#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும்
நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத்
தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான்
.
விளக்கம்
=========
பல கோடி பாவங்களைச் செய்தவர்களுக்கும் எல்லாரும் விரும்புகின்ற மோட்சம் கொடுக்க உன் மனம் நினைத்தால் கொடுக்க முடியும். அதைப் போல, பல கோடி தருமங்களை மகிழ்வோடு செய்த அன்பர்களைக் கோடிக்கணக்கான தீமையுள்ள நரகத்திற்கு அனுப்ப உன்மனம் நினைத்தால் அவர்களை நரகத்திற்கு அனுப்ப முடியும்.
.
.
அகிலம்
=======
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே
எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே
தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே
அப்படியே அய்யா அரிநாத னுமுரைக்க
.
விளக்கம்
=========
உன் மனம் ஏற்றுக் கொள்ளும்படி அன்பாக நின்றவர்க்கு உதவி செய்வதும் என் மனம் ஏற்றுக் கொள்ளும்படி இருப்பவர்களுக்கு நற்பேறு கொடுப்பதும், உன் மனதுபடியே ஆகும். தவத்தை முடித்ததும் சிவனும் நீ திருமாலும் நீயே, தவமும் நீயே, பிரம்மனும் நீயே, தேவ சங்கம் முதல் எல்லா இடமும் இருப்பதும் நீயே ஆவாய் என்று நாராயணர் சொல்லி முடித்தார்.
.
.
அகிலம்
=======
முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார்
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால்
வாறு மேலென்ன வகுப்பீர்கா ணையாவே
.
விளக்கம்
=========
உடனே, முப்பொருள்களும் அதிசயிக்கும் முதல்வனாகிய வைகுண்டர் மகிழ்ச்சி அடைந்து, அய்யாவே நான் ஆறு வருடங்கள் கடுமையான தவத்தை முடித்த பிறகு நடக்கப் போகும் காரியத்தை எடுத்துரைப்பீராக என்றார்.
.
.
அகிலம்
=======
அப்போது நாதன் அன்பா யகமகிழ்ந்து
செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே
அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால்
இதின்மேல் நடப்பு இயம்பக்கே ளென்மகனே
.
விளக்கம்
=========
அப்போது திருமால் அன்பாக மனம் மகிழ்ந்து, தமது செல்ல மகனை நோக்கிக் கூறலானார். மகனே, நீ ஆறு வருடங்கள் கடுமையான தவசு கழிந்து வெற்றி பெற்றால், அதற்கு மேல் நடக்கப் போகின்ற காரியங்களைக் கூறப் போகிறேன். கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
=======
இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி
மும்மூவ ருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
தானா னாய்நீயும் தலைவனும்நீ என்மகனே
சாணாரின் நாயகமே சாதித்தலை வன்நீயே
.
விளக்கம்
=========
இந்த மூன்று தவங்களையும் முறையாக நிறைவேற்றி மூவருக்கும் முதல்வனாய் நீ உருவாகி வந்தாயானால், பரம்பொருள் நீயே ஆகி, எல்லாருக்கும் தலைவன் நீயே ஆவாய். சான்றோர் இனத்துக்கும் தலைவன் நீயே ஆவாய் என்றார்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
எந்தப்படிநீ எண்ணி நினைத்த தெல்லாம்
அந்தப்படி செய்து அவனிதனி லேசிலநாள்
சொந்த விளையாட்டு தொல்புவியிற் கொண்டாடிச்
சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே
.
விளக்கம்
=========
எந்த வகையில் எல்லாம் நீ எண்ணுகின்றாயோ அந்த வகையில் எல்லாவற்றையும் செய்து முடித்து, இப்பூவுலகில் சிலகாலம் உனக்குரிய விளையாட்டுகளைச் செய்து மகிழ்ந்து நன்மை சிறிதும் குறையாவண்ணம் வாழ்ந்து வருவாயாக.
.
.
அகிலம்
=======
அதின் முன்னாக அன்னீத மாபாவி
ஏதுவினை செய்தாலும் எண்ணம்வையா தேமகனே
தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கிச்
சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக்
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமங் காட்டாதே
.
விளக்கம்
=========
இத்தவம் முடியும் வரை, நீசர்கள் எத்தவறு செய்தாலும் அதைப் பற்றி எண்ணாது தாழ்மையாய் உன் அறைக்குள்ளே பதுங்கி அதற்கு ஏற்ற மாதிரி சார்ந்து வாழ்ந்து வா. சிறிதுகூட கோபமான வார்த்தையைப் பேசாதே. கலகல என்று சிரிக்காதே. பாவச் செயலையும் பாவம் செய்பவரையும் கண் கொண்டு பார்க்காதே. யாரிடமும் உன்னுடைய சக்தியினைக் காட்டிவிடாதே.
.
.
அகிலம்
=======
ஆக்கிரம மெல்லாம் அடக்கியிரு என்மகனே
தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
.
விளக்கம்
=========
உன் சகலவிதச் சக்தியையும் உன்னுள்ளே அடக்கிக் கொண்டிரு. வறுமையாக உள்ளவனிடம் கூட சிறிதும் பகைமை கொள்ளளாதே. நான் உன்னருகே இருந்து உனக்குத் தீமை செய்பவர்களிடம் நியாயம் கேட்டுக் கொள்வேன்.
.
.
அகிலம்
=======
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே
.
விளக்கம்
=========
பொல்லாதவர்கள் எனினும் அவர்கள் உன்னைவிட்டு அகன்றிடும் அளவு பகைமை கொள்ளாதே. ஒருவர்க்கு ஏதிராகப் பேசாதே. வழக்குகளுக்கு ஒரு பக்கம் சார்ந்து நியாயம் சொல்லாதே.
.
.
அகிலம்
=======
சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
.
விளக்கம்
=========
நீ சொல்லுகின்ற சொற்களின் தன்மைகளை அறிந்து பேசுவாயாக. எல்லாவற்றையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பிறகே உன் முடிவை வெளிப்படுத்து.
.
.
அகிலம்
=======
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
.
விளக்கம்
=========
தருமத்தினை வளர்க்க வேண்டுமே அல்லாது அதைத் தடுக்க எவ்வகையிலும் நினைத்து விடாதே. எனக்குரிய சாணார் இனத்தினருடன் எத்துன்பமுற்றாலும் குறை காணாது மானம் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா.
.
.
அகிலம்
=======
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
.
விளக்கம்
=========
உன் மேல் அன்புடைய சான்றோர் இனம் ஞானம் பெறுவதற்காக மனம் வருந்தி இரு. சான்றோர்களுக்குத் தம்முள் ஞானம் உருவாகியதும் உன் வேலை முடிந்தது மகனே.
.
.
தொடரும்… அய்யா உண்டு.