#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
காளிதேவியின் சிறைவாசத்தால் வாதை, பேய்கள் புலம்பல்.
========================
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண்
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும்
மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும்
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும்
இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க
.
விளக்கம்
=========
காளிதேவிக்கு சிறைவாசம் ஏற்பட்ட செய்தி, கூளிகணங்கள், வாதை, மற்றும் பெய்களுக்கெல்லாம் தெரிந்தது. ஆகவே, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்த கூளி கணங்களும். வாதைகளும், பேய்களும் காளியின் சிறை வாசத்தை நினைத்து அஞ்சின.
.
சகல வல்லமைகளும் உள்ள காளி நாச்சியாருக்கே சிறை வாசம் சிக்கியுள்ளது என்றால், இனிமேல் நமக்கெல்லாம் என்னென்ன இன்னல்கள் ஏற்படப் பொகிறதோ என்று வருந்திப் புலம்பின. இன்னும் சில பேய்கள், கேச்சி, கேசி சூதகன், கேசிகை என்று போற்றப்படுகின்ற மகாவிஷ்ணுவின் மாய்கையினால் பேய் உலகிற்கு பேரழிவு ஏற்படப் போவதை நினைத்து நினைத்து நிலைகுலைந்தன.
.
இயல்பாகவே வலிமையும் மூர்கத்தனமும் உள்ள சில, மூளிப் பேய்களோ, காளி சிறையில் அகப்பட்டு விட்டதால் இனி நாம் நமது மனம் போல் செயல்படலாம் என்று கூவி ஊளையிட்டுக் கொண்டாடித் திரிந்தன. இவ்வண்ணமாக பேய்கிள்ன நிலைப்பாடும் காளிதேவியின் சிறைவாசமும் அமைந்திருந்தது.
.
.
அகிலம்
========
கலியை அழிப்பது பற்றி சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஆலோசித்தல்
==========================================================================
நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை
வல்லப் பொருளே மறைகாணா தோவியமே
காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும்
முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப்
பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே
சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே
உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே
கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க
ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே
தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து
வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள்
நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி
.
விளக்கம்
=========
அப்படியிருக்க, மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பார்த்து, அனைத்து வல்லமையும் உடைய அரும்பொருளே ! வேதங்களாலும் விரித்து உரைக்க முடியாத சித்திரமே ! காளிதேவிக்கே இவ்வாறு கடுமையான சிறையில் கவிழ்ந்து இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாலும், இனி இந்தக் கடல் சூழ்ந்த வையகத்தில் யாருக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய முடியும்.
இந்த உலகத்தை வியாபித்திருக்கும் கலியாகிய மாய்கையைக் கரைத்து ஒழிப்பதற்கு முதன்மை வகிக்க வேண்டிய பத்திரகாளியே கடுமையான அக்கினிச் சிறையில் அடைந்திருக்கும் நிலையில் நாம் கலியை அழிப்பதற்கு எந்த உபாயமும் செய்யாமல், இங்கே அமைதியாகக் கலியின் செயல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நல்லதல்ல.
.
ஆகவே, கலியை அழிப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சகல வலிமையும் உடைய சிவபெருமானே நீர்தான் சொல்லவேண்டும் என்று மகாவிஷ்ணு சிவபெருமானிடம் வேண்டினார்.
.
மகாவிஷ்ணுவின் உரையில் உறைந்திருந்த உட்கருத்தினை உணர்ந்த சிவபெருமானோ, மகாவிஷ்ணுவைப் பார்த்து, மைத்துனரே, என்னோடு கலியை அழிப்பதைப் பற்றி பேசவேண்டுமே என்று கடனைக் கழிப்பதற்காக இத்தகைய கலவரமான உரையாடலை நடத்துகிறீரா?
.
இந்த உலகத்தையே உருக்குலைத்துக் கொண்டிருக்கும் சூதகமான கலியை அழிக்கக்கூடாது என்று நானா தடுத்துக் கொண்டிருக்கிறேன். கலியை அழிப்பது பற்றி என்னோடு ஏன் கலந்துரையாட வேண்டும்?
.
கலியை அழித்து எங்களுக்குகெல்லாம் எப்போது நற்கதி அருள்வீர் என்று நாங்களெல்லாம் நினைத்து நினைத்துச் சோர்ந்து போய் இருக்கிறோம். உலகத்தை கவ்விப் பிடித்திருக்கும் கலியாகிய அழுக்கைத் துடைத்து தெய்வத்தெளிவும், சிறப்பும் அருளி எமது இருப்பிடமாகிய கயிலையை எப்பொழுது தூய்மைப் படுத்துவீர் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறேன்.
.
நான் இத்தகைய ஏக்கங்களோடு தவித்துக் கொண்டு இருப்பதையும், அத்தனை தவிப்பையும் அடக்கிக் கொண்டு சந்தோசமாக இருப்பதுபோல் காட்சியளிப்பதையும் நீர் அறியவில்லையா? என்று சிவபெருமான் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட மகாவிஷ்ணு எல்லாம் உங்கள் எண்ணப்படி நல்லதாகவே நடக்கும் என்று மனமகிழ்ச்சியோடு கூறினார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.