💘💞Par Tha💞💘
630 views
6 days ago
அரசியல் தலைவர்கள் சிலர் அண்மைக்காலமாகத் தங்கள் அறிக்கைகளையும் முகநூல் பதிவுகளையும் பேச்சுத் தமிழில் எழுதி வெளியிடுகின்றார்கள். பேச்சுத் தமிழ் என்பது பேச்சுக்கு மட்டுமானது. எல்லாவகையான ஒலிப்பு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு ஒலியாய் வெளிப்படுவது. ஓர் ஒலிக்கு உரிய ஒலிப்பளவில் கூடுதல் குறைதல் திரிதல் மறைதல் தொகுதல் என எல்லா வகையான வழக்கு எளிமைகளும் பேச்சு மொழியில் வெளிப்படும். ’வாருங்கள்’ என்னும் திருத்தமான சொல் ‘வாங்க’ என்று பேச்சுத் தமிழில் வெளிப்படும். வாங்க’ என்று பேச்சுத் தமிழில் ஒலிப்பது ‘வாருங்கள்’ என்ற திருத்தமான ஒலிப்புத்தான். வா என்பது ‘வரு’ என்று விகாரப்படும். வகர ரகர ஒலிகள் சேர்ந்த இணையமைப்பினால்தான் தமிழில் ‘வா’ எனப்படுவது தெலுங்கில் ‘ரா’ என்னும் சொல்லாகின்றது. வா என்பது வாகின்றான் என்றாகாமால் ‘வருகின்றான்’ என்று ஆவதும் இவ்விணையொலி இயல்பினால்தான். அதனால் ‘வாரு’ என்பதிலுள்ள இரண்டொலிகளையும் பேச்சில் சொல்லவேண்டியதில்லை. மறையவிடலாம். வெறுமனே வா என்று நிற்கலாம். சொல்லிறுதியில் ள் என்ற மெய் தோன்றுமானால் பேச்சு வழக்கில் அழுத்திச் சொல்லாமல் விட்டுவிடுகிறோம். மகள் => மக ஆவது இப்படித்தான். சொல்லுங்கள் => சொல்லுங்க ஆவது இப்படித்தான். அதனால் வாருங்கள் => வா(ரு)ங்க(ள்) => வாங்க என்று பேச்சுத் தமிழில் ஒலிக்கிறோம். போய்விட்டான் => போய்(வி)ட்டான் => போய்ட்டான். இங்கே வகர உயிர்மெய் மட்டும்தான் கெட்டது. ஏனென்றால் வகரமும் யகரமும் உடம்படு மெய்கள் ஆகுமளவுக்கு சொல்லிடையே தோன்றும் உயிரெழுத்துகளைப் போன்ற உயிர்மெய்கள். சொல்லிடையே தனி உயிரெழுத்து தனித்துத் தோன்றாது என்பதால்தான் வகரத்தை (வி) விடுத்துப் பேசுகிறோம். ஆடிற்று, ஓடிற்று, பூத்திற்று போன்ற கடுமையான எழுத்து வழக்குச் சொற்களை எப்போதும் திருத்தமாகச் சொல்ல முடியாமல் ஆடிருச்சு, ஓடிருச்சு, பூத்திருச்சு என்கிறோம். ஓடிட்டு, பூத்திட்டு எனப் பேச்சில் ஆள்பவர்களும் உளர். போகிற போக்கில் பேச்சு வழக்கினைக் கையாள்வதும் தவறு. பேச்சுக்குத்தான் இத்தகு ஒலிப்பு வாய்ப்புகள் அனைத்தும் தரப்படுமே தவிர, எழுதும்போது அச்சொற்களின் திருத்தமான வடிவத்தில்தான் எழுதிக் காட்டவேண்டும். பேச்சு வழக்கு உரைநடை இலக்கியத்தில் பேச்சின்படியே வழங்கப்படுவதேகூட பேச்சழகினைக் காட்டுவதற்காக எழுந்த சிறுபான்மையான முறைதான். அரிதாக ஆங்காங்கே பேச்சு வழக்குகளை எழுதிக் காட்டுவதில் யாரும் குறைகாணப்போவதில்லை. ஆனால், அதுவே தொடர்போக்கு ஆகுமானால் மிகவும் தவறு. மொழிப்பிழை. குழகுத் தலைமுறையினரைக் கவரவேண்டுமானால் பேச்சு வழக்கில் எழுதிக் காட்டுவதைவிடவும் இன்னும் எளிய நடையில் எழுதலாமே. ஆகவே, அரசியல் தலைவர்கள் ஒருபோதும் தங்கள் கருத்துகளைப் பேச்சுத் தமிழில் எழுதி வெளியிடாதீர்கள். கொச்சையில்லாமல், பிழையில்லாமல் உரியவாறு எழுத்துத் தமிழில் எழுதுங்கள். அல்லது பேசும் காணொளிகளை வெளியிடுங்கள். தங்கள் அறிக்கைகளிடையே ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதுவதும் தவிர்க்கப்படவேண்டியது. உரிய தமிழ்ச்சொற்களை ஆக்கி அவற்றுக்கான ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் இட்டு எழுதுங்கள். தங்கள் அறிக்கைகளையும் பதிவுகளையும் பேச்சு வழக்கில்தான் எழுதுவோம் என்று அடம் பிடிப்பார்களேயானால், ஒன்று சொல்கிறேன். அவற்றைக் கோவைப் பேச்சு வழக்கில் எழுதுங்களேன் - “ஏனுங்... செய்யறது கொஞ்சங்கூட நல்லால்லீங் பார்த்துக்கோங்” என்று எழுத இயலுமா ? நெல்லைப் பேச்சு வழக்கில், மதுரைப் பேச்சு வழக்கில் எழுத இயலுமா ? தமிழ் மொழியானது அதன் செம்மையான எழுத்து வடிவத்தில்தான் காலங்கடந்து வாழ்கிறது. பேச்சு வழக்கு பேச்சு வழக்கிற்கு மட்டும்தான் என்று உணர்க. அதனால்தான் பகுதிக்கொரு பேச்சு வழக்கு. ஆனால், எழுத்து வழக்கு எங்கெங்கும் ஒன்றே. எழுத்து வழக்கினையே ஆள்க ! #🤔தெரிந்து கொள்வோம்