#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே
இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம்
அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ
.
விளக்கம்
=========
உயர்வான நோக்கத்தை நினையாது அழியப் போகின்றவர்கள் ஆணவம் பிடித்தவர்கள் என்பதை அறிந்து கொள். இத்தகைய மாற்றங்கள் உண்டாவது எல்லாம் உன் நல்ல காலத்திலே ஆகும் என்பதை அராய்ந்து அறிந்து வாழ்வாயாக.
.
.
அகிலம்
=======
இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று
மனதில் வேறெனவே வையாதே யென்மகனே
.
விளக்கம்
=========
எல்லா இனங்களிலும் நான் சுவாமியாகக் காட்சி அளிப்பேன். ஒவ்வொரு இனத்திலும் காட்சியளிக்கும் தெய்வப் பிரிவுகள் வேறு யாரோ என்று உன் மனத்துள் எண்ணி அத்தெய்வங்களை ஏளனமாகப் பேசி ஒதுக்கித் தள்ளாதே.
.
.
அகிலம்
=======
நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே
தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ
தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே
மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே
.
விளக்கம்
=========
நான்கு வேதங்களிலும் நானே பரம்பொருளாக் காட்சியளிப்பேன் என்பதையும் ஆய்ந்து அறிவாயாக.
சீருள்ள கண்மணியே, மாதவங்கள் செயதவனே, என் மகனே, பல மதத்தவரின் வேடங்களையும் புனைந்து கொண்டு உலகில் சுற்றித் திரிவேன். நீ மனம் மயக்கமுற்று வெவ்வேறு என்று எண்ணாதே.
.
.
அகிலம்
=======
அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து
எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே
.விளக்கம்
=========
அவரவர்கள் மனத்துக்கு ஏற்கும்படி இருந்து எல்லாரையும் கவனித்துக் கொண்டு உன்னிடமும் இருப்பேன்.
.
.
அகிலம்
=======
லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய்
தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும்
ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம்
தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது
மலையடி வாரம் வளருமொரு விருச்சம்
அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே
.
விளக்கம்
=========
அப்பொழுது உன் தெளிந்த மனத்தில் இலிங்கம் ஒன்று தோன்றும். அதே சமயம் அங்கே தங்க நவ ரத்தினங்களும் காட்சியளிக்கும். அப்போது உன் சீவன் தருமயுகத்துக்குரிய புத்தம் புதிய சீவனாகப் பரிணமிக்கும். அந்நிலையில் தருமயுகத்தை ஆளும் தலைவன் நீயே ஆவாய். மலை (ஆக்ஞா பகுதி) அடிவாரத்தில் வளருகின்ற மரம் ஒன்று இவ்வுலகத்தை விடப் பெரியதாகச் செழித்து வளரும்.
.
.
அகிலம்
=======
சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக
நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம்
வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து
நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே
.
விளக்கம்
=========
அச்சமயம் சிலை ஒன்று அதனுள்ளே தோன்றிச் சிவத்தோத்திர நிலையில் இணைந்து ஒன்றாக நீயாகி இருக்கும். அக்காலத்தில் நீ தருமயுகத்தை ஆள்வாய். அதுவே உன்னுடைய சிறந்த காலமாகும்.
பால் கடற்கரையில் மண்டபம் ஒன்று தோன்றும். பெண்கள் சூழ்ந்து வர நாடெல்லாம் சென்று ஒற்றுமையாக ஓர் ஆட்சிக்குள் உலகை ஆண்டு வருவாய். இதுவே உன் நற்காலம் ஆகும்.
.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு முடிவு பெற்றது.
.
.
தொடரும்… அய்யா உண்டு.