#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
சிவசிவா வென்றுதவம் செய்தவர்கள் நிற்கையிலே
தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய்
அவட மெழுந்தருளி அங்கேகும் வேளையிலே
தெய்வேந் திரனும் திருமுடி யுஞ்சூடி
மையேந்திர னுடைய மலர்பாதங் காணவென்று
அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே
.
விளக்கம்
=========
அவர்கள் சிவ சிவ என்று தவம் செய்து கொண்டு நிற்கின்ற வேளையில், அவர்களுடைய தவத்தின் நிலையைப் பார்ப்பதற்காக ஈசரும் நீவிரும் அங்கு எழுந்தருள வேண்டிப் போகும் சமயம், தெய்வேந்திரன், உம்முடைய திருமுடியைப் போன்ற ஒரு திருமுடியைச் சூடிக் கொண்டு, ஈசரின் மலர்ப் பாதத்தைக் காண ஆசை கொண்டு, அவனும் அங்கு ஈசர் எதிரே வந்தான்.
.
.
அகிலம்
========
தவத்துக் கிடறு தான்வருவ தோராமல்
தேவன் மதிமயங்கித் திருமுடிமே லிச்சைகொண்டு
பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே
அதையறிந் திசுரருள் அன்றும்மு டனுரைத்தார்
இதையறிந் துநீரும் ஏற்றதேவ னோடுரைத்தீர்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
வளரும் பருவமதில் வந்துன்னை நானெடுத்து
இளவரசா யுன்னை ஈன்றெடுத் தேவளர்த்து
ஆளு மரசு அழகாக வுன்றனக்கு
நாளு மிகத்தருவேன் நம்மானை தப்பாதென
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்
.
விளக்கம்
=========
கடினப்பட்டுச் செய்த தமது தவத்துக்கு இடையூறு வருகிறது என்பது தோன்றாமல் சம்பூரணதேவன் தன் அறிவின் உண்மை நிலை புரியாது மயங்கித் தெய்வேந்திரனின் பொய்த் திருமுடிமேல் ஆசை கொண்டான். இது சம்பந்தமாகப் பரதேவதையிடம் யாரும் புரியாவண்ணம் மனத்தோடு மனதாகப் பேசி கொண்டான். அதை அறிந்து கொண்ட ஈசர், அன்று உம்மிடம் அதைத் தெரிவித்தார். அதை அறிந்து நீர் தேவனை நோக்கி, கைமேல் பலனாக வாய்ந்த தவம் சிதறிப் பலன் பெறாமல் நின்ற காரணத்தால், பூவுலகில் என் குழந்தைகளாகிய சான்றோர் இனத்தில் உயர்வான தரும குலத்தில் நல்ல முறையில் நீ பிறப்பாய். அங்கு இப்பிறவித் தொல்லை எல்லாம் தீர்த்து, சூலில் உருவாகின்ற வினைகளை அறுத்து, பூவுலகில் வளருகின்ற சமயத்தில், அங்கு நான் வந்து இளவரசனாகிய உன்னை எடுத்து, என் குழந்தையாகப் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளுகின்ற அரசுப் பொறுப்பைச் சிறப்பாக உனக்குத் தருவேன். இது சத்தியம். என் மேல் ஆணை. இது தப்பாது என்று வாக்குறுதி சொல்லித் தேவனைச் சான்றோர் குலத்தில் பொறுமையுள்ள தரும வழியில் பிறவி செய்தீர்.
.
.
அகிலம்
========
மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
அதைப் போலப் பரதேவதையை அதே சான்றோர் குலத்தில் தந்திர குணம் வாய்ந்த எமவழியில் தோன்றச் செய்தீர். அய்யாவே, இப்படியாக இப்பூவுலகக் காரியங்களுக்காகப் பிறந்து வளர்ந்தது இச்சடலம் என்று முனிவர்கள் எரைத்து முடித்தனர்.
.
.
அகிலம்
========
விருத்தம்
==========
என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார்
.
விளக்கம்
=========
இப்படியாக அப்பொன்கூட்டுச் சடலத்தின் முந்தைய எல்லா விவரங்களையும் திருமாலிடம் முனிவர்கள் கூறினர். உடனே திருமால், இந்த விவரங்களை நீங்கள் கூறியது மிகவும் நல்ல காரியம் என்று கூறி அவர்கள் மேல் கருணை கொண்டு, இனி நீங்கள் சென்று அந்தச் சடலத்தை திருச்செந்தூர்பதி முழுவதும் கூட்டிச் சென்று அங்குள்ள தெருக்களை எல்லாம் சுற்றிக் காட்டி அவ்வுடலை நன்றாகக் குளிப்பாட்டி இங்கே கொண்டு வாருங்கள் என்றார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.