*தினம் ஒரு தேவாரம்* *பாடல் பெற்ற* *சிவத்தலங்கள்*.
*புதிய தொடர் பதிவு*
*தேவாரம் பாடல் பெற்ற* *சிவ ஸ்தலங்கள்*
தொடர் பதிவில் இன்று காவிரி தென்கரை தலங்களில்
ஏழாவதாக(7)
பார்க்க இருப்பது
எறும்பீஸ்வரர் திருக்கோவில், திருவெறும்பூர்
திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள
ஒரு சிவத்தலமாகும்.
திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது.
இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.
புராண பெயர்(கள்):
திருவெறும்பியூர், திருவெறும்பூர், மணிக்கூடம், இரத்தினக் கூடம், பிப்பிலீசுவரம், திருவெறும்பிரம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம்,குமாரபுரம், தென் கயிலாயம், எறும்பீசம்
சிவஸ்தலம் பெயர்
திருவெறும்பூர்
இறைவன் பெயர்
எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர், மதுவனேஸ்வரர்,
மணிகூடாசலதேஸ்வரர் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலைமேல்,மகாதேவர்
இறைவி பெயர்
சௌந்தரநாயகி, நறுங்குழல் நாயகி, மதுவனேஸ்வரி
இரத்தினம்மாள், மதுவனவிஸ்வதி,
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம், குமார தீர்த்தம்
ஆகமம்:காமீகம்
சிறப்பு திருவிழாக்கள்:
பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துக்கான பதிகங்கள்.
1)விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
2)பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்.
திருத்தல வரலாறு :
தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் இழைத்த கொடுமைகளினால் தாங்கொணாத் துயருற்ற தேவர்களும் முனிவர்களும், நாரத முனிவரின் அறிவுரையின்படி திருச்சியை அடுத்துள்ள இம்மலையில் எழுந்தருளிய ஈசனைத் தொழச் செல்கையில், அவ்வரக்கன் அறியாத வண்ணம் எறும்பின் வடிவினை மேற்கொண்டு வழிபட்டனராம்.
மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை அடைந்து அதில் சிவ லிங்கத்தைத் தொழ எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே #எறும்பீஸ்வரர் என இத்தல நாதர் அழைக்கப்படலானார்.
பெயர்ச் சிறப்பு :
எறும்புகளுக்கும் அருள் ஈந்த #ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் #எறும்பியூர் எனப்பட்டது.
திருத்தலச் சிறப்புகள்:
முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம்.
மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது எனவே நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது.
வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது.
சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.
இத்தலம், மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம்.
இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர்.
இது ஒரு பாடல் பெற்ற தலம்.
சிறப்பு மிக்க சிவனடியாரான திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புக்களை ஐந்தாம் திருமுறையில் பாடியருளியுள்ளார்.
இக்கோயிலில் சூரியானரின் திருவுரு நவக்கிரக சந்நிதியில் தமது இரு மனைவியரோடும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போன்று, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டதாகக் கூறுவதுமுண்டு.
இத்தலம் சோழ மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்று விளங்கியது.
முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் ஆகியோர் திருப்பணிகளை விளக்கும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இவற்றில் இறைவனார் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலை மேல் மகாதேவர் என்னும் பெயர்கள் கொண்டு குறிப்பிடப்படுகிறார்.
கல்வெட்டுத் துறையாளரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும். கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஷ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளனர்.
கி. பி. 1752ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினருக்கு இடையில் நிகழ்ந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது
கோவில் அமைப்பு:
இத்தலத்தில் ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது.
கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி ஆலயத்தை அடையலாம்.
கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது.
இரண்டு பிரகாரங்கள் உள்ளன.
கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன.
கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார்.
மூலலிங்கம் மண்புற்றாக உள்ளதால் நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது.
சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தும், மேற்புறம் சொரசொரப்பாகவும் காணப்படுகிறது.
கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தன விநாயகர், அழகான தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் சங்கர நாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
நவக்கிரக சந்நிதியில் சூரியன் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது.
பைரவர் உள்ளார்.
இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.
உட்பிரகாரத்தில் சோமஸ்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி, பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன.
பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
இக்கோவிலின் தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக கோவில் எதிரில் உள்ள பிரம தீர்த்தமும் விளங்குகிறது.
எப்படிப் போவது?
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இருந்து சுமார் 12 கி.மீ.. தொலைவில் திருவெறும்பூர் சிவஸ்தலம் உள்ளது.
திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது.
அருகில் உள்ள
பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள்
1. உய்யக் கொண்டான் மலை - 14 கிமி -
2. திருமூக்கிச்சரம் -
17 கிமி -
3. திருச்சிராப்பள்ளி -
14.3 கிமி -
4. திருநெடுங்களம் -
14.2 கிமி -
ஆலய முகவரி
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்
திருவெறும்பூர்
திருவெறும்பூர் அஞ்சல்
திருச்சி
திருச்சி மாவட்டம்
PIN - 620013
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். 🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥