கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.07.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
வெடிகொண் டிடிப்பார் வெட்டவா ளோங்கிடுவார்
அடித்தடித்துத் தள்ளி அங்குமிங் குமிழுத்து
வேதனைகள் செய்வார் வேதநா ராயணரை
சாதனைக ளுள்ள சர்வபர நாரணரும்
எவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
இவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
அவ்வுகத்தி லுள்ள அநியாயப் பாவிகளை
இவ்வுகத்தைப் போலே எரியாமல் விடடேனோ
என்று மனதில் இதமாய் மிகவடக்கி
ஒன்று முரையாமல் ஊமைபோ லேநடந்தார்
.
விளக்கம்:
=========
வைகுண்டர் வாய் பேசாமல் கவிழ்ந்தவண்ணம் கண்களை மூடி உள்ளத்துக்குள்ளே மகிழ்ச்சியோடு அவர்களுடன் நடந்து சென்றபோது சிலர் அவரைத் துப்பாக்கி கொண்டு இடிப்பர். சிலர் வாளினால் வெட்ட ஓங்குவர். சிலர் அடித்துக் கிழே தள்ளி அங்கும் இங்கும் இழுத்து வேதனை உண்டாக்குவர். இவற்றை எல்லாம் பார்த்து வந்த வைகுண்டர் எந்த யுகத்திலும் எனக்குரிய துன்பம் இது தான். இந்த யுகத்திலும் இத்துன்பம் எனக்குரிய துன்பம் தான். என்ன செய்வது? முந்தைய யுகங்களில் உள்ள அநியாய பாவிகளை எரித்ததைப் போல இந்த யுகத்துப் பாவிகளையும் எரிக்காமல் விடுவேனோ? என்று மனதில் எண்ணித் துன்பத்தை முழுவதும் அடக்கி எந்த வார்த்தையும் பேசாமல் ஊமையைப் போன்று அவர்களுடன் நடந்தார்.
.
.
அகிலம்:
========
நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள்
கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி
ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர்
கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே
பாவிநீ சனாலே பட்ட துயரறிந்து
ஆவுமேய்த் தநாதன் ஆளவந்தார் நம்மையுமே
அய்யோஇனி நாமள் அலைந்துமிகப் போவோமென
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள்
.
விளக்கம்:
=========
இவ்வாறு வைகுண்டர் கைது செய்யப்பட்டுத் தாமரைப் பதியிலிருந்து சுசீந்திரம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது வைகுண்டரின் மீது அதிக அன்பு வைத்திருந்து சான்றோர்கள் தம்மைக் கடந்து செல்லும் பாதையில் வந்து நின்று கண்ணீர் விட்டு அழுதனர். அவர்கள் சுவாமியைப் பார்த்து சுவாமியே, இந்த ஏழைகளுக்காக இரங்கி எங்கள் சாணார் இனத்தில் வந்து பிறந்தீர். கோழைக் குல நீசன் தங்களைத் துப்பாக்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டானே. இந்த நீசப்பாவிகளினால் நாங்கள் பட்ட துன்பங்களை அறிந்து மாடு மேய்க்கும் நாராயணராகிய இவர் எங்களை ஆட்சி புரிய வந்தாரே. இனி அலைந்து போவோமே என்று கூறி உடம்பில் குத்திக் கொண்டு அவர்க்ள பூமியில் விழுந்து அழுதனர்.
.
.
அகிலம்:
========
தாய்தகப்ப னில்லையென்று தானடித்த நீசனெல்லாம்
வாயயர்ந் திருந்தானே இவர்வந்த நாள்முதலாய்
இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான்
தனியானோம் நாமளினித் தலையெடுப்ப தெக்காலம்
என்று சான்றோர்கள் சொல்லி யழுதசத்தம்
.
விளக்கம்:
=========
தாயும் தகப்பனும் இலர் என்று நினைத்து நம்மை அடித்த நீசர்கள் எல்லாரும் இவர் வந்த நாளிலிருந்து வாயடைத்து இருந்தார்களே. இனி நம்மை ஏற்றுப் பாதுகாப்புத் தர யார் இருக்கிறார்கள்? நாம் தனி ஆளாகி விட்டோமே. இனி நாமோ, நம் குடும்பமோ உயர்வு பெற்று வாழ்வது எந்தக் காலம் என்று சான்றோர்கள் எல்லாரும் சொல்லி அழுதனர்.
.
.
அகிலம்:
========
அய்யா சான்றோர்க்கு அருளல்
================================
கன்றுக் கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு
மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே
அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை
இப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும்
கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக்
கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால்
இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோ
.
விளக்கம்:
=========
கன்றுக்கு இரங்கும் பசுவைப் போன்ற வைகுண்டர், இந்தச் சத்தத்தைக் கேட்டு அவர்களை நோக்கி, மாமுனிவன் நாராயணரின் குழந்தைகளே, நீங்கள் மனம் கலங்காதீர்கள். நீங்கள் தந்தை இலர் என்று அலைய வேண்டாம். நான் ஆதி பரம்பொருளின் மேல் சத்தியமாகக் கூறுகிறேன்.
இப்பூமியில் வந்து இவ்வளவு காலமும் நான் உங்கள் கைப்பொருளுக்காகவும் கைக்கூலிக்காகவும் ஆசை கொண்டு உங்களுக்கு உபதேசம் சொல்லி இருந்தால் இந்த இடத்திற்கு நான் மீண்டு வராமல் அழிந்து போவேனாக இதை அறிந்து கொள்ளுங்கள் என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர்