தில் பிறந்த சான்றோரின் வழிக்குலத்தில் பிறவி செய்தார். . . அகிலம் ======= சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு ==================================== சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால் இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய் வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால் காலக் கலிதான் கட்டழித் தென்மகவு மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால் நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில் மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய் வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம் நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம் போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு . விளக்கம் ========= எமலோக வாசிகளையெல்லாம் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறக்க வழிவகுத்த மகாவிஷ்ணு, அடுத்து, சொர்க்க லோகத்தாரையெல்லாம் அழைத்து, மேலவர்களே நீங்கள் யாவரும் பூலோகத்தில் மனுக்குலத்தில் பிறக்க வேண்டியுள்ளது. அதில் உங்களுக்கு ஏதேனும் அபிப்பிராய பேதம் உள்ளதானால் சொல்லுங்கள். . நீங்களெல்லாம் நான் பூலோகத்தில் அவதாரம் மேற்கொள்ளும் போதெல்லாம் என்னைப் பூரணமாக நம்பி என்னோடு பூலோகத்தில் பிறந்து, எனக்குப் பின்னால் நின்று எனக்குப் பல வகையில் சேவை செய்துள்ளீர்கள். ஆகவே உங்களோடுள்ள வானவரில் ஒருவரை என் மகவாகப் பூலோகத்தில் பெற்று வளர்ந்துப் பெருகச் செய்துள்ளேன். அவர்கள் சான்றோராகப் பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். . காலத்தின் கட்டாயத்தால் கட்டுக்கடங்காமல் காட்டாட்சி புரிந்து கொண்டிருக்கும் கலியை, என்மக்களாகப் பிறந்து சான்றோர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் மூலமாகக் கருவறுத்து, உங்களை மேல் யுகமான தர்மயுகத்தை ஆளவைக்க நான் நிச்சயித்து இருப்பதினால், நீங்களும் பூலோகத்தில் பிறந்திருக்கும் வானுலக வாசிகளான உங்களுடைய வழியில் மங்களமாய்ப் பிறந்து என்னுடைய பிள்ளைகளாக வாழுங்கள். . அப்படி நீங்கள் வாழுகின்றபோது நான் உங்களிடம் வருவேன். ஆகவே, தினந்தோறும் என் மனம் மகிழும்படியான நற்பணிகளை நீங்கள் எப்போதும் செய்துகொண்டே இருங்கள். உங்களுடைய சேவைகளைக் கணக்கெடுத்து, அதற்கேற்ப உங்களைப் பாதுகாத்து ஆட்கொள்வேனென்று கூறிச் சொர்க்க லோகத்தாரைப் பூலோகப் பிறவிக்கு அருள்பாலித்தார். . . தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩