D Muthu Prakash, Kanchipuram 💐
699 views
6 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 30.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம் கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை மிகுத்துக் கட்டுவார்களென்றும், இன்னுஞ்சிறிது நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும் துர்ச்சனராயிருக் கிறபேர்களும் வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மாண்டுபோவார்கள், போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு சர்வபாக்கியத்திலே யடைவார்கள். . விளக்கம் ========= காவேரி ஆற்றுத் தண்ணீர் காரணமாகப் பிரச்சினை உண்டாகும். அது நீண்டகாலச் சண்டையாக நீடிக்கும். அதில் பெருமளவில் ஆடவர்கள் இறப்பார்கள். அதனால் சுமங்கலிகள் மூன்று மூட்டை அளவிலான திருமாங்கலியங்களை இழக்க நேரிடும். அதன் பிறகே அந்தக் காவேரிப் பிரச்சனை அடங்கும் என்றும். . பூலோகத்தில் ஏழு பெண்கள் ஒரு ஆடவனை நெருங்கி நேசிப்பர் என்றும், பெருவாரியான விதவைப் பெண்களுக்கு மறுமணம் நடைபெறும் என்றும், . இன்னும் கொஞ்ச காலத்தில் ஏன்? எதற்கு? எப்படி என்று சிந்தித்து அதற்கு விடைகண்டு நல்வழியல் வாழத் தவறுபவர்களும், பஞ்சமா பாதகங்களைக் கூட அஞ்சாமல் செய்கிறவர்களும், ஆன்மிகம், அரசியல் போன்று மக்கள் சேவைக்குரிய மகத்தான செயல்களை எல்லாம் வியாபாரமாக்கித் தம் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருப்பவர்களும் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மாண்டு போவார்கள் என்றும், . போனவர்கள் போக எஞ்சி இருக்கிறவர்களெல்லாம் நல்ல ஒழுக்கங்களை அறிவுப்பர்வமாகக் கடைப்பிடித்துக் கொண்டு, மேலோனின் அருளோடு புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, இளமை, பெருமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு பாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள். . அகிலம் ======== மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம். அதினால் மானிடரெல்லாம் உறழ்ந்து உட்கொள்ளைப் பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும். . விளக்கம் ========= அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாலம் என்று ஏழு கீழ் உலகமும். பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகலோகம், சத்தியலோகம் என்று ஏழு மேல் லோகமும் உள்ளன. இவற்றில் மூன்று லோகத்திற்கு ஒரு வால்வெள்ளி வீதம் உண்டாக்கி அழிவை ஏற்படுத்த இருக்கிறோம். . அதனால் மானிடரெல்லாம் ஆன்மிகம் மற்றும் அரசியலால் வேறுபட்டு, ஒருவர்க்கொருவர் பகையாகி, அவரவரே தம்மைப் பலப்படுத்திக்கொள்வதற்காகவும். பாமர மக்களை நம்ப வைப்பதற்காகவும் நல்லவன் போல் நடித்து உட்கொள்ளையும், தம்மை எதிர்த்தால் யாரும் வாழமுடியாது என மிரட்டிப் புறக் கொள்ளையுமடிப்பார்கள் என்பது எமக்குத் திட்டவட்டமாகத் தெரியும். . உள்ளுறை மறைபொருள் விளக்கம். -------------------------------------------------------- விண்மீன் எனப்படும் நட்சத்திரங்களை கிராமப்புற மக்கள் வெள்ளி என்று சொல்வதுண்டு, விண்ணில் இருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களில் ஏதோ ஒன்று திடீரென்று மண்ணை நோக்கி வருவதைப் போல் சில காலங்களில் தென்படும். கிராமப் புற மக்கள் வால்வெள்ளி என்று சொல்வதோடு, அதைப் பார்த்தவர்களுக்கு உடுக்கத் துணி கிடைக்காது என்றும், அப்பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பேரழிவு உண்டாகப் போகிறது என்றும் குறிப்பிடுவர். விஞ்ஞானிகளோ நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் உண்டாகும் நெருப்புச் சிதறல் என்று குறிப்பிடகின்றனர். எப்படி இருப்பினும் அத்தகு வால்வெள்ளியின் தோற்றம் அப்பகுதியின் அழிவை முன்னறிவிப்பு செய்வதே ஆகும். அப்படியிருக்க மூன்று லோகத்திற்கு ஒரு வால்வெள்ளி என்பது பிரபஞ்சத்தில் ஐந்தில் ஒரு பாகத்திற்குத் தெரியும் என்பது தெளிவு. அது மனித அறிவில் இறைவன் இருந்து செய்யப்படுகின்ற அக்கினி அஸ்திரங்களாகக் கூட இருக்கலாம். . அகிலம் ======== நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே பண்டார வேசமாய் வருகிறோம். நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும், மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும், அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். போனபேர்கள் போக இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். . விளக்கம் ========= பூலோகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற பஞ்சாமிர்தம் போன்ற குணத்தினை அகமே கொண்டுள்ள கலியுகத்தின் ஆளுகைக்குள் யாம் ஒரு சாதாரண சாமியாரைப் போல் வேடம் புனைந்து வருகிறோம். . எமது அந்த வருகை மண்ணகத்தையே தன்னகமாக்க வேண்டும் என்றெண்ணம் ஆணவக்காரர்களுக்கும், மலையளவு பொருள் குவித்து மாயைக்குள் மயங்கிக் கிடப்போருக்கும், வானளவு இன்பத்தை வகைவகையாய் அனுபவித்துக் கொண்டிருக்கும் காமுகர்களுக்கும் அளவிலடங்காத அதிர்ச்சியாகவே இருக்கும். . அந்த அதிர்சியிலிருந்து மீளவே முடியாமல், ஆணவம், மாயை காமியம் ஆகிய முக்குற்றத்துள் மூழ்கிய பெருவாரியான துஸ்டர்கள் அழிந்து போவார்கள். அப்படி அழிந்தொழிந்தவர்கள் போக எஞ்சி இருப்போரெல்லாம் புண்ணியவானகளாகளே இருப்பார்கள். . உள்ளுறை மறைபொருள் விளக்கம் -------------------------------------------------------- கலியுகமானது பஞ்சாமிர்தத்தின் குணத்தை உடையது. பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து அமிர்தம். அவை யாதெனில் பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகியவையாகும். அவை அளவுக்கு அதிகமாக அருந்தினால் அருந்தியோருக்கு அதுவே நஞ்சாகிவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. அத்துடன் இவற்றை அவற்றிற்கு இணக்கமான பக்குவ முறையில் பயன்படுத்தாமல் சற்றுக் கவனக்குறைவாகப் பயன்படுத்தினாலும், கையாண்டாலும் அதனதன் தனித் தன்மையை இழந்துவிடும். அதாவது கெட்டுப்போய்விடும். . கெட்டுப்போனபின் அவற்றை உண்டால், உண்டவருக்கும் உடல் உபாதைகளை உண்டாக்கும். அதாவது பஞ்சாமிர்தம் சுவையாக இருக்கிறதே என்று அதிகமாகச் சாப்பிட்டாலும் விஷமாகிவிடும். பயன்படுத்தத் தெரியாமல் அதன் பக்குவம் தவறிப் பயன்படுத்தினாலும் பாழாகிவிடும். பாழ்பட்ட உணவு விஷமாகிவிட்டது என்று தெரியாமல் பருகுவோரையும் பாழாக்கிவிடும். . அந்தப் பஞ்சாமிர்தத்தின் தன்மையை உடையதுதான் இந்தக் கலியுகம். கலியின் குணம் மிகவும் விஷமமானது. அது போலித்தனத்தை விரும்புவது. கள்ளம். கபடம், சூழ்ச்சி, போன்றத் தீயசெயல்கள் யாவும் கலிக்குக் கைவந்த கலை. . எனவே, அந்தக் கலியுகத்தின் தன்மைக்கு ஏற்ப, அது அழைக்கும் பாதையில் போகாமல் ஈடுபடாமல், நீதி, நியாயம், தர்மம், உண்மை. ஒழுக்கம் போன்ற உயர் பண்புகளில் மனதைச் செலுத்தினாலோ, வாழ நினைத்தாலோ அவர்களைப் பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாக்கி உருக்குலைக்கும் இயல்பையும், அந்தக் கலியோடு கலியாக ஐக்கியமாவோரை அனைத்து சுகங்களையும் கொடுத்து இறுதியல் இருந்த இடமே தெரியாமல் ஆக்கும் தன்மையையும் உடையது கலியுகம். ஆகவே தான் பஞ்சாமிர்தத்தைக் கலியுகத்தோடு ஒப்பிடுகிறது இந்தத் திருவாசகம். . . அகிலம் ======== மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும். வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச் சட்டுத்தீர்ந்து போவார்கள். . விளக்கம் ========= மந்திரத்தால் மற்றோருக்குக் கேடு செய்வதும், தந்திரத்தால் மாற்றானை மதியிழக்கச் செய்வதும் மற்றும் மருத்துவப் பரிகாரங்களும் யாருக்குமே தேவையில்லாமல் மறைந்து யோய்விடும். . மக்களை வருந்தச் செய்யும் வாதை எனப்படும் துன்பங்களும் நோய் நொம்பலங்களும். பேய் பிசாசு என்று கருதப்படுகின்ற மதி மயக்கப் பிதற்றல்களும், உடலை ஆட்டும் உபாதைகளும் உயர்வான ஞான வளர்ச்சியகளால் அழிந்து முடிந்து போய் விடும். . திருவாகத் தொகுப்புரை. ======================= உலகத்தில் உயிரினங்கள் அடங்கலாக உண்டானவை அனைத்தும் அறிந்து கொள்ளும் பொருட்டு, கலியுகத்தின் இயல்பையும். அதனால் உண்டாகவுள்ள அவலமான பாதிப்புகளையும், அந்தப் பாதிப்புகிள்ன பிரதிபலிப்பினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் மற்றும விஞ்ஞான வளர்ச்சியினால் உண்டாகும் அபாயங்களையும், நல்லோருக்கும் தீயோருக்கும் ஏற்படவிருக்கும் நன்மை, தீமைகளையும், மூவாதிமூவரும், மூப்பெருந்தேவியரும், தேவாதி தேவர்களும், ஏனையோரும் அமர்ந்திருக்கும் தேவசபையில் வைத்து, சொல்லின் செல்வி சரசுபதிதேவி அச்சபையோரின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து, அதைத் தம் திருவாய் மலர்ந்து ரத்தினச் சுருக்கமாகச் சொல்லச் சொல்ல, மாயோனாகிய மகாவிஷ்ணு தம் திருக்கரத்தால் எழுதிய திருவாசகச் செய்திகள் இதுவரை இங்கே இம் பெற்றிருந்தன. . இதற்குமேல் இந்த் திருவாசகத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் யாவும், இடறான இந்தக் கலியுகத்தில் இருப்போரெல்லாம் கலியிலிருந்து கடைத்தேறுவதற்கான உபாயங்கள், இந்த உபாயங்களைக் கடைப்பிடித்து வாழத் தெரியாதவர்களுக்கு ஏற்படவுள்ள தண்டனை மற்றும் இறைவனின் வைகுண்ட அவதார வரவு பற்றிய முன்னறிவு ஆகியவையாகும். . தொடரும்... அய்யா உண்டு.