#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடி
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு
தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
.
விளக்கம்
=========
கந்தன், ஒழுங்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்த தேவர்களையும் சிறப்பித்து வரவேற்று, அய்யா, பெரியோர்களே, வாருங்கள். என் மண்டபத்தில் உள்ள சிங்காசனங்களில் அமருங்கள். எனது கோவிலின் அலங்காரங்களை நீங்கள் பாருங்கள். நீங்கள் எல்லாரும் அமர்ந்து இளைப்பாற நிறைய தங்க மேடைகள் இங்கு உள்ளன. தங்களுடைய தங்கமலை போன்ற மலைகளும் இங்கு உள்ளன.
.
.
அகிலம்
========
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
.
விளக்கம்
=========
பாட்டினைப் பாடுவதற்கும் படிப்பதற்கும் சிறந்த பாவாணர்களும், நன்றாக ஆடிடவும் சிறந்த முத்திரைகளைக் கை மூலம் காட்டிடவும், நல்ல பெண்டிர்கள் இங்கு உள்ளனர். நீங்கள் அருந்துவதற்கு ஏற்றவகைப் பாலும் பழங்களும் உள்ளன. திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்கதும் கண்டு களிக்கத் தக்கதுமாகிய நல்ல கன்னிப் பெண்டிர்களும் இங்கு உள்ளனர். தேவைக்குத் தகுந்த செலவு செய்ய நிறைந்த பொருள்களும் உள்ளன.
.
.
அகிலம்
========
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
.
விளக்கம்
=========
சுவைக்கத் தக்க நல்ல உணவு வகைகளும் இங்கு உள்ளன. இங்குப் பல்லாக்குகளும், கோவிலில் போகிமாரும் உள்ளனர்.
.
குல்லாக்களும் உள்ளன. குளிப்பதற்குத் தாம்பிரபரணி ஆறும் உண்டு. சதுரங்கம் விளையாட மேடைகளும் சண்முக விலாசமும் உள்ளன. திருமால் பள்ளி கொள்ள பால்கடலும், ஒரு மாதத்திற்கு ஒரு கோடி எடைக்கும் அதிகமாக வருவாயும் இங்கு உண்டு. அதிகமாகப் புடவைகளும், பொன்சவடி ஆபரணங்களும் இங்கே வரும். ஒவ்வொரு வருடமும் வடம் போன்ற மாலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக வரும். இங்கே அமைக்கப்பட்டுள்ள கருவூலங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்ப்போமானால், காவடி ஒரு கோடியும், வாங்கப்படுகின்ற காணிக்கை மூன்று கோடியுமாக, இவ்வுலக மக்கள் பல சாதியினரும் கோடிகோடியாகக் கூடி இங்கே கொண்டு குவிக்கின்றனர்.
.
இப்படியாக எனக்குப் பலவகைப் பாக்கியங்கள் அமைந்து இருக்கின்றன. எந்த வகையில் ஆயினும் சரி, நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்க வேண்டும் என்று முருகன் அழைத்தான்.
.
.
அகிலம்
========
கந்தன் அழைப்பை மறுத்துத் திருமால் திருச்செதூர் கடற்கரை ஏகல்
======================================================================
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்
நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்
.
விளக்கம்
=========
திருமால் தமது கீழ் உதடு சிறிதுகூட அசையாமல் சிரிப்பினை மிகவும் கடினத்துடன் உள்ளடக்கி, முருகனை நோக்கி மறுத்து உரைக்கலானார். முருகா, மருமகனே, நீ நலமாய் இருப்பது மிகவும் நன்று. பொல்லாத செயல்கள் செய்யாமல் நீ இங்கு ஆட்சி புரிவதே போதுமானது ஆகும் என்று அய்யா திருமால் கூறினார்.
.
.
அகிலம்
========
என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து
செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை
.
விளக்கம்
=========
பிறகு ஈசரை நோக்கி, ஈசரே, முன்னர் நாம் அனுப்பி திருவாசகச் சொல் பூமிக்கு முழுமையாக வந்தடைந்துவிட்டதா? மிகுந்த ஆணவம் உள்ளவர்களுக்குச் செல்வச் செழிப்பினால் உண்டாகும் மதமும் இப்படித்தான் இருக்கும். ஆனால், பொருளில்லா ஏழைகளுக்கு ஆறுமுகன் சொல்லும் ஆணவச் சொல்லின் மேல் பற்று இருக்கும் என்று கூறி இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர். பிறகு, கந்தனை நோக்கி அவனுக்கு உகந்த வார்த்தைகளை எடுத்துக் கூறிவிட்டு எல்லாரும் நடந்து திருச்செந்தூர்க் கடற்கரைக்கு வந்தடைந்தனர்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.