#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
.
.
அகிலம்
=======
பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே
பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே
.
விளக்கம்
=========
பொறுமை என்னும் உயர்ந்த குணந்தான் மிகப் பெரிய தர்மம் ஆகும். கலியுக நாதனே, என் மகனே, நீ பொறுமையைக் கடைப்பிடித்தால் உன் மனதுக்கு உறுதி அதிகமாகும். பொறுமை மிகவும் பெரியது என்பதை அறிந்து இப்புவியை ஆட்சி புரிவாயாக.
.
.
அகிலம்
=======
கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ
.
விளக்கம்
==========
நாரணனாகிய என் மகனே, நான் உணர்த்திய சிறப்புகளை நீ அறிந்தாயா? காண்பதற்கு அரிய திருமாலின் மண்டபச் சிறப்புகளையும், மிகப்பழமையான தேரையும், பதியையும் நீ அறிந்தாயா?
.
.
அகிலம்
=======
தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே
.
விளக்கம்
=========
நாரணா, என் மகனே, நான் தேடித் தந்துள்ள இவ்விஞ்சைகள் மீது உன் நாட்டம் முழுவதும் இருக்க வேண்டும் மறவாதே என்று திருமால் உபதேசித்தார்.
.
.
அகிலம்
=======
அப்போது ஆதியுடன் அம்மகவு ஏதுரைக்கும்
இப்போது என்றனக்கு இத்தனையுஞ் சொன்னீரே
கலியுகத் தைமுடித்துக் கட்டானத் தர்மபதி
வலியுகத்தைக் காண்பதெப்போ மாதா பிதாவேயென்றார்
.
விளக்கம்
=========
விஞ்சைகளைக் கேட்ட வைகுண்டர், திருமாலை நோக்கி, என் பிதாவே, இப்பொழுது என்னிடம் இத்தனை உபதேசங்களையும் கூறி அருளினீரே, ஆனால், நான் கலியுகத்தை முடித்து, மிகவும் அழகான தருமபதி ஆகிய வலிமையான யுகத்தைக் காண்பது எப்பொழுது? என்று வினவினார்.
.
.
அகிலம்
=======
அப்போது மகனை ஆவிமுகத் தோடணைத்து
இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிடுநீ
.
விளக்கம்
=========
அப்போது திருமால் மகிழ்ச்சியுற்று மகனைக் கட்டிப் பிடித்து, தம் முகத்தோடு அணைத்து, என் மகனே, இனி நான் அது பற்றிச் சொல்லுகிறேன் நீ கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
=======
நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க
நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ
.
விளக்கம்
=========
நீ இங்கிருந்து போய்ச் சிறப்பு வாய்ந்த பூமியில் தவசு செய்து கொண்டிருக்கும்போது நான் உன் அகத்துக்குள் இருந்து நடத்துகின்ற நல்ல செயல்களின் நிலைமை பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக.
.
.
அகிலம்
=======
ஆயிரத் தெட்டு ஆனதிரு மண்டபத்தில்
வாயிதமா யாண்டொன்றில் வைத்தமண்ட பங்களிலே
நூற்றிப் பன்னிரண்டு நொடிப்பே னோராண்டதிலே
தோற்றுவிப்பே னார்க்கும் தூது மிகநடந்து
பத்தாண்டுக் குள்ளே பலசோதனை பார்த்து
வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே
.
விளக்கம்
=========
ஆயிரத்தெட்டாம் ஆண்டு உருவான மண்டபமாகிய உனது உடலில், சிறு சிறு மண்டபமாகிய உனது உறுப்புகளில் இருந்து கொண்டு, பன்னிரண்டு அங்குலம் நூற்றுக் கொண்டிருக்கும் உன் சுவாசத்தை சுவாசப் பயிற்சி மூலம் நூற்றுக் கட்டுப்படுத்தி, ஓர் ஆண்டுக்குள் அகத்தினுள்ளேயே அடங்கச் செய்து அதை நொடித்து விடுவேன். அதை தொடர்ந்து பத்து ஆண்டுக்குள்ளாகப் பல சோதனைகளைக் கண்டு வெற்றி கொள்வேன். பிறகு, உன் மூலமாக மக்களைத் தெளிவாக விசாரித்து நடுத்தீர்ப்பு செய்வேன்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.