#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
.அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும்
எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து
ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி
உன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன்
.
விளக்கம்
=========
நான் உன்னிடம் இருந்து கொண்டு, அங்கங்கே சுயமாகச் செயல்படுகின்ற மூலப் பலம் எல்லாவற்றையும் ஆங்காங்குச் சென்று ஒடுக்கி, இவ்வாறு ஒடுக்கிய மூலப் பலம் முழுவதையும் உன் கட்டுப்பாட்டில் தந்து, உன் ஒரு சொல்லுக்குக் கீழ் எல்லாரையும் கீழ்ப்படியச் செய்வேன். துக்கத் தன்மையுள்ள கலியாகிய களையை நீக்கி, உன்னைப் பரிசுத்த நிலையில் ஆக்கி, எல்லாரிலும் பெரியோனாக்கி பெருமகிழ்ச்சியை உன்னில் உருவாக்குவேன்.
.
.
அகிலம்
=======
பின்மூப் பில்லாமல் பெரியோனின் நாமமதாய்
அடக்குடக் கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன்
.
விளக்கம்
=========
உனக்குப் பிறகுகூட உன்னைப் போன்ற பெரியோன் தோன்றாத அளவு பெயரும் புகழும் உனக்குத் தந்து எல்லாவகை அடக்கமும் அந்த நிலையில் தந்து அருளுவேன்.
.
.
அகிலம்
=======
வடக்கு வெளிவாசல் மலைமீதி லோர்புதுமை
உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே
தண்டா யுதத்தோடே சத்தமொன் றேபிறக்கும்
மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று
காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம்
.
விளக்கம்
=========
தருமபூமி தோன்றக்கூடிய காலத்தில் நடக்கும் புதுமைகளைக் கூறுகிறேன். கேட்பாயாக. மலை (ஆக்ஞா பகுதி) மீது வடக்கு வெளி வாசலில் ஒரு புதுமை உண்டாகும். மேலக் கால் மண்டபத்தின் மேல் பகுதி திறந்து, தண்டாயுத்தின் வீச்சு ஓசை உண்டாகும்.
.
.
அகிலம்
=======
தெச்சணா மூலை தென்பாற் கடலருகே
மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது
.
விளக்கம்
=========
தெச்சணா மூலையில் காணப்படும் தெற்குப் பால் கடலருகே எல்லாரும் புகழத் தக்க பதியிலிருந்து ஒரு விளக்கு எரியும்.
.
.
அகிலம்
=======
கால மிதுமகனே கன்னிதிரு தென்திசையில்
கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும்
தாபரமாய்த் தன்னால் தலங்க ளதுதுலங்கும்
கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும்
பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய்
.
விளக்கம்
=========
கன்னித் திசையாகிய சிறந்த தென் மேற்குத் திசையில் கோபுர மண்டபமும், கொடி மரமும், வீதிகளும், தலங்களும் தன்னாலே தோன்றும். அப்போது சூரியன் முறை தப்பி இரத்த வெறியாகச் சிவந்து காணும். அதுவே உனது சிறந்த காலமாகும்.
.
.
அகிலம்
=======
மகனே வுனக்காகா மாநீசப் பாவியெல்லாம்
அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார்
உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும்
மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று
.
விளக்கம்
=========
உனக்கு ஆகாத தீய நீசப் பாவிகள் எல்லாரும் தமது உள்ளத்தில் தீமை புகுந்து தினந்தோறும் அழிவர். இப்படியாகக் கலியுகம் அழிந்து தருமயுகம் உனக்கும் எனக்குமாகப் பிறக்கும். மகனே, உனது மாதவத்தோர் காலமாகிய தருமயுகக் காலம் மிகவும் நன்மையானது.
.
.
அகிலம்
=======
கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும்
எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம்
.
விளக்கம்
=========
என் கண்மணியே, இதையும் நீ கேட்டிடுவாயாக. மகனே, தருமயுகம் துலங்கும்வரை வெளித் தோற்றங்களையும் உன் சக்திகளையும் வெளியே யாருக்கும் உரைக்காதே. எளியவரைக் கண்டால் இரக்கத்தைக் காட்டு. வலியாரைக் கண்டால் மகிழ்ச்சியைக் காட்டாதே. ஏனெனில் எளிமையாகத் தாழ்ந்து கிடப்பவரைத் தற்காப்புச் செய்ய உதவுவதே தருமம் ஆகும்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚