Follow
RamaswamyAnnamali
@swamy_6943
10,152
Posts
52,849
Followers
RamaswamyAnnamali
589 views
6 hours ago
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம்*அறுபதாம் கல்யாணம்* #எப்படி_செய்ய #வேண்டும் ? “#சஷ்டியப்தபூர்த்தி” என்பது திருமணமான ஒரு ஆண் தனது மனைவியோடு இல்லற வாழ்வில் தனது 60 வயதை கடந்து 61 வயதில் அடியெடுத்து வைக்கும் போது செய்து கொள்ளும் திருமணமாகும். இதை தமிழில் “60 ஆம் கல்யாணம்” அல்லது “மணிவிழா” என்று அனைவரும் கூறுவார். இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கு குடும்பத்தின் மூத்தவரான அந்த ஆண் தான் பிறந்த மாதத்தில், பிறந்த நட்சத்திர திதியன்று நடத்தபடுகிறது. இந்த 60 வது திருமண சடங்கு பற்றி மேலும் பல விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நமது தமிழ் பாரம்பரியத்தில் தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. அதன் படி குடும்ப தலைவரான ஒரு ஆண் இந்த 60 ஆண்டுகள் வயது மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61 ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது. மேலும் வயதான தங்களின் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கை செய்கின்றனர். சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது உங்கள் வீட்டிலோ செய்து கொள்ளலாம். பிறகு அந்த தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்தபூர்த்தி அல்லது மணிவிழாவிற்கு அழைக்க வேண்டும். சஷ்டியப்தபூர்த்தி செய்யும் நாள் அன்று அந்த வயதான தம்பதிகளுக்கு அவர்களின் திருமணத்தின் போது செய்த சடங்குகளை வேதியரின் அறிவுறுத்தலின் படி அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் செய்வர். பிறகு குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ரித்துஞ்சய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர். நமது பெற்றோருக்கு சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. இச்சடங்கின் போது செய்யப்படும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும் தருகிறது. 60 வயதை தாண்டும் அந்த ஆணின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.
RamaswamyAnnamali
540 views
12 hours ago
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் நாக சதுர்த்தி : 01 இந்துக்களைப் போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் இந்து ரிஷிகள். தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் வாங்குவது என்பதை பல வடிவங்களில் சொல்லிக் கொடுத்தார்கள். இந்துமதம் என்பது எப்போதும் சூட்சும வடிவங்களை மானிடரை அண்டியிருக்கும் சில உயிர்களோடு, அதன் தன்மையோடு சுட்டிக்காட்டி இந்த வடிவில் வணங்க சொல்லும் மதம். காரணம், மனிதனுக்கு சில விஷயங்கள் புரியாது, உதாரணமாக, இன்றுள்ள மின்சக்திக்கோ, மின் காந்த அலை சக்திக்கோ அவனால் உருவம் கொடுக்க முடியாது. அதுவே சிரமம்; அப்படிக் கொடுத்தாலும் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. மானிட வாழ்விலும் அதனால் லவுகீக பலன் இல்லை இதனாலே எப்போதும் கண்ணுக்குத் தெரியாத உருவமில்லாத சூட்சும சக்திகளுக்கு வடிவம் கொடுக்கும் போது, மானிட லவுகீக உயிர்கள் ஒன்றின் இயக்கமும் அந்த சக்தியின் இயல்பும் பொருந்திப் போவதை கண்டு மிக நுணுக்கமாக அதற்கு அச்சக்தியின் பெயரைச் சுட்டிக்காட்டினார்கள். இதனால் மானிடருக்கு சூட்சும சக்திகளின் ஆசியும் கிடைத்தது, அப்படியே லவுகீக காரியங்களும் செழித்தன‌. உதாரணமாக, அது காளையினை சிவ வாகனம் நந்தி“தேவர்” என்றது, பசுவினை கோ”மாதா” என்றது. இதனால் மானிடர் காளையினை தெய்வமாக வணங்கி தங்கள் மனோசக்தியால் சிவ அருள் பெற்றனர். அப்படியே அது காக்கப்பட்டு காளையினம் வலுவானதாக உருவாக்கப்பட்டு வண்டி, உழவு, விவசாயப்பணி என காளைகள் மானிடருக்கு உதவின‌. பசுவும் அவ்வாறே. இப்படித்தான் காகம், சேவல், யானை என எல்லாவற்றையும் குறிப்பிட்ட சக்திகளின் பெயராகச் சொல்லி அந்த சக்திகளின் அருளையும் அப்படியே லவுகீக பூலோக நலன்களையும் காத்துக்கொண்டது இந்துமதம். காகத்தால் பித்ருக்கள் ஆசி கிடைத்தது. அப்படியே சுற்றுச்சூழல் சீரானது, யானையினால் காடுகள் பெருகின, இன்னும் பலன்களும் அதிகரித்தன‌. இன்னும் இம்மாதிரி விலங்குகள் பறவைகளின் தன்மை பல அந்த சூட்சும சக்திகளின் குணங்களை ஒத்திருப்பதால், அவைகளே இதனுள் இறங்கி வரவும் வாய்ப்பு உண்டு என்பதை இந்துமதம் சொல்லிற்று. இன்னும் இவைகள் வடிவில் அந்த சக்திகளை வணங்கி அருள்பெறவும் இந்துமதம் வழிகாட்டிற்று. அப்படி அது சொன்ன ஒரு வழிபாடுதான் நாக வழிபாடு, நாகங்கள் என பூலோக சர்ப்பத்தை காட்டி இன்னொரு சூட்சும உலகின் சக்திகளின் பலனைப் பெறும் பெரும் வழிபாடு. இந்தப் பிரபஞ்சத்தை ஆழ கவனித்த இந்துமதம் 108 அண்டங்கள் இருப்பதைச் சொன்னது, அப்படியே 20 வகையான சக்திமிக்க இனம் இருப்பதைச் சொன்னது. யக்ஷர்கள், ராக்ஷசர்கள் தொடங்கி தேவர்கள், மானிடர்கள் என இருபது பேரை அது சொன்னது. இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பதுதான் நாகசக்தி எனும் நாக உலகம். அது ஒரு தனி சக்தி. இந்த சக்தியிடம் பல சூட்சும வரங்கள் உண்டு, பெரும் சக்தி உண்டு, இவைகளின் ஆசி மானிடருக்கு அவசியம், அந்த ஆசி இல்லையென்றால் பெரும் குழப்பம் மானிட வாழ்வில் வரும். அதே நேரம் இவர்கள் ஆசீர்வாதம் இருந்தால் மாபெரும் வாழ்வினை வாழலாம். இந்த சக்தி பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கின்றது. எல்லா உலகையும் ஆட்டிவைக்கின்றது. மானிட வாழ்விலும் அது அரூபமாக சூட்சுமமாக நிற்கின்றது, கோள்கள், சஞ்சாரம் என பல வகையில் அது ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை அறிந்தார்கள் இந்து ஞானியர். இன்னும் ஆழமாகச் சொன்னால் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு; அமுதும் உண்டு, விஷமும் உண்டு; வெளிச்சமும் உண்டு, பகலும் உண்டு; வெப்பமும் உண்டு, குளிர்ச்சியும் உண்டு. இந்த சமநிலை சரியாக இருத்தல் அவசியம்; இந்த சமநிலை தவறினால் ஏதோ ஒன்று மிக அதிகமாகி குழப்பம் அதிகரிக்கும். இவை சரியாக தராசின் முள்போல இருந்தால்தான் தெளிவும், ஞானமும், அமைதியும் வாய்க்கும். இது பிரபஞ்ச இயக்கத்தில் உண்டு, பூமியில் உண்டு, மானிட மனதில் உண்டு, உடலிலும் உண்டு. உதாரணமாக, ஒவ்வொருவர் உடலிலும் ஒரு விஷத்தன்மை உணவிலோ, இல்லை இதர வடிவிலோ உருவாகும். இந்த விஷம் மிஞ்சிப் போகும்போது அது நோயாகின்றது. மனதின் விஷமான கவலை உள்ளிட்டவை முற்றும்போது, அது மன சஞ்சலமாகின்றது. இது இன்னும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மாறும்போது தீமையோ விஷத்தன்மையோ அதிகரிக்கும்போது குழப்பமே உண்டாகின்றது. இதனால், இவற்றை எல்லாம் சீர்ப்படுத்தவும், இந்த விஷத்தன்மை எனும் எதிர்தன்மையினை தன்னுள் வாங்கி, தன்னை வணங்கும் உயிர்களைக் காக்கும் பணியினைச் செய்யவும் ஒரு மகா சக்தியினை பரம்பொருள் உருவாக்கியது. அவர்களுக்கென தனி உலகமும், தனி பலமும் வரமும் உண்டு, அவர்கள்தான் நாக தேவதைகள். இவர்கள் அரசன் நாகராஜா. இவர்கள் வாழும் உலகம் நாகலோகம். இது ஒரு சக்தி, தனி சக்தி, யாரும் காணமுடியாத அரூப சக்தி, இந்த உலகின் சமநிலை குறையாமல் காக்கும் ஒரு சக்தி, எதுவும் மிதமிஞ்சி போகும் போது கட்டுப்படுத்தும் சக்தி. (விஞ்ஞானம் இதனை நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி என வகுக்கும். இந்த சமநிலை சரியாக இருந்தாலே சக்தி கிடைக்கும், அந்த சக்தி மனம் முதல் அண்டவெளிவரை பரவியிருக்கின்றது என்கின்றது விஞ்ஞானம். இந்துக்கள் இதனை தேவர், அசுரர் என்றார்கள். இன்னும் கருடன், நாகம் என்றார்கள், இந்த இரு சக்திகளின் சமநிலைதான் சரியான இயக்கத்துக்கு அவசியம்.) அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பதுபடி மனதையும், உடலையும் காக்கும் சக்தி. இந்த சக்தி, பூமியில் உள்ள எந்த உயிர்களோடு சரிவரும்? எதனைச் சுட்டிகாட்டமுடியும்? எனத் தேடிய ஞானிகள், சர்ப்பம் எனும் பாம்பின் வடிவினைக் கண்டார்கள். அது பல வகைகளில் ஒரு பலனைக் கொடுத்தது. முதலில் பாம்பு விவசாயிகளின் நண்பன்; அது செய்யும் பலன்கள் ஏராளம். வயலில் எலிகளை கட்டுப்பாடாய் வைப்பது, புற்றுமண் என வளமான மண்ணைக் கொடுப்பது. இன்னும் அதன் விஷம் ஒரு மருந்து, நாகரத்தினம் ஒரு மருந்து என அதன் பலன்கள் ஏராளம். சூட்சும சக்தி கொண்ட பாம்புகள் ஏகப்பட்ட பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தன. அதனால் அவை மானிடர் வாழ்வில் அவசியம் என்பதை உணர்ந்தார்கள். இன்னும் அதன் வடிவம் பல சூட்சும உண்மைகளை சொன்னது, அண்டவெளி முதல் மானிட மரபணு வரை பல வகைகளில் ஒரு குறியீட்டு ஒற்றுமை இருந்தது சித்தர்கள் உடலில் மறைந்திருக்கும் மகா சக்திக்கும், மண்ணில் மறைந்திருக்கும் நாகத்திற்கும் பெரும் தொடர்பினை உருவகமாகக் கண்டார்கள். விரைவாகச் செல்லும் தன்மை. . உடன் தோன்றுவதும் உடன் மறைவதுமான வேகம், இடுகாடு, சுடுகாடு, பொந்துள்ள மரங்கள், பழைய சுவர்கள், கரையான் புற்று ஆகிய இடங்களில் வாழும் தத்துவக் குறியீடு, மலைப்பாம்பு போல் வளைத்து சுருட்டும் ஆற்றல், பல்வேறு வகை வண்ணங்கள், வண்ணக்கலப்புக்கள், கடுங்குளிரையும் கடும் வெயிலையும் தாங்கும் ஆற்றல், நிலத்தில் விரைந்து ஓடுவதும் நீரில் விரைந்து நீந்துதலும் என நிறைய அதன் சிறப்பான தனித்துவம் உண்டு பாம்பிற்குள்ள இமையா விழிகளும் தொலைநோக்கும் மிக சிறப்பானவை விழித்திருத்தலுக்கு அவை எக்காலமும் எடுத்துகாட்டு, பின்னிக்கொண்டு இனப்பெருக்கம் செய்தல் என்பதில் அப்படியே பாம்புக்கும் மானுட சாதிக்கும் ஒற்றுமை அதிகம், அந்த பிணைப்பு மனிதனுக்கும் பாம்புக்கும் அடிப்படை ஒற்றுமை. முக்கியமாக அழகாகப் படம் விரித்து ஆடுதல் என்பது நாகத்தின் சிறப்பு. மண்ணில் சுருண்டிருக்கும் பாம்பு சட்டென 90 பாகை நேர்கோட்டில் மேல் நோக்கி எழும்புவதை அவதானித்தார்கள், அந்த சக்தி மண்ணில் எந்த விலங்குக்குமில்லை. ஒரு நாகத்தால் 90 பாகை மேல் எழமுடியும், அப்படியே நிற்க முடியும், தன் தலையினை வேல் போல மாற்ற முடியும். இந்துக்கள் மரபில் நாக வடிவம் முக்கியமானது, அதாவது வேல், தீபம் போன்றவையின் அந்த உருவம் மகத்துவமானது. ஒரே நேர்கோட்டில் வரும் சக்தி ஒரு பிரிவாக பிரிந்து அகன்று பின் மேலே கூடும் தத்துவம் அது. இன்னும் ஆழமாகச் சொன்னால் இடகலை பிங்கலை என இரு மூச்சுக்கள் அகன்று ஓடி கடைசியில் சுழுமுனை நாடி எனும் நெற்றியில் இணைவதைச் சொல்லும் தத்துவம் அது. வேல் தத்துவம், தீப தத்துவம், நாக படமெடுக்கும் தத்துவமெல்லாம் அதுதான். இதனால் குண்டலி சக்தியின் அடையாளமாக நாகத்தை சொன்னார்கள், இன்னும் மானுட உயிரின் மரபணு மூலமும், பிரபஞ்ச பல வடிவமும் நாகத்தின் சாயலில் இருப்பதைச் சொன்னார்கள் இதனால் வெகு ஞானமாக பூலோக நாகத்தைக் காட்டி நாகலோக நாகங்களை வழிபடச் சொன்னார்கள். இதனால் பிரபஞ்ச சூட்சும சக்தியோடு புவியில் மானிடரின் லவுகீக பலன்களும் விவசாயம், மருத்துவம், காவல் என கிடைத்தன‌ பாம்புக்கும் மனிதனுக்குமான பந்தம் இங்கிருந்துதான் உருவானது, ரிஷிகள் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பாம்பும் யானைபோல், மாடுபோல், மானுடருடன் நெருங்கும் சக்தி கொண்டது, அது விஷம் கொண்டதாயினும் மானுடர் மனமறியும் சூட்சுமம் கொண்டது. அதற்கும் பிரபஞ்சத்தின் மகா சக்திக்கும் தொடர்பு உண்டு என்பதை ஞானத்தால் அறிந்த ரிஷிகள் அந்த நாக வழிபாட்டை தோற்றுவித்தார்கள். இதனால் மானிடர் லவுகீக பலமும் பெற்றார்கள், பிரபஞ்ச சூட்சும பலமும் பெற்றார்கள். இந்துமதம் இன்னும் இதனை அழுத்திச் சொன்னது, இந்த வழிபாட்டை ஊக்குவிக்க இந்து தெய்வங்களையெல்லாம் நாகங்களோடே நிறுத்திற்று. சிவனுக்கு கழுத்தில் நாகம் கொடுத்த இந்துமதம், விஷ்ணுவுக்கு அதனையே படுக்கை ஆக்கிற்று, முருகனோ , பிள்ளையாரோ, அம்மனோ எந்த தெய்வம் என்றாலும் பாம்போடுதான் நிறுத்திற்று. நாக வடிவங்களை அப்படி வழிபட சொன்னமதம் இந்துமதம். உலகெல்லாம் இந்துமதம் பரவியிருந்த காலத்தில் எல்லா இனத்தவரிடையேயும் அந்த நாக வழிபாடு இருந்தது. சீனாவில் அது டிராகன் என உண்டு, ஜப்பானில் உண்டு, எகிப்தில் இருந்தது ஐரோப்பாவில் இருந்தது. கம்போடியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்தது. இன்னும் பல இடங்களில் உண்டு. நாகத்தை வணங்குதல் அப்படி பெரும் வழிபாடாக இருந்தது, பின்னாளில் இந்தியாவிலும் சீனாவிலும் அது நிலைத்தது, சீனா நெருப்பை உமிழும் பாம்பை தன் தேசிய அடையாளமாக கொண்டிருப்பதும் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் அவர்களின் பாம்பு நடனம் நடப்பதும் உலகம் அறிந்தது. வேதங்கள் பாம்பு பற்றி சொல்கின்றன. வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். யஜுர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது. பழங்கால பாஞ்சல தேசத்தின் தலைநகரம் அஹீசத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம். இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன. நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது. கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும், புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது. பாம்புகளை பொறுத்த வரை என்றும் எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும். பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகைகளும் காட்டப்படுகிறார்கள். இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள். இந்துமதம் அதனை இன்றும் தொடர்கின்றது, பழமையான அம்மதம் அந்த பாரம்பரியத்தை கைவிடாமல் பற்றி வருகின்றது பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பணிப்பெண்ணாக கருதுகிறார்கள். மகாபாரதத்தில் அனுஷாசன பர்வத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது. கிரிஸ் நாட்டில் வணங்கப்பட்ட நாக தேவதையின் பெயர் மினோவான் என்பது. எகிப்தில் படமெடுத்தாடும் பாம்பு தலையுடன் கூடிய நாகம்மா தெய்வமாக உண்டு, அவளை சூரியக் கடவுளின் கண்களாகவும் போற்றினர். இத்தாலியில் நோயை சுகமாக்கும் கடவுளாக நாகம்மாவை வணங்கினர். அவளுக்கு அன்கிதியா என்று பெயர். ஜெர்மனியில் பல குடும்பங்களுக்கு நாகம் குல தெய்வமாக இருந்து அவர்களின் ஆடு மாடுகளைப் பாதுகாத்தது. நாகம் இங்கு ஆணும் பெண்ணும் என ஜோடியாக இருந்து தமது குடும்பங்களைக் காப்பதாக நம்பினர். ஜப்பானில் மத்சுரா யோஹிமே என்ற பெயரில் நாகம்மாவை வழிபட்டனர். கொரியாவில் இயோப்ஷின் என்ற நாகம்மா செல்வத்துக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டாள். இவள் காதுகளுடன் கூடிய பாம்பு ரூபத்தில் இருந்தாள். இவளுக்கு ஏழு மகள்கள் உண்டு. ஏழு பேரும் பாம்புகள். பைபிளில் கூட யூத தெய்வம் நோயுற்ற மக்களை காக்க பாம்பை வணங்க சொல்லிற்று. அந்த பாம்பு வடிவம்தான் இன்று உலக மருத்துவ அடையாளமாகவும் விளங்குகின்றது. ஆம், நாக தத்துவம் இந்த உடலிலும் உண்டு, ஆரோக்கியத்திலும் உண்டு. இன்று உலகின் எல்லா இனத்திலும் பாம்பு வழிபாட்டின் தாக்கம் உண்டு. அதைத் தொடங்கி வைத்தது மதங்களுக்கெல்லாம் தாயான, ஆதி தாயான இந்துமதம். உலகெல்லாம் இந்துமதமும் அதன் நாக வழிபாடும் இருந்த காட்சியே இன்று உலகின் பல இடங்களில் காணபட்டாலும் அதன் மூலம் இந்து மதமே. இப்படியான நாக வழிபாட்டைச் சொன்ன இந்துமதம் ஏழு முக்கிய நாகங்கள் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதாகச் சொன்னார்கள் எட்டு வகையாக நாகங்களை பிரித்தார்கள், இவை அஷ்ட லக்ஷ்மி சாயலில் ஒவ்வொரு வளம் தருவதாக சொன்னார்கள். அனந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன் என எட்டுவகை நாகங்களைச் சொன்னார்கள். அனந்தன் என்பவன் ஆதிஷேஷன், பூமியினை தாங்கி நிற்பவன். திருமால் பள்ளி கொண்டிருப்பதும் இந்த அனந்தன் மேலே. சேஷன் என்றால் தொண்டன் எனப் பொருள், அனந்தனும் அதே பொருள். இப்படி அனந்தன் மேல் படுத்திருப்பதாலேயே, அவர் அனந்த சயனப் பெருமாள், திருவனந்தபுரம் எனும் பெயர் இப்படி வந்ததே. இவர் உலகை தாங்குவார், பிரபஞ்ச இயக்கத்தை தாங்குவார் என்பது நம்பிக்கை. (இன்றும் பூமிக்கும் இதர கோள்களுக்கும், ஒரு அண்டத்துக்கும் இன்னொரு அண்டத்துக்கும் இடையே கண்ணுக்கு தெரியா நெளிந்த வளைந்து செல்லும் பாதை இருப்பதாக விஞ்ஞானம் சொல்கின்றது, இந்த நெளிவுமிக்க அந்த இணைப்பில்தான் இந்த பிரபஞ்சம் இயங்குவதாகவும் அது சொல்கின்றது. அதைத்தான் ஆதிஷேஷன் என்றார்கள் இந்துக்கள்) வாசுகி என்பது அமிர்தம் கடைய பயன்பட்டது என்பது ஐதீகம், அதாவது அமிர்தம் எனும் ஞானம் தரும் நாகம் அது. தக்கன் எனும் நாகம் எதிரிகளை அழிக்கும் வரம் தரும். பாகவத புராணத்தில் பரீக்ஷித் கதையில் இந்த பாம்பு வரும். கார்க்கோடகன் எனும் நாகம் சாபங்களை தீர்க்கும். நளன் கதையில் இதனைக் காணலாம். பதுமனும் சங்கபாலனும் குபேர சம்பத்து நாகங்கள். சங்கநிதி பதுமநிதி எல்லாம் இவர்கள் கொடுக்கும் வரம். சங்கபாலன் அரச யோகங்களைத் தரும், சோம்பலை ஒழிக்கும், பெரும் அறிவும் பொருளும் ஒருங்கே தரும். குளிகன் எனும் நாகம் நோய் தீர்க்கும், உடல், மன ஆரோக்கியத்தை தரும். இப்படி எட்டு நாகங்களைச் சொல்லி, இவை உலகையும் மானிட மனத்தையும் உடலையும் காக்கும் வரத்தைத் தரும் எனச் சொன்னமதம் இந்துமதம். இந்த நாகங்களின் நச்சுத்தன்மை என்பது அழிவை தருவது அல்ல, மிதமிஞ்சிய தீமைகளை அவை எடுத்துக்கொள்ளும். ஒரு மனிதனுக்கு என்ன விழிப்பு நிலை அவசியமோ அதைத் தரும் என்பது. அதைத்தான் இங்கே குறியீடாக வைத்தார்கள். அப்படியே ஜோதிடத்தில் ராகு, கேது எனும் இரு கிரகங்களை வைத்தார்கள், இந்த இரு கிரகங்களின் அருள் இல்லாமல், அதாவது இந்த நாகங்களின் அருள் இல்லாமல் எந்த ஜாதகமும் இல்லை என்பதை சொல்லியும் வைத்தார்கள். பாம்புக்கும் மனிதனுக்குமான சூட்சும உறவை சித்தர்கள் ஞானக்கண்ணால் அறிந்தார்கள். பாம்புபோல் ஒரு சக்தி உடலில் உறங்குவதைக் கண்டார்கள். அது விழித்தெழ சில பயிற்சி அவசியம் என்றார்கள். அதை யோகக்கலை என்றார்கள். யோகத்தில் செய்யும் பல பயிற்சிகள் பாம்பின் அசைவை ஒத்திருப்பதை காணலாம். அதை செய்யச் செய்ய ஆரோக்கியம் கூடும், ஞானம் பெருகும். கிராமங்களில் அல்லது பெரும் திருவிழாக்களில் சாமியாடிகளின் உடல் அசைவினை கவனித்தால், அருள்வாக்கோ தெய்வ நிலைக்கு செல்லும் சாமான்ய மனிதர்களைக் கண்டால் பாம்பின் அசைவுகள், நெளிவுகள் அங்கே தெரிவதை எளிதாகக் காணமுடியும். ஆம், மானிடனில் ஒரு சக்தி எழுவதையும் அவர்கள் இன்னொரு பரிமாணத்துக்கு செல்வதையும் பாம்பின் அசைவினோடு பொருந்துவதை காணமுடியும். இதைத்தான் நாகவழிபாட்டின் அவசியம் என்றார்கள் சித்தர்கள். இந்தியாவின் பரதக் கலையிலும் பாம்பின் தத்துவம் இருந்தது, பாம்பின் அடிபாகம் போல் கால்கள் உறுதியாக இருத்தல் அவசியம், இடுப்புக்கு மேல் பாம்பு போல் பெண் நடனமாட வேண்டும் என்பதும் இலக்கணம். ஆம் இந்தியாவின் பரதம் ஒரு யோக நடனம், அந்த நடனம் யோக சக்தியினை அதிகரிக்கும். அதனாலே அதை பாம்பின் சாயலில் ஆடச் சொன்னார்கள். பதஞ்சலி முனிவர் பாதி பாம்பாக போன தத்துவம் அதுதான், பாம்பின் அசைவில் மானிடன் இறைவனை உணரமுடியும் என்பது. ஆம், நாகங்களை வழிபட்டால் எல்லா பலன்களும் சூட்சுமமாக, அரூபமாக வரும் என்றார்கள் இந்துக்கள். இன்னும் முன்னோர்கள் காக வடிவில் வருவது போல, சித்தர்கள் பாம்புவடிவில் வருவார்கள் என்பது நம்பிக்கை. இதனாலே பாம்புகளைத் தொழச் சொன்னார்கள். உண்மையில் பாம்புகள் அறிவானவை, சூட்சுமமானவை. அவைகளை புரிந்துகொண்டு பழகினால் உரிய வகையில் மந்திரங்களோ இல்லை இதர வகையில் அவைகளை நெருங்கினால், யானை பாகனுக்கு கட்டுப்படுவது போல், அவைகளும் மானிடருக்கு கட்டுபட்டு நிற்பவை. ஒரு காலத்தில் இந்துஸ்தானின் காவலாக பாம்புகளே இருந்திருக்கின்றன, அலெக்ஸ்டாண்டர் இந்தியாவில் நுழையாமல் திரும்பிப் போக நாகங்களே காரணம். நாகங்களை பழக்கும் வித்தை இந்தியரிடையே உண்டு, அவர்கள் கட்டளையிட்டால் நாகங்கள் தாக்குகின்றன என கிரேக்கர்கள் அஞ்சியிருக்கின்றார்கள். இந்தியாவில் நாகங்களைப் பழக்கி காவல் வைப்பதும் அவற்றின் நஞ்சினில் சில ஆயுதங்கள் செய்வதும் வழமையாய் இருந்திருக்கின்றன, அம்பிலோ ஈட்டியிலோ நாக நஞ்சினை தடவி எறிந்தால் எதிராளி நிச்சயம் காலி. நாகஙகள் விலை உயர்ந்த பொருளுக்கு காவலாக வைக்கப்பட்டிருக்கின்றன‌. பின்னாளில் பவுத்தத்தால் பல வகை சீரழிவுகள் வந்து, இவை எல்லாம் மறைந்தாலும் கேரளாவில் அது தொடர்ந்திருக்கின்றது, கடைசிவரை ஆப்கானியரால், மொகலாயரால் மலையாள பூமி ஆளப்படாமலே போக அவர்களை யாரும் வெற்றிகொள்ள முடியாமல் போக முக்கிய காரணம் இந்த நாகங்கள். கேரளத்தின் நாகங்கள் அப்படி காவல் இருந்திருக்கின்றன. எஜமானர்கள் உத்தரவிட்டால் மாபெரும் நாகங்கள் அணி திரண்டு தாக்கியிருக்கின்றன, இதெல்லாம் கண்டு அஞ்சித்தான் அங்கே ஆப்கானிகள் செல்லவில்லை. மாலிக்காபூரோ, துக்ளக்கோ, மொகலாயரோ யாரும் நுழைய அஞ்சியிருக்கின்றார்கள், அப்படிப்பட்ட பூமியாய் இந்துஸ்தானம் இருந்திருக்கின்றது. இங்கு நாகவழிபாடு எக்காலமும் உண்டு, நாகவழிபாடு சிறந்திருந்த வரை இந்துமதம் சீரும் சிறப்புமாக இருந்தது, நாகங்களை வழிபடும் வரை இந்தியாவில் வளமைக்கும் செழுமைக்கும் குறைவில்லை. நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு. நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய‌ சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் இந்துக்கள் என்றோ அறிந்த ஒன்று. இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு. இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு. நாகங்கள் மக்கட்வரம் மட்டுமல்ல, எல்லா வரங்களையும் அருளும், இந்தியாவின் நாக வழிபாடு உச்சத்தில் இருந்தவரை எல்லா வளமும் இருந்தது. நாக வழிபாடு சரிய, குறைய எல்லாமும் குறைந்து போனது. இந்துமதம் வாழ, இந்துஸ்தானம் வாழ, இந்துக்கள் இந்துக்களாய் வாழ, நாக வழிபாடு அவசியம். நாக வழிபாட்டால் எல்லா நலன்களையும் ஒருவன் பெறமுடியும். செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும். பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது. இந்துமரபில் பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது. இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல‌. மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும் இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன‌ (மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும் இதுதான் நாகதத்துவம்) இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள் மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள் இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள் அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள் இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள் சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள் எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள் இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள் இந்துஸ்தானில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை. நாகங்களும் சூட்சுமமானவை, அவைகளும் தர்மத்துக்கு கட்டுபட்டவை யானைகளுடன் பேசமுடியும் என்பதை உணர்ந்து பேசிய மனிதன் நாகத்துடனும் உறவாடினான் நாகத்தை பழக்கும் வித்தையும் அவனுக்கு வந்தது மனிதனின் மனதை உணரும் சக்தி பாம்புக்கும் உண்டு அது யாரையும் தேடி சென்று கொல்லாது அது ஒதுங்கித்தான் செல்லும் கர்மவினை இல்லாமல் யார் முன்னால் கூட வராது மந்திரத்துக்கு அது கட்டுபடும் என்பது மந்திரத்தால் அல்ல, மனதை ஒருமுகபடுத்த தெரிந்தவனால் அதன் ஆழ்மனதை தொடமுடியும் பேசமுடியும் அந்த அலைவரிசைக்கு செல்லும்போது பாம்பின் மனமும் அவன் மனமும் ஒரே புள்ளிக்கு வரும்போது அவன் சொன்னதையெல்லாம் அது கேட்கும் மந்திரம் என்பது மனதை ஒருமுகபடுத்தும் விஷயமே அப்படி இந்துக்கள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள் மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள் பாரதம் முழுக்க, அதன் வரலாறு முழுக்க, அதன் ஆலய வழிபாடு முழுக்க, நாகத்தின் அடையாளமாக ஏகப்பட்ட இடங்களும் குறியீடுகளும் உண்டு. அவைகளில் முக்கியமானவற்றைக் காணலாம். அடுத்த பாகம் வரும்... 🙏
RamaswamyAnnamali
579 views
13 hours ago
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் செல்லத்தம்மன் கோயில்* – கண்ணகியின் கற்பின் வரலாறும்*, எலுமிச்சை மாலை வழிபாட்டின் சிறப்பும் வணக்கம் அன்பு வாசகர்களே! 🙏 📍 இடம்: மதுரை – வடக்கு மாசி வீதி – சிம்மக்கல் பகுதி – வைகை நதிக்கரையோரம் மதுரையின் பழமையான ஆன்மிக வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் சிறப்புமிக்க அம்மன் தலங்களில் ஒன்று அருள்மிகு செல்லத்தம்மன் – கண்ணகி திருக்கோயில். கற்பின் சின்னமாகப் போற்றப்படும் கண்ணகியின் வரலாற்றுடன் தொடர்புடைய இந்தத் தலம், மதுரைக்கு வரும் பக்தர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தலமாகும். இங்கு கண்ணகிக்கு எலுமிச்சை மாலை சாத்தி, தாலிப்பொட்டு அணிவித்து வேண்டிக்கொள்வது சிறப்பான வழிபாடாகக் கருதப்படுகிறது. குடும்ப ஒற்றுமை, தம்பதியர் அன்பு, திருமண வரம் போன்ற வேண்டுதல்களுக்காக பக்தர்கள் வழிபடுகின்றனர். 🔥 கண்ணகியின் கோபத்திலிருந்து உருவான வரலாற்றுச் சுவடு காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கண்ணகி – கோவலன் தம்பதியரின் வாழ்க்கை, தமிழ் இலக்கிய உலகில் என்றும் அழியாத வரலாறாகும். வாழ்க்கைச் சூழ்நிலையால் மதுரைக்கு வந்த அவர்கள், அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்ற பெண் துறவி, அவர்களை மதுரையில் மாதரி என்பவரின் பாதுகாப்பில் தங்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. தனது வாழ்க்கையை மீண்டும் வளப்படுத்தும் நோக்கில், கண்ணகியின் சிலம்பை விற்று வியாபாரம் செய்யலாம் என்று எண்ணிய கோவலன் நகருக்குச் சென்றான். ஆனால் விதி வேறு விதமாக அமைந்தது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தார். அரசியின் சிலம்பு திருடப்பட்ட சம்பவத்தில், சிலம்பை விற்க வந்த கோவலன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உரிய விசாரணையின்றி அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிலப்பதிகாரக் கதை கூறுகிறது. கணவரை அநியாயமாக இழந்த கண்ணகி, நீதிக்காகக் கொதித்தெழுந்தாள். தலைவிரி கோலத்துடன் அரண்மனைக்குச் சென்று, தனது கணவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து நீதி கேட்டாள். அரசன் செய்த தவறு வெளிச்சத்துக்கு வந்தபோது, கண்ணகியின் கற்பின் வலிமையும் நீதிக்கான போராட்டமும் மதுரை வரலாற்றில் அழியாத இடம் பெற்றன. அந்த வரலாற்றுச் சுவடோடு தொடர்புபடுத்தப்படும் இடத்திலேயே பின்னர் கண்ணகிக்கு சிலை அமைத்து வழிபாடு தொடங்கியதாகத் தல வரலாறு கூறுகிறது. இந்தக் கோயில், கண்ணகி மதுரையில் தங்கியிருந்த இடத்துடன் தொடர்புடையதாகவும் விளக்கப்படுகிறது. 🔱 ஏன் கண்ணகி கோயிலில் செல்லத்தம்மன் பிரதான தெய்வமானாள்? கண்ணகிக்கு கோயில் அமைக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டதாகத் தல வரலாற்றில் கூறப்படுகிறது. கண்ணகியின் உக்கிரம் தணிய வேண்டும் என்பதற்காக பல வழிபாடுகள் நடைபெற்றன என்றும், பின்னர் மன்னரின் கனவில் சிவபெருமான் தோன்றி, அங்கு பார்வதி அம்சமாக அம்மனை பிரதிஷ்டை செய்யுமாறு அறிவுறுத்தினார் என்றும் ஐதீகம் கூறுகிறது. அதன்படி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். காலப்போக்கில் அந்த அம்மன் செல்லத்தம்மன் என்ற பெயரில் பெரும் புகழ் பெற்றார். இன்றும் இத்தலத்தில் முதலில் செல்லத்தம்மனுக்குப் பூஜை செய்யப்பட்டு, அதன் பின்னரே கண்ணகிக்கு பூஜை நடைபெறும் மரபு இருப்பதாகத் தல விவரங்கள் குறிப்பிடுகின்றன. 🌺 செல்லத்தம்மனின் திருக்கோலம் செல்லத்தம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறாள். ஒரு கையில் சூலமும், மற்றொரு கையில் கொன்றை மலரும் ஏந்தியிருப்பதாகத் தல விவரங்கள் கூறுகின்றன. அம்மனுக்கு எதிரே பேச்சியம்மன் சன்னதி உள்ளது. முன்மண்டபத்தில் கண்ணகி, கையில் சிலம்புடன் அருள்பாலிக்கிறாள். கண்ணகிக்கு உதவிய மாதரியுடனும் தொடர்புடைய சிற்ப அமைப்புகள் தல வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றன. பிரகாரத்தில் துர்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், அய்யனார், காலபைரவர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன. மேலும் இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற பெயரால் போற்றப்படுகிறார். 🍋 எலுமிச்சை மாலை சாத்துவதன் சிறப்பு இந்தத் தலத்தில் கண்ணகிக்கு எலுமிச்சை மாலை சாத்தி வழிபடுவது முக்கியமான மரபாகக் கூறப்படுகிறது. குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், கணவன் – மனைவி இடையேயான அன்பு பெருகவும், திருமண வரம் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். கண்ணகிக்கு தாலிப்பொட்டு அணிவித்தும் வழிபாடு செய்கின்றனர். ஒரு முக்கிய நினைவூட்டல்: இறை வழிபாடு நம்பிக்கை மற்றும் ஆன்மிக ஆறுதலின் ஒரு பகுதியாகும். வாழ்க்கைச் சிக்கல்களுக்கு தேவையான நடைமுறை முயற்சிகளையும் மேற்கொள்வது அவசியம். 💍 தை பிரம்மோற்ஸவத்தின் சிறப்பு தை மாதத் திருவிழா மற்றும் பிரம்மோற்ஸவம் இத்தலத்தின் முக்கியமான விழாக்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. செல்லத்தம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வுகளுடன் தொடர்புடைய சிறப்பையும் பெற்றிருப்பதாகத் தல மரபு கூறுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பட்டுச் சேலை கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்படும் வழக்கமும், அதனைத் தொடர்ந்து அம்மன் பவனி வருவதும் இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாக விளக்கப்படுகிறது. 🛕 தரிசனத் தகவல்கள் 📍 கோயில்: அருள்மிகு செல்லத்தம்மன் – கண்ணகி திருக்கோயில் 📌 இடம்: சிம்மக்கல், மதுரை – 625001 🚌 எப்படி செல்வது: மதுரை மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ⏰ தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் 11:30 மணி வரை மாலை 4:30 மணி முதல் 8:30 மணி வரை 📞 தொடர்புக்கு: 98655 82272 மேற்கண்ட கோயில் நேரமும் தொடர்பு எண்ணும் தற்போது கிடைத்த தலத் தகவல்களுடன் ஒத்துப்போகின்றன. இருப்பினும், திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் நேரங்களில் மாற்றம் இருக்கக்கூடும் என்பதால் பயணத்திற்கு முன் கோயில் நிர்வாகத்திடம் உறுதி செய்துகொள்வது நல்லது. 🛕 அருகிலுள்ள திருத்தலம் சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் திருக்கோயில் மதுரையில் உள்ள மற்றொரு பிரசித்தமான சிவத்தலமாகும். அங்கு செல்லும் முன் தரிசன நேரத்தைத் தனியாக உறுதி செய்துகொள்ளுங்கள்; சிறப்பு நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் நேர மாற்றம் ஏற்படலாம். 💫 ஒரு சிந்தனை கண்ணகியின் வரலாறு வெறும் கோபத்தின் கதை அல்ல. அது அநீதிக்கு எதிராக உண்மையுடன் நின்ற ஒரு பெண்ணின் கதை. செல்லத்தம்மன் தலம் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; கண்ணகியின் கற்பு, நீதிக்கான உறுதி, பெண்மையின் வலிமை, இறைநம்பிக்கை ஆகியவற்றை நினைவூட்டும் வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது.
RamaswamyAnnamali
404 views
13 hours ago
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் *திருமாலின் திருமுடி*🙏 🙏 *ஓம் நமோ நாராயணாய* 🙏 இது திருமாலின் திருமுடி தான்... பார்கும் போதே கண் கொள்ளா அழகு .... தங்கத்தில் செதுக்கிய நுணுக்கமான வேலைப்பாடு, நடுவில் மின்னும் வைர நாமம், சுற்றிலும் பதித்த மாணிக்கமும் மரகதமும். மேலே கலசம் போல் உயர்ந்து நிற்கும் அமைப்பு, கீழே தொங்கும் சிறு மணிகள் வரை எல்லாமே தெய்வீக பிரகாசம். இது போன்ற கிரீடம் திருப்பதி வேங்கடவனுக்கு சிறப்பு அலங்காரத்தின் போது சாற்றப்படுவது. "திருமுடி" என்றாலே பக்தர்களின் தலைமேல் இருக்கும் கருணையின் அடையாளம். தரிசனம் செய்த புண்ணியம் கிடைச்சது 🙏
RamaswamyAnnamali
554 views
13 hours ago
#🙏ஆன்மீகம் மரணம் -* மகாபாரதத்தின் அதிர்ச்சியூட்டும்* ரகசியம்....* மகாபாரதப் போர் முடிந்து, தர்மபுத்திரர் ஹஸ்தினாபுரத்தின் அரசராக முடிசூடிய பிறகு, நாட்டில் தர்மமும் அமைதியும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார். அந்த யாகத்தின் முக்கியமான வழக்கப்படி, அலங்கரிக்கப்பட்ட ஒரு வெள்ளைக் குதிரை நாட்டின் எல்லைகளைக் கடந்து பல தேசங்களுக்குச் செல்ல விடப்பட்டது. அந்தக் குதிரையை யாராவது தடுத்து நிறுத்தினால், அவர்கள் பாண்டவர்களின் ஆட்சியை ஏற்க மறுக்கிறார்கள் என்று பொருள். அப்போது போர் நடைபெறும். யாரும் தடுக்காமல் குதிரை சென்றால், அவர்கள் தர்மபுத்திரரின் பேரரசை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். இந்த மிகப்பெரிய பொறுப்பு, உலகப் புகழ்பெற்ற வில்லாளியான அர்ஜுனனிடம் ஒப்படைக்கப்பட்டது. காந்தீவம் கையில், எண்ணற்ற போர்களில் வெற்றியைச் சுவைத்த வீரனாக, யாகக் குதிரையைப் பாதுகாத்தபடி அர்ஜுனன் நாடு கடந்தான். பல நாடுகளை வெற்றிகரமாகக் கடந்த அந்தக் குதிரை, இறுதியில் மணிபுர நாட்டின் எல்லையை அடைந்தது. அந்த நாட்டை ஆண்டவன் பப்ருவாகனன். அவன் வேறு யாருமல்ல; அர்ஜுனனுக்கும் மணிபுர இளவரசியான சித்ராங்கதைக்கும் பிறந்த மகன். சிறு வயதிலிருந்தே தந்தையை நேரில் காணாத அவன், தன் தாயிடமிருந்து அர்ஜுனனின் வீரத்தையும் புகழையும் கேட்டு வளர்ந்திருந்தான். "உலகில் சிறந்த வில்லாளி என் தந்தை" என்ற பெருமை அவன் மனதில் எப்போதும் நிறைந்திருந்தது. தந்தை தனது நாட்டிற்கு வருவதாக அறிந்தவுடன், அவன் அளவில்லாத மகிழ்ச்சியில் மலர்மாலைகளையும், அரச மரியாதைகளையும் எடுத்துக்கொண்டு, அமைச்சர்களுடனும் வீரர்களுடனும் எல்லைக்குச் சென்றான். அர்ஜுனனின் முன் வந்து பணிவுடன் தலைவணங்கிய பப்ருவாகனன், "தந்தையே! உங்கள் வருகையால் மணிபுரம் புனிதமடைந்தது. என் அரண்மனைக்கு வந்து என்னை ஆசீர்வதிக்க வேண்டும்," என்று கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீருடன் கூறினான். ஆனால் அர்ஜுனனின் முகத்தில் எந்தப் பாசமும் வெளிப்படவில்லை. அவர் ஒரு தந்தையாக வரவில்லை; அஸ்வமேத யாகத்தின் காவலனாக வந்திருந்தார். ஒரு க்ஷத்திரியன் தனது கடமையை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், "நான் இங்கு உன் தந்தையாக வரவில்லை. இந்தக் குதிரையை நீ தடுத்திருக்கிறாய் என்றால், என்னுடன் போரிட வேண்டும். அரசனாக இருந்து ஆயுதத்தை விட்டு வணங்குவது உனக்கே அவமானம். உன் வீரத்தை நிரூபி," என்று கடுமையாகக் கூறினார். அந்த வார்த்தைகள் பப்ருவாகனனின் இதயத்தை நொறுக்கியது. பல ஆண்டுகளாகக் காண வேண்டும் என்று ஏங்கிய தந்தை, ஒரு அன்பான பார்வை கூட அளிக்காமல் போருக்கு அழைப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் மனம் குழம்பியது. தந்தையுடன் எப்படி போரிட முடியும்? அவரை எதிர்த்து அம்பு எய்வதே பாவம் என்று எண்ணி தயங்கினான். அந்தச் சமயத்தில் நாகலோகத்தின் அரசகுமாரியும், அர்ஜுனனின் மற்றொரு மனைவியுமான உலூபி அங்கு தோன்றினாள். அவள் பப்ருவாகனனை நோக்கி, "இது உன் தந்தையின் கட்டளை மட்டுமல்ல; ஒரு க்ஷத்திரியனின் தர்மமும் கூட. போர்க்களத்தில் உறவுகள் கிடையாது. கடமை மட்டுமே உண்டு. நீ பின்வாங்கினால் உன் வீரத்திற்கும் உன் நாட்டிற்கும் அவமானம் ஏற்படும். தயக்கத்தை விடு. உன் முழு திறமையையும் வெளிப்படுத்து," என்று உறுதியளித்தாள். உலூபியின் வார்த்தைகள் பப்ருவாகனனின் மனதில் துணிச்சலை விதைத்தன. உடனே அவன் கவசம் அணிந்து, வில்லைக் கையில் ஏந்தி போர்க்களத்தில் நின்றான். தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்ட அந்தக் காட்சி, அங்கு கூடியிருந்த அனைவரின் மனதையும் கனக்கச் செய்தது. போரின் முதல் அம்பை அர்ஜுனனே எய்தினார். அதற்கு பதிலளித்த பப்ருவாகனன், தன் தந்தைக்கு இணையான வேகத்திலும் துல்லியத்திலும் அம்புகளைத் தொடுத்தான். கணநேரத்தில் போர்க்களம் முழுவதும் அம்புகளால் மூடப்பட்டது. அர்ஜுனன் அக்னியாஸ்திரம், வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம் என பல திவ்யாஸ்திரங்களைப் பிரயோகித்தார். ஆனால் பப்ருவாகனனும் ஒவ்வொன்றுக்கும் தகுந்த எதிர் அஸ்திரங்களைப் பயன்படுத்தி அனைத்தையும் முறியடித்தான். தனது மகனின் திறமையைப் பார்த்த அர்ஜுனன் ஒரு கணம் வியந்தாலும், போரில் எந்தவித தளர்ச்சியும் காட்டவில்லை. பப்ருவாகனனும் முழு மன உறுதியுடன் போரிட்டான். இருவரின் வில்களின் நாணொலி இடியோசை போல ஒலித்தது. அம்புகள் வானில் மின்னல்போல் பறந்தன. போரைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் கூட, இந்தத் தந்தை–மகன் மோதலின் முடிவு என்னவாகும் என்று ஆவலுடன் கவனித்தனர். நீண்ட நேரம் நடந்த கடுமையான போரின் இறுதியில், உலூபி அளித்த தெய்வீக அஸ்திரத்தை மந்திரங்களுடன் பப்ருவாகனன் எய்தான். அந்த அம்பு நேராகப் பாய்ந்து அர்ஜுனனின் மார்பைத் துளைத்தது. காந்தீவம் கையிலிருந்து நழுவி விழுந்தது. எண்ணற்ற போர்களில் வெற்றி கண்ட மகாவீரன், அந்த நாளில் தன் சொந்த மகனின் அம்பால் போர்க்களத்தில் உயிரற்று விழுந்தார். அந்தக் காட்சியைக் கண்ட சித்ராங்கதை ஓடிவந்து அர்ஜுனனின் உடலைத் தழுவிக்கொண்டு கதறி அழுதாள். "எத்தனை ஆண்டுகள் கழித்து உன்னைப் பார்த்தேன்; இவ்வாறு உயிரற்ற நிலையில் காண வேண்டியதா?" என்று புலம்பினாள். பப்ருவாகனன் தன் கைகளால் தந்தையைக் கொன்றுவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில் துவண்டுபோனான். தன் வில்லையும் அம்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு, அர்ஜுனனின் காலடியில் விழுந்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்டான். அந்தப் போர்க்களம் முழுவதும் சோகத்தின் அமைதி சூழ்ந்தது. அப்போது உலூபி மட்டும் அமைதியாக நின்றாள். அவள் தன்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்த நாகலோகத்தின் அரிய நாகமணியை எடுத்தாள். அதை அர்ஜுனனின் மார்பின் மீது வைத்து, நாக மந்திரங்களை உச்சரித்து இறைவனை தியானித்தாள். சில நொடிகளில் அந்த நாகமணியிலிருந்து பிரகாசமான ஒளி வெளிப்பட்டு அர்ஜுனனின் உடல் முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் அவரது மார்பு மெதுவாக உயர்ந்து தாழ்ந்தது. மூச்சு திரும்பியது. கண்கள் மெதுவாகத் திறந்தன. உயிரற்றுப் படுத்திருந்த அர்ஜுனன் மீண்டும் எழுந்து அமர்ந்தார். அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். அப்போது உலூபி உண்மையை வெளிப்படுத்தினாள். "பீஷ்மரை வீழ்த்தியபோது, வசுக்கள் உங்களுக்கு ஒரு சாபம் அளித்தனர். உங்கள் வீரத்தால் அல்ல, விதியின் காரணமாக நீங்கள் ஒருநாள் உங்கள் சொந்த மகனின் கையால் வீழ வேண்டும் என்பதே அந்தச் சாபம். அந்தச் சாபம் நிறைவேறாமல் இருந்ததால், இன்று இந்த நிகழ்வு நடந்தது. ஆனால் அது உங்கள் இறுதி அல்ல. சாபம் நீங்கிய உடனே, நாகமணியின் அருளால் உங்களுக்கு மீண்டும் உயிர் திரும்பும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது," என்றாள். அர்ஜுனன் அனைத்தையும் புரிந்துகொண்டார். தனது மகனின் அருகே சென்று அவனை அன்போடு அணைத்துக்கொண்டார். "நீ எந்தத் தவறும் செய்யவில்லை. தர்மத்தைக் காத்தாய். என் கட்டளையை நிறைவேற்றினாய். இன்று நான் உன்னைக் கண்டதில் பெருமைப்படுகிறேன்," என்று ஆசீர்வதித்தார். பப்ருவாகனனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. சித்ராங்கதையின் துயரமும் மகிழ்ச்சியாக மாறியது. அதன்பின் பப்ருவாகனன், தனது படைகளுடன் அஸ்வமேத யாகக் குதிரையை மரியாதையுடன் வழியனுப்பினான். அர்ஜுனனும் தனது மகனையும் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வு, விதி எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், இறைவனின் அருளும் தர்மத்தின் பாதையும் இறுதியில் மனிதனை உயர்த்தும் என்பதை உணர்த்தும் மகாபாரதத்தின் ஆழமான நிகழ்வுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻 . .