#sirappaana Eduthurayppu.
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: நல்லறத்தைக் கொண்டு பிறருக்கு நன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைந்து விடுகிறார்கள். பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் சிலர் பொருள், புகழ், செல்வாக்கு பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன சுவாமிஜி?
பதில்: வினைப்பயன் என்ற அளவில் பார்த்தால் பாரம்பரிய பதிவின் காரணமாகச் சிலர் நீண்ட நாள் வாழ கூடியவர்களாக இருக்கிறார்கள் .அவர்களுடைய முன்னோர்கள் 80, 90 வயது வரை வாழ்ந்திருப்பார்கள்.
அதற்கு மேலும் சிலர் தம்முடைய முயற்சியாலும், ஒழுக்கத்தாலும் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதும் உண்டு. உயிரைப் போக்கும் அளவுக்குக் கடுமையான நோய் வந்தால் ஒழிய அவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள்.
சிலர் பணம், புகழ், பெற்று நீண்ட நாள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் பொறாமையால் சொல்வது. பணமும் புகழும் உடையவர் மனதில் அமைதி இருக்கின்றதா? உடலில் சுகம் இருக்கிறதா? இரவில் தூக்கம் வருகின்றதா? அவற்றைக் காத்துக் கொள்ள அவர் எவ்வளவு துன்பப்படுகிறார். இதெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது.
அதை அறிந்து கொள்ளாமல், இரண்டு கார் வைத்துள்ளார் என்பது மட்டும்தான் வெளியில் தெரியும். வெளியிலிருந்து பார்க்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல்தான் தோன்றும். மேலும் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும் ஒருவர் பொருளோடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் புகழோடு இருக்க முடியாது.
நேரில் புகழ்வதுபோல் நடிப்பவரும் அவரைக் காணாத இடத்தில் அவரை இழிவாகப் பேசுவார். மேலும் ஆயுள் நீளத்தைக் கொண்டோ, பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவற்றைக் கொண்டோ ஒருவர் புண்ணியவான் என்று நினைப்பது ஒரு மயக்கமே.
நல்லறத்தைக் கைக்கொண்டு நன்மையே செய்து வாழும் ஒருவர் துன்பப்படுவதன் மூலம் தன் பாவப் பதிவுகளை விரைவில் போக்கிவிடுகிறார். அந்த அளவில் மனம் அமைதி பெறுகிறது. மரணத்தைப்பற்றி அவர் கவலைப் படுவதில்லை.
இறைநிலை எய்த வேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருக்கும். அத்தகைய ஒருவர் மரணம் என்ற பெயரிலே இவ்வுலக வாழ்வை நீப்பது இயல்புதானே ஒழிய வேறில்லை.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹