theiveega kathay.

saravanan.
610 views
11 days ago
#theiveega kathay. யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் எப்படி வந்தார்? - திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் சத்துவ குணம் யாருக்கு உள்ளது என அறிந்துகொள்ள விரும்பிய பிருகு மகரிஷி, ஒவ்வொரு தெய்வத்தையும் பரிசோதிக்கச் சென்றார். திருமாலைப் பரிசோதிக்கச் சென்றபோது, திருமாலின் திருமார்பிலேயே உதைத்தார் தன் மார்பில் பிருகு உதைத்த போதும், திருமால் பிருகு மேல் கோபம் கொள்ளாமல், அவரது பாதங்களை வருடி விட்டதால் திருமாலுக்கே சத்துவ குணமுண்டு எனத் தெளிந்தார் பிருகு மகரிஷி ஆனால் அத்திருமார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமி, “ஸ்வாமி! உங்கள் மனைவியின் இருப்பிடத்தை உதைப்பவர் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லை. இதிலிருந்தே என்மேல் உங்களுக்கு அன்பு இல்லை என்று தெரிகிறது. இனி இந்தத் திருமார்பில் இருக்க நான் விரும்பவில்லை!” எனச் சொல்லித் திருமாலின் திருமார்பை விட்டுப் பிரிந்து கொல்லாபுரம் சென்றாள். பின் திருமால் திருமலையில் ஸ்ரீநிவாசனாகத் திருவவதாரம் செய்து மீண்டும் திருமகளை அடைந்தார். ஸ்ரீநிவாச கல்யாணம் நிறைவடைந்த பின், பிருகு மகரிஷி, “திருமகள் உறையும் திருமார்பை உதைத்து விட்டோமே! அது பெரிய குற்றமாயிற்றே! திருமகளிடம் நாம் இழைத்த பிழைக்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்திட வேண்டும்!” எனத் தீர்மானித்தார். அதனால் ஹேமரிஷி என்ற பெயருடன் கும்பகோணத்தில் பிருகு மகரிஷி அவதரித்தார். தான் செய்த தவறை மன்னித்தருளும்படி மகாலட்சுமியிடம் வேண்டித் தவம் புரிந்தார். மேலும் தன்னை ஏற்று அங்கீகரித்ததற்கு அடையாளமாக மகாலட்சுமியே தனக்கு மகளாக வந்து அவதரிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். அவரது தவத்துக்கும் பிரார்த்தனைக்கும் திருவுள்ளம் உகந்த மகாலட்சுமி, கும்பகோணத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு தங்கத் தாமரையின் மேல் அவதரித்தாள். வடமொழியில் கோமளம் என்றால் தங்கம் என்று பொருள். தங்கத் தாமரையில் அவதரித்தபடியால் கோமளவல்லி என்று அவளுக்குப் பெயர் சூட்டினார் ஹேமரிஷி. மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியைத் திருவரங்கநாதனுக்கே திருக்கல்யாணம் செய்து வைக்க விழைந்த ஹேமரிஷி திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தார். கோமளவல்லியும் இணைந்து தவம் புரிந்தாள். திருவரங்கத்திலுள்ள பிரணவாகார விமானத்திலிருந்தே ஒரு தேரை உருவாக்கிய அரங்கநாதன், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட அந்தத் தேரில் கும்பகோணத்துக்கு வந்து கோமளவல்லியை மணம்புரிந்தான். இன்றும் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் கோமளவல்லி மணவாளனாகக் கும்பகோணத்தில் குதிரைகளும் யானைகளும் பூட்டிய தேர் வடிவிலுள்ள கர்ப்பக்கிரகத்திலே எழுந்தருளியுள்ளான். சார்ங்கபாணிப் பெருமாள் - கோமளவல்லித் தாயாரின் திருக்கல்யாணத்தைக் கண்டு மன நிறைவடைந்த ஹேமரிஷி, பத்ரிநாத்தை அடைந்தார். அங்கே வியாசரைச் சந்தித்துத் திருமால் தனக்குச் செய்த அனுக்கிரகத்தை விவரித்து மகிழ்ந்தார். மேலும், “வேத வியாசரே, எனக்கொரு சந்தேகம். அதை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்!” என வேண்டினார். “என்ன சந்தேகம்?” என்று கேட்டார் வியாசர். “திருமால் திருவரங்கத்திலிருந்து குடந்தைக்கு வருகையில், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் வந்தார். அதெப்படி ஒரே தேரில் மெதுவாக நடக்கும் யானையையும் விரைந்து ஓடும் குதிரையையும் பூட்ட முடியும்? அவ்வாறு பூட்டினால் தேர் சீராக ஓடுமா?” என்று கேட்டார் பிருகு மகரிஷி. அதற்கு வியாசர், “வேதத்தில் சம்ஹிதை, சாகை என இரு பாகங்கள் உண்டு. சம்ஹிதை பாகத்தை ஓதினால் அது குதிரையின் ஓட்டத்தால் உண்டாகும் ஒலி போலத் தோன்றும். சாகை பாகத்தை ஓதினால் அது யானையின் நடையோசையைப் போலத் தோன்றும். இந்த ஒலிகளின் வடிவிலுள்ள வேதத்தையே திருமால் தனக்கு வாகனமாகக் கொண்டிருப்பதை உருவகப்படுத்திக் காட்டவே குதிரை, யானை இரண்டும் பூட்டப்பட்ட தேரோடு குடந்தைக்கு வந்து உமக்கு அருள்புரிந்தார்!” என விளக்கினார். கருடனும் வேத ஸ்வரூபியாகவே விளங்குகிறார். காயத்ரி மந்திரம் அவரது கண்கள், த்ரிவ்ருத் அவரது தலை, யஜுர்வேதம் அவரது திருநாமம், வேதசந்தங்கள் அவரது அங்கங்கள், திஷ்ண்யம் எனும் வேதப்பகுதி அவரது நகங்கள், வாமதேவ்யம் அவரது உடல், ஸ்தோமம் அவரது ஆத்மா, பிருஹத், ரதந்தரம் ஆகியவை அவரது இறக்கைகள், யஜ்ஞாயஜ்ஞம் அவரது வால். வேதமே தனக்கு வாகனமாக உள்ளதை உணர்த்தவே, வேத ஸ்வரூபியான கருடன் மீதேறி, கருடவாகனத்தில் திருமால் காட்சியளிக்கிறார். ‘வி’ என்றால் வடமொழியில் பறவை என்று பொருள். வேதஸ்வரூபியான கருடன் என்னும் பறவையைத் தனக்கு வாகனமாய்க் கொண்டபடியால் திருமால் ‘வி-க்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 79-வது திருநாமம்.“விக்ரமாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுடைய அனைத்துப் பயணங்களிலும் திருமால் வழித்துணையாக உடன்வந்துக் காத்தருள்வார். ஆயிரம் நாமங்களால் அனந்தனைப் பணிவோம் 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
saravanan.
568 views
11 days ago
#theiveega sinthanay. இருந்து துழாவி (திருவாய்மொழி அமுதம்) - ஸ்ரீ.உ.வே. வ.ந.கோபால தேசிகாசார்யர் ஸ்வாமி, ஒப்பிலியப்பன் ஸந்நிதி மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும் கண்ணை உள்நீர் மல்க நின்று கடல் வண்ணன் என்னும் அன்னே என் பெண்ணைப் பெருமயல் செய்தார்க்கு என் செய்கேன் பெய்வளையீரே நம்மாழ்வார் - திருவாய்மொழி 4.4.1 பெய்வளையீர் - அழகிய வளைகளை அணிந்த பெண்களே மண்ணை இருந்து துழாவி - (என் பெண்ணான பராங்குச நாயகி) பூமியில் உள்ள மண்ணைத் தன் கைகளால் துழாவி இது வாமனன் மண் என்னும் - இந்த மண், எம்பெருமான் வாமனன் ஆக அவதாரம் செய்து, தானம் பெற்ற மண் என்கிறாள். விண்ணை - மேலே ஆகாயத்தை நோக்கி தொழுது - கைகளைக் கூப்பிக்கொண்டு அவன் மேவு - என் அப்பன் நித்யவாசம் செய்கின்ற வைகுந்தம் என்று - ஸ்ரீவைகுண்டம் என்று சொல்லி கை காட்டும் - மேலே கையைக் காட்டுகின்றாள் உள்நீர் - உள்ளே இருக்கும் ஜலம் கண்ணை மல்க நின்று - கண்களிலிருந்து வெளியே ததும்ப கடல் வண்ணன் என்னும் - கடல் போன்ற கருமை நிறம் உடையவன் என்று சொல்கிறாள் அன்னே - ஐயோ! (அம்மா!) என் பெண்ணை - என்னுடைய இளம் பெண்ணை பெருமயல் செய்தார்க்கு என் செய்கேன் - இப்படிக் காதல் பித்தேறும்படிப் பண்ணினான் பெருமான். அதற்கு நான் என்ன செய்வேன்? இந்தப் பதிகத்தில் ஆழ்வார் பெண் தன்மையை ஏறிட்டுக் கொள்கிறார். அதாவது, தம்மை நாயகியாகவும், திருமாலை நாயகன் ஆகவும் மனதில் நினைத்துக் கொண்டு, இந்தப் பதிகத்தைப் பாடுகிறார். இதற்கு வடமொழியில் நாயகி பாவம் அல்லது நாயக நாயகி பாவம் என்று பெயர். ஆழ்வார் இப்படிப் பெண் தன்மையை ஏறிட்டு கொள்ளும்போது, வைணவர்கள் அவரை பராங்குச நாயகி என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆழ்வார் பெண் தன்மையில் இப்படிப் பாடும் பதிகங்களும் மூன்று வகைப்படும். 1. ஆழ்வாரான பராங்குச நாயகி தானே பாடும் பதிகம் 2. பராங்குச நாயகியின் தாய், தன் மகளின் நிலைமையைச் சொல்வதாக அமைந்துள்ள பதிகம் 3. பாங்குச நாயகியின் தோழி அந்தப் பராங்குச நாயகியின் நிலைமையைச் சொல்வதற்காக அமைந்துள்ள பதிகம். இந்தப் பதிகம் பராங்குச நாயகியின் தாய், தன் மகளின் நிலைமையைச் சொல்வதாக அமைந்துள்ளது. சென்ற பதிகத்தில், ஆழ்வார் திருமாலுடன் சேர்ந்து கலந்ததால் உண்டான ஆனந்த அனுபவத்தில் திளைத்தார். நாம் நம் குழந்தைகளைச் சீண்டி விளையாடுகிறோம் அல்லவா? குழந்தை அழத் தொடங்கினால், அதற்கு வேண்டியதைக் கொடுத்து, குழந்தையைச் சமாதானப் படுத்துகிறோம். அதைப்போலவே, திருமாலுக்கும் தன் அடியார்களைச் சீண்டி விளையாடுவதில் ஆசை. அதனால் ஆழ்வாருடைய மானசீக அனுபவத்திலிருந்து விலகிவிட்டான். பெருமானுடைய அனுபவம் தொடர்ந்து கிடைக்காமல், விரக தாபத்தால் வேதனைப்பட்டார் ஆழ்வார். அந்த வேதனையை வெளிக் காட்டுவதாக அமைந்துள்ளது இந்தப் பதிகம். பராங்குச நாயகியின் வேதனையான இந்த நிலைமையை, அவளுடைய தாய் இந்தப் பதிகத்தில் விவரிக்கிறாள். ஒருவன் தான் சேமித்து வைத்த செல்வத்தை எல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்திருந்தான். ஒருநாள் அந்தப் பணமூட்டை தொலைந்து விட்டது. அழுது அரற்றினான் அந்தப் பேதை. பிறகு வீட்டில் உள்ள மூட்டைகளை எல்லாம் அவிழ்த்து, அவிழ்த்துப் பார்த்தான். ஒருக்கால் அதுதான் பணமூட்டையோ என்று. அதுபோலவே பராங்குச நாயகியும் பெருமானைப் போலவே உள்ள வஸ்துக்களைப் பார்த்து, அவை பெருமாள் தானோ என்று பிரமிக்கிறாள். அதாவது பெருமானைப் போன்ற கருமை நிறம் உடையவையான ஆகாயத்தில் உள்ள மேகம் நீலக்கடல், நீல ரத்தினம், பச்சை மரங்களையும் காடுகளையும் கொண்ட பச்சை மாமலை அவனுடைய கண்களை நினைவூட்டும் தாமரைப் பூக்கள், சிவந்த வாயை நினைவூட்டும் கோவைக்கனி, வெண்மையான பற்களை நினைவூட்டும் முத்துக்கள் போன்றவை மறுபடியும் பெருமானோடு சம்பந்தப்பட்ட வஸ்துக்களைப் பார்த்து, அவற்றில் அவனை கண்டு பிரமிக்கிறாள். அதாவது, கண்ணபிரான் ஊதிய புல்லாங்குழல் அவன் சூடியிருந்த மயிற்பீலி, அவன் மேய்த்து பசுமாடுகள், அவன் திருடித்தின்ற வெண்ணெய் முதலியன. இவை எல்லாவற்றையும் கண்டு, தன் நாயகன் திருமால்தானோ என்று முதலில் பிரமிக்கிறாள் பராங்குச நாயகி. பிறகு அவல் அல்லன் என்று தெரிந்து மீண்டும் துக்கத்தில் ஆழ்கிறாள். சீதையைப் பிரிந்த ராமபிரான், பித்துப் பிடித்தவனாக ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கும், ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கும், ஒரு நதியிலிருந்து மற்றொரு நதிக்கும் ஓடி அலைந்தார். கடம்பை மரம், வில்வமரம் மருதமரம், அசோகமரம், யானை, புலி, மான் எல்லாவற்றையும் சீதையைக் கண்டாயோ? என்று கேட்டு அழுதார். சுற்றிச் சுழன்று சீதை தென்படுகிறாளோ என்று பார்த்தார். மேலே வானத்தில் பார்த்தார். கீழே பூமியில் பார்த்தார். பித்துப் பிடித்தவர் ஆனார். (ஆரண்யகாண்டம் - 60) அப்படி சீதையைப் பிரிந்து ராமன் பட்டபாட்டை, இப்போது திருமாலைப் பிரிந்த பராங்குசநாயகி படுகிறாள். இந்தப் பதிகம் முழுவதிலும் நம்மாழ்வாரான பராங்குச நாயகியின் தாயார், தன் மகளின் பித்தான நிலையைத் தோழிகளிடம் அங்கலாய்ப்புடன் கூறுகிறாள். தோழிகளே, நீங்கள் உள்ளமும் உடலும் பூரிப்புடன் கைகளில் அழகிய வளைகளை அணிந்து இருக்கிறீர்கள். ஆனால் என் மகளோ எம்பெருமான் மேல் பித்துப் பிடித்து, அவன் காட்சி தராததால் உடலும் உள்ளமும் மெலிந்து இருக்கிறாள். அவள் கைகளும் மெலிந்து, கை வளைகள் நழுவி விழுந்துவிட்டன. எங்கும் மழை பெய்து, வெள்ளக் காடாக இருக்கும் நிலையில், பூமியில் நடக்கும் போது, கால்கள் நனையாமல் இருப்பவர்களும் உண்டோ? அதுபோல, இங்கே எல்லாரும் திருமாலை நினைந்து பித்தாக இருக்கின்றார்கள். ஆனால் நீங்களோ, திருமாலைப் பற்றிய நினைப்பு இல்லாமல், அவன் காட்சி தரவில்லையே என்ற வருத்தமும் இல்லாமல், இப்படிப் பூரிப்புடன் இருக்கிறீர்கள். திருமாலை நினைக்காமல் இருக்கும் இந்த வித்தையை நீங்கள் எங்கே கற்றீர்கள்? அந்த மாயத்தைச் சொல்லுங்கள். திருமால் மேல் பித்தாக இருக்கும் என் மகளையும் சரி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். இப்போது என் மகள், மனம் ஒரு நிலையில் இல்லாமல், ஓர் இடத்தில் நிற்காமல், நடக்காமல், படுக்காமல் அலைந்து கொண்டே இருக்கிறாள். கீழே பூமியைக் கைகளால் அளைந்து கொண்டே இருக்கிறாள். பழங்காலத்தில் கிராமங்களில், வெய்யிலின் சூட்டைத் தணிப்பதற்கு, ஆண்களும், பெண்களும் சந்தனத்தைத் தங்கள் உடலில் பூசிக் கொள்வார்கள். அதுபோல, காதலன் அல்லது கணவன், தன்னை விட்டு வேறு ஊருக்குச் சென்ற போது, அவனைப் பிரிந்த தாபம் தாங்க முடியாமல், பெண்கள் தங்கள் மார்பில் வெப்பத்தைத் தணிக்கச் சந்தனம் பூசிக் கொள்வார்கள் என்று கவிகள் கூறுகின்றனர். இப்படிப் பிரிவாற்றாமையால் ஏற்படும் தாபத்துக்கு, வடமொழியில் விரக தாபம் என்று பெயர். அதுபோல, என் மகளுக்கு பூமியைப் பார்த்ததும், திருமாலின் ஞாபகம் வந்து விட்டது. அதனால் அவனுடன் சம்பந்தப் பட்ட பூமி என்று அந்த மண்ணை அடிக்கடிக் கைகளால் துழாவிக் கொண்டே இருக்கிறாள். விரக தாபத்துக்குச் சந்தனம் ஒரு மருந்து போல, இவளுக்கு இந்த மண்ணும் ஒரு மருந்தாக இருக்கிறது. என் மகள் இந்த பூமி. என் திருமால் வாமனனாக அவதாரம் செய்து, மகாபலியிடம் தானமாகப் பெற்றது அல்லவா. என் அப்பனுடைய எளிமை தான் என்ன! தன்னைச் சரணம் அடைந்த தேவர்களுக்கு உதவுவதற்காக, தன்னையே தாழ்மைப் படுத்திக் கொண்டு, மகாபலியிடம் மூன்றடி மண்ணை தானமாக வேண்டி நின்றான். பிறகு த்ரிவிக்ரமனாகப் பேருருவம் எடுத்து வளர்ந்தான். தன் பாதங்களால் எல்லா உலகங்களையும், இந்த மண்ணையும் அளந்தான். இப்படி, அவனுடைய பாதம் படும்படியான பாக்யம் செய்தது இந்தப் பூமி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து தத்துவங்களும் ஐம்பெரும் பூதங்கள் (பஞ்ச பூதங்கள்) என்று சொல்லப்படுகின்றன. இவற்றுள், பூமி அல்லது நிலத்திற்கு உண்டான தனிப்பெருமை மணம் அல்லது வாசனை ஆகும். இந்தக் குணம் மற்ற நான்கு பூதங்களுக்கும் கிடையாது. அதனால் தான் நாம் இன்றும் மண் வாசனை என்று சொல்லுகிறோம். மண்ணுக்கு இந்த வாசனை எப்படி வந்தது? திருமாலை நறுமணம் உடையவன், இனிமையானவன் என்று வேதம் புகழ்கிறது. (ஸர்வ கந்த: ஸர்வ ரஸ: சாந்தோக்ய உபநிஷத் -3-14-2), அந்த நறுமணமுடைய திருமாலின் பாதம் தன் மேல் பட்டதால் தான், பூமிக்கும் மணம் அல்லது வாசனை வந்தது. விச்வாமித்ர முனிவரின் சொல்படி, ராமபிரான் தாடகையை வதம் செய்த பிறகு, அவர்கள் சித்தாச்ரமம் என்னும் புனிதத் தலத்திற்கு வந்தனர். அதன் மகிமையைப் பற்றி விச்வாமித்ரர் திருமால் தவம் செய்து சித்தி அடைந்த தலம் ஆதலால், இந்தப் புனித பூமி சித்தாச்ரமம் என்று அழைக்கப் படுகிறது. வாமன மூர்த்தியாக அவதாரம் செய்த போது, இங்குப் பெருமான் இருந்தான். அவன் பாதம் பட்ட இந்தப் பூமியை நான் முகர்ந்து கொண்டு கிடக்கிறேன் என்றார். (...வாமனஸ்ய உபபுஜ்யதே-ராமாயணம் பாலகாண்டம் -29-23). விச்வாமித்ர முனிவர், வாமனன் பாதம் பட்ட சித்தாச்ரமத்து மண்ணை முகர்ந்து கொண்டு கிடந்ததைப் போல, என் மகள் பராங்குச நாயகியும், வாமனன் பாதம் பட்ட மண் என்று இந்தப் பூமியைத் துழாவிக் கொண்டிருக்கிறாள். பிறகு மேலே வானத்தைப் பார்க்கிறாள் என் மகள். வாமனனாக அவதாரம் செய்த காலம் முடிந்து விட்டது. அதனால் அவனை இப்போது தரிசிக்க இயலாது. ஆனால், எப்போதும் அவன் நித்ய வாசம் செய்யும் வைகுண்டம் அல்லவா இது என்று அந்த வானத்தை நோக்கிக் கை கூப்பித் தொழுகிறாள். ஆனால் மிகவும் நலிந்த நிலையில் என் மகளால் பேசக் கூட முடியவில்லை. ஆகவே வைகுண்டம் என்று, அந்த வானத்தை நோக்கிக் கையை மட்டும் காட்டுகிறாள். எல்லாமே பெருமானுடைய சொத்து. ஆனால், மகா ப்ரளயத்தின் போது, எல்லா உலகங்களுமே அழிந்து விடும். வைகுண்டம் மட்டும்தான் அழியாமல் இருக்கும். அதனால், வைகுண்டம் நித்ய விபூதி என்று அழைக்கப்படும். (நித்ய = அழியாதது, விபூதி = சொத்து). இந்த உலகங்கள் லீலா விபூதி என்று அழைக்கப்படும். (லீலா விபூதி = படைத்தல், அழித்தல் போன்ற பகவானுடைய லீலைகளால் ஏற்படுபவை). முதலில் இந்தப் பூமியாகிற பகவானுடைய லீலா விபூதியைப் பார்த்த என் மகள், பிறகு நித்ய விபூதி ஆகிய வைகுண்டத்தைப் பார்க்கிறாள். அங்கே வைகுண்டத்தில், மோட்சத்தை அடைந்த முக்தர்களும், நித்ய சூரிகளும் எப்போதும் எம்பெருமானை தரிசித்துக் கொண்டே இருக்கிறார்களே; நமக்கு அந்த பாக்யம் இன்னும் கிட்டவில்லையே என்று மறுகுகிறாள் என் பெண். இதை நினைத்து நினைத்து, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாகப் பெருகுகின்றது. இப்படித் தன் கண்களில் இருந்து கண்ணீர் கடல் போலப் பெருகுவதைக் கண்டாள் என் பெண். உடனே கடல் போன்ற கருநீல நிறம் கொண்ட பெருமானுடைய நினைவு வந்து விட்டது. கடல் வண்ணனே என்று அழைக்கிறாள். முதலில் திருமாலுடன் சம்பந்தப் பட்ட பூமியையும், ஆகாயத்தையும் பார்த்து, அவனுடைய நினைவு என் மகளுக்கு வந்தது. இப்போது, அவனைப் போன்ற நிறத்தை உடைய கடலை (கண்ணீர்) வெள்ளம் பார்த்து, அவனுடைய நினைவு வருகிறது. ஐயோ, என் பெண்ணை இப்படி மயக்கி, பித்தேறும்படிச் செய்து விட்டானே திருமால். இவள் துக்கப்படுவது பெருமானுக்குத் தெரியாமல் இருந்தால், அவனிடம் இதைச் சொல்லலாம். ஆனால் அவனோ எல்லாம் ஏறிந்தவன் என்று வேதங்கள் போற்றுகின்றன. (ஸர்வஜ்ஞ: ஸர்வவித் - முண்டக உபநிஷத் - 2-7) அதனால் இவள் துக்கத்தை அறியாதவனா அவன்? மேலும், இவள் துக்கத்துக்குக் காரணமே அவன் தானே. அவன் தரிசனம் தராததால் தானே, இவள் துக்கக் கடலில் ஆழ்ந்து கிடக்கிறாள். இப்போது நான் என்ன செய்வேன்? திருமாலை இங்கு வரும்படிச் செய்வேனா? அது என்னால் எப்படி முடியும்? இவளுக்கு மகளே பொறுத்திரு, காலம் கனிந்து வரும் என்று ஆறுதல் கூறுவேனா? அப்படிக் கூறினால், தேறியிருக்கும் நிலையிலா இருக்கிறாள்? நடப்பது நடக்கட்டும் என்று நான் தான் பொறுத்திருப்பேனா? என் மகளின் துக்கத்தைக் கண்டு, என்னால் அது எப்படி முடியும்? இப்படியெல்லாம் தோழிகளிடம் கூறி அலற்றுகிறாள் பராங்குசநாயகியின் தாய். 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
saravanan.
674 views
5 months ago
#theiveega kathay. பசியைப் போக்கிய சூரிய பகவான்.... அட்சயம் என்றால் வளருதல். முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் அளிக்கும் போது கூறப்படும் நல்ல வார்த்தை என்னவென்றால், நீ தொட்டதெல்லாம் அட்சயப் பாத்திரம் போல் வெற்றி பெறவேண்டும் என்பர். அட்சய பாத்திரம் அல்லது அமுதசுரபி எனப்படும் இந்த பாத்திரத்தில் உணவு இருந்து கொண்டே இருக்கும். இது நாம் அறிந்ததே. மகாபாரதத்தின் படி அட்சய பாத்திரம் தர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால் எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மை உடையது. இந்த அட்சயப் பாத்திரம் முதன் முதலில் யாரிடம் இருந்து யாருக்கு வழங்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். இந்த அட்சயப் பாத்திரத்திற்கு பல கதைகள் உண்டு. அதில் முக்கியமானது பாண்டவர்களின் கதை. மகாபாரதத்தில் பிரபலமானது சூதாட்டம் தான். பாண்டவர்கள் ஏமாந்து நின்ற தருணம் அது. இப்படி சூதாட்டத்தில் நாட்டை இழந்துவிட்ட பாண்டவர்கள் திரௌபதியுடன் வனவாசத்திற்கு புறப்பட்டனர். பாண்டவர்களுடன் சில அந்தணர்களும், அவர்களது பத்தினிகளும் சென்றனர். அன்று இரவு கங்கை கரையில் இருந்த ஒரு ஆலமரத்தடியில் அனைவரும் தங்கினர். அப்போது தர்மர் மட்டும் மிகுந்த வேதனையுடன் இருந்தார். காரணம் அவர்களை நம்பி இத்தனை நபர்கள் இருக்க, அனைவரும் பட்டினியுடன் இருக்கின்றனரே என்ற கவலை அவருக்கு. தர்மர் கூறினார், அந்தணர்களே! செல்வத்தை இழந்த நாங்கள், காட்டில் கிடைக்கும் காய்கனி வகைகளை தான் சாப்பிட்டு வாழ போகிறோம். ஆனால் விலங்குகளும் அரக்கர்களும் வாழும் வனப்பகுதியில் உங்களால் எப்படி வாழ முடியும்? உங்களால் இங்கு வாழவே முடியாது. தயவு செய்து நாட்டுக்கு திரும்பி விடுங்கள், என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அதற்கு அந்தணர்கள், தர்மரே! எங்களுக்காக நீங்கள் மனம் வருந்த வேண்டாம். உங்களுக்கு பாரமாக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். தங்களின் நன்மைக்காக ஜெபம் மற்றும் தவம் செய்திடுவோம். எங்களுக்கு தேவையான உணவை நாங்களே தேடிக் கொள்வோம். மனதிற்கு இனிமை தரும் நல்ல விஷயங்களையும் கதைகளையும் பேசிக்கொண்டு பொழுதை நல்ல முறையில் உங்களுடன் கழிப்போம். அந்தணர்கள் இவ்வாறு கூறியவுடன், அவர்களின் அன்பை கண்டு மனம் நெகிழ்ந்தார் தருமர். நாளாக நாளாக அவர்கள் மிகுந்த வறுமையில் இருந்தனர். சரியான உணவு இல்லாமல் தவித்து வந்தனர். இவர்களின் வறுமையை கண்ட கிருஷ்ணர், அவர்களது பசியை போக்க எண்ணினார். பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் அட்சயப் பாத்திரத்தின் மகிமையையும், அது பெறுவதற்கு உண்டான வழிமுறைகளையும் போதித்தார். இராமாயணத்தில் அகத்திய முனிவர், சூரிய உபாசனை செய்யும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை ஸ்ரீராமனுக்கு உபதேசிப்பார். அதுபோல் சூரிய பகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை சொல்லுங்கள் என்று கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்களிடம் கூறினார். பஞ்சபாண்டவர்களும் பகவான் கிருஷ்ணரின் உபதேசத்தின் படி சூரிய பகவானை நினைத்து ஆதித்ய இருதயம் மந்திரத்தை உச்சரித்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தை மெச்சிய சூரிய பகவான் அவர்கள் முன்பு தோன்றினார். அட்சயப் பாத்திரத்தை கொடுத்தார். அட்சய பாத்திரத்தின் மகிமையையும் சொன்னார். இந்த பாத்திரத்தில் அன்னம், வேறு உணவு பதார்த்தங்களை நிரப்பினால் அப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் சுரந்து கொண்டே இருக்கும். உணவருந்திய பின்னர், எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து அட்சய பாத்திரத்தை கழுவி வைத்து விட வேண்டும். மறுநாள் சூரிய உதயத்துக்கு பிறகு தான் அது மீண்டும் உணவு அளிக்கும் என்று அதன் பலனை சொல்லி மறைந்தார் சூரிய பகவான். இதையடுத்து, தர்மர் திரௌபதியிடம் அதைக் கொடுத்தார். அதன் மூலம் அவள் அனைவருக்கும் உணவு பரிமாறினாள். அட்சய பாத்திரம் அள்ள அள்ள குறையாதது போல் உங்கள் வாழ்க்கையிலும் செல்வங்களும் வளமும் சேரட்டும். இந்த ஆசீர்வாதத்தை எல்லோருக்கும் கொடுங்கள். உங்கள் வாழ்வும் மகிழ்ச்சி என்றும் மலர்ச்சியோடு இருக்கட்டும். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
saravanan.
1.6K views
6 months ago
#theiveega sinthanay. சப்தமி விரத முறை (விஸ்வகர்ம சப்தஹ விரதம்) ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் ரத சப்தமி விரதம், நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களாலும் செய்யப்படும் சூரிய வழிபாடாக அறியப்படுகிறது. இருப்பினும், ஏழு நாள் விரத முறையில் சில வேத மக்கள் மட்டுமே இந்த விரதத்தைப் பின்பற்றுகிறார்கள். ரத சப்தமி என்று அழைக்கப்படும் திருவிழா, பொதுமக்களுக்கு சூரியனின் திருவிழா என்று அறியப்படுகிறது. #ரத_சப்தமி என்று அழைக்கப்படும் திருவிழா, வெறும் ஒரு நாள் திருவிழா அல்ல, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுள் வழிபடும் #ஏழுநாள்_திருவிழா. இது மாசி மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் ஏழாவது நாளில் ரத சப்தமி செய்வதன் மூலம் சூரிய வழிபாட்டுடன் தொடங்கி, மாசி மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் த்ரயோதசி வரை தொடர்கிறது, ஒரு நேரத்தில் ஒரு தெய்வத்தை வணங்கி, கடைசி நாளான த்ரயோதசியில், உயர்ந்த கடவுள், பிரஜாபதி, கொடையாளர் மற்றும் படைப்பாளரான விராட் விஸ்வகர்மாவின் வழிபாடு, உண்ணாவிரதம் மற்றும் தியாகத்துடன் முடிவடைகிறது. மங்களகரமான மாசி மாதத்தில் வரும் இந்தப் பண்டிகை, அனைத்து இந்துக்களுக்கும், குறிப்பாக ஏழு நாட்கள் நீடிக்கும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். விஸ்வகர்ம சம்ஹிதையில், ஐந்து பிரம்மாக்கள் மற்றும் ஐந்து முனிவர்களுடன் கூடிய, முழுமுதற் கடவுளான விராட் விஸ்வகர்மாவை வழிபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விழாவைக் கொண்டாடும் சடங்குகள் பின்வருமாறு: ஏழாம் நாளில், சூரியனை ஒரு வேலை அமைத்து வழிபட வேண்டும் (விஸ்வஞான பிரம்மம்), எட்டாம் நாளில், இந்திரனை அதன் அருகில் மற்றொரு வேலை அமைத்து வழிபட வேண்டும் (ஷில்பி பிரம்மம்), ஒன்பதாம் நாளில், பிரம்மனை மற்றொரு கலசத்தில் அழைத்து வழிபட வேண்டும் (த்வஷ்ட பிரம்மம்), பத்தாம் நாளில், விஷ்ணுவை ஒரு வேலை அமைத்து வழிபட வேண்டும் (மாயா பிரம்மம்), ஐந்தாம் நாளில், சிவனை ஐந்தாவது கலசத்தை அமைத்து வழிபட வேண்டும் (மனுபிரம்மம்), பன்னிரண்டாம் நாளில், பஞ்ச பிரம்மங்களுடன் வெளிப்படாத கடவுள்களும், அதாவது ஐந்து ரிஷிகள், அதாவது #சனக_பிரம்மர்ஷி, #சனாதன_பிரம்மர்ஷி, #அஹபூவன_பிரம்மர்ஷி, #பிரத்ன_பிரம்மர்ஷி மற்றும் #சுபர்ண_பிரம்மர்ஷி ஆகியோரும் கலசத்தில் அல்லது தனித்தனி தாம்பூலங்களில் வழிபடப்படுகிறார்கள். அதை வழிபட வேண்டும். கடைசி நாளான திரயோதசியில், பஞ்ச பிரம்மாக்கள், ஐந்து ரிஷிகளுடன் சேர்ந்து, படைப்பாளரான விராட விஸ்வகர்மாவின் கனவில் வழிபட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஸ்வகர்ம சம்ஹிதையின்படி, கடைசி நாளான திரயோதசியில், சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் மற்றும் சூரியன் ஆகிய அனைவரும், உயர்ந்த கடவுள், உயர்ந்த கடவுள் ஆகிய விராட விஸ்வகர்மாவின் பாதங்களைக் கழுவி வணங்குகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதங்களின் போதனைகளின்படி, நாம் வணங்கும் உயர்ந்த கடவுள், விஸ்வகர்மா, அனைத்து கடவுள்களுக்கும் தந்தை, யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்களின் தந்தை என்பதால், இந்தப் பண்டிகை பொதுவில் கொண்டாடப்படுகிறது. இந்த வழியில், ஐந்து வேதங்களும் படைப்பாளர், பிரஜாபதி மற்றும் உயர்ந்த கடவுள் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தந்தை என்று கூறுகின்றன. இறுதியில் அனைத்து செல்வங்களையும் இரட்சிப்பையும் அளிக்கும் ஒரே கடவுள் பகவான் விஸ்வகர்மா பரமாத்மா. ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் முக்தியை அடைவதே. எனவே, இந்தப் பண்டிகையை ஒரு பொது விழாவாகவும் கொண்டாட வேண்டும். பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள் எட்டு செல்வங்களையும் அடைந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், இந்த உலகில் மகிழ்ச்சியையும் மறு உலகில் முக்தியையும் அடைவார்கள்- இதைத்தான் பிரஜாபதி த்வஷ்டவிஷ்வகர்மா தனது சீடர்களான ரிபுவிடம் கூறியுள்ளார். ஆனால் நமது அறியாமையால், நாம் நமது பண்டிகைகளை மறந்துவிட்டோம். இது ஒரு வேத விழா. இன்று, இந்தப் பண்டிகை மறைந்து வருகிறது. சில மாநிலங்களில், விஸ்வகர்மா வம்சாவளியைச் சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே இதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் சனாதன இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இந்தப் பண்டிகையின் பலன்களைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன். இது இப்போது வெளிச்சத்திற்கு வர வேண்டும், இது சிறந்த அறிஞர்கள் மற்றும் சுவாமிஜிகள் மூலம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும், ஆச்சாரியர்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது நாட்காட்டியிலும் சேர்க்கப்பட வேண்டும், அதன் தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அப்போதுதான் அதன் முக்கியத்துவம் புரியும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும், அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும். 🌹🌹🌹
saravanan.
652 views
6 months ago
#theiveega kathay. சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால், இதை மனதிற்குள் உருவேற்று; வெளியிடாதே...' என்று கூறினார். மறுநாள், ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு, உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ஸ்ரீராமர், திடுக்கிட்டார். காரணம், அங்கே, ஸ்ரீராமர், ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து, வீதிவீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். கோபமடைந்த ராமர், ஆஞ்சநேயரை வரவழைத்து, 'என்ன காரியம் செய்கிறாய்... பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து சொல்கிறாயே...' என்றார். அமைதியாக ஸ்ரீராமரை நமஸ்கரித்து, 'தெய்வமே... அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன்; தங்கள் உத்தரவை மீறவேயில்லை. வேண்டுமானால், அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து, தாங்களே விசாரிக்கலாம்...' என்றார், ஆஞ்சநேயர். உடனே, சிலரை வரவழைத்து, 'ஆஞ்சநேயன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?' எனக் கேட்டார், ஸ்ரீராமர்.கேள்வி ஒன்றுதான்; ஆனால், பதில்கள் தான் பலவிதமாக வந்தன... 'புரியவில்லை...' என்றனர். சிலர், 'மாருதி, ஏதோ மனம்போன போக்கில் உளறிக்கொண்டு போனான்...' என்றனர், மற்றும் சிலர். இன்னும் சிலரோ, 'அனுமன் பேசியது புரியாவிட்டாலும், நகைச்சுவையாக இருந்தது...' என்றனர். இவ்வாறு பலரும் பலவிதமாக கூற, பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும், 'ஸ்ரீராமச்சந்திர பிரபுவே... அனுமன் உபதேசித்தது, சாதாரண மந்திரமா... பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே...' என்று சொல்லி, மெய் சிலிர்த்தனர். விதை ஒன்று தான்; நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட, அவ்வப்போது நீர், உரம் இட்டு, பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல, நல்ல விஷயங்களை பார்த்தாலும் /கேட்டாலும், அது, பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து பயன் தருகின்றது. 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨