கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.07.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
கத்தியும் பட்டுக் கதறியொரு வன்சாகப்
பார்த்திருந்த நீசப் பாதக னேதுரைப்பான்
நாற்றிசைக்கு மேராதே நல்மறையோன் பட்டதுதான்
ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும்
தோச மீதல்லவொரு வேதியனைக் கொன்றதுதான்
என்னபோ லாச்சு யாம்நினைத்த காரியங்கள்
மன்னன் கலிராசன் மாசறட னுமயர்ந்து
ஞாயமீ தல்லவென்று நடந்தா னரண்மனைக்கு
தோசமொன் றேற்றோமெனச் சொல்லி மிகப்போனான்
.
.
விளக்கம்:
==========
இதைப் பார்த்த பாதகனான கலி நீசன் சரடனை நோக்கி உரைக்கலானான். சரடனே, நான்கு திசை மக்களும் நல்ல பிராமணன் இறந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே, ஆயிரம் பசுக்களைக் அடித்துக் கொன்றாலும் அதைவிட மகாபாவம் ஓர் அந்தணனைக் கொல்வதுதான் அல்லவா? நாம் நினைத்துச் செய்த எல்லா சோதனைகளும் என்னவோல் போல் விபரீதமாக முடிந்து விட்டனவே என்று கூறிடவும், சரடன் மனம் சோர்ந்தபடி நின்றான். அந்தணன் இறந்தது நியாயமானது இல்லை. தோசமான பெரும் பாவத்தை ஏற்று விட்டோமே என்று என்று கூறி மன்னன் அரண்மனைக்குத் திரும்பினான்.
.
.
அகிலம்:
========
அப்போது சனங்கள் அல்லோரு மேதுரைப்பார்
இப்போதிப் பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான்
என்றுசொல்லி நீசன் ஏற்ற சறடனுமே
ஒன்றுமுரை யாடாமல் உள்ளபடை யத்தனையும்
கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள் ளம்மானை
,
விளக்கம்:
==========
அப்பொழுது அங்கு நின்ற மக்கள் எல்லாரும், இப்போது இப்பேயனுக்கு இச்சோதனையும் ஒரு நல்ல வெற்றியாகி விட்டது என்று கூறினர். நீசனான சறடன் இதை ஏற்றுக்கொண்டும் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் அங்கிருந்த படைகளைக் கூட்டிக் கொண்டு அரண்மனைக் கோட்டைக்குச் சென்றான்.
.
.
அகிலம்:
=========
வேட்டைப் பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்கு
பார்க்கவந் தசனங்கள் பலதிசைக்கு மிவ்விசளம்
ஆர்க்கு மிகவே அறிவித் தகன்றனரே
அப்போ சுவாமி அருகில் மிகவாழும்
மெய்ப்பான சனங்கள் மெத்தசந் தோசமதாய்
.
விளக்கம்:
==========
அங்கே வேடிக்கை பார்க்க வந்த மக்களின் பலர், கடுவாயை வைத்து பேயனை வேட்டையாட நினைத்த வேட்டை தோல்லியைத் கண்டது, பேயனுக்கே வெற்றி கிடைத்தது என்னும் செய்தியைப் எல்லாத் திசை மக்களுக்கும் தெரிவித்தபடி சென்றனர். அப்போது அங்கே சுவாமி அருகில் வாழ்ந்து வந்த உண்மை அன்புள்ள மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் கூறலாயினர்.
.
.
அகிலம்:
========
இண்ணத் தறுவாய் ஈசுரன் காத்ததுதான்
அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான்
என்று மனமகிழ்ந்து எம்பெருமாள் நாரணர்க்கு
அன்று விவரம் அறிவித்தா ரன்போர்கள்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
ஆட்டுவோ மாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோ
.
விளக்கம்:
==========
இன்று இத்தருணத்தில் தங்களைக் காத்தது ஈசுரன்தான் என்றும், அண்ணல் காயாம்பு அச்சுதனார்தாம் தங்களைக் காத்தார் என்றும் பல வகையாகத் தமது உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை வெளியிட்டனர். இதைக்கேட்டு வைகுண்டர் கீழ்ச்சுண்டுக்குள் சிரித்து மனதுள் மகிழ்ந்து எல்லாரையும் ஆட்டுவான் ஆட்டுவிக்கின்றான், அப்படி அல்லாமல் வேறு உள்ளதோ என்று இப்படியே பல உபதேசங்களைச் சொல்லி கொண்டிருந்தார்.
.
.
அகிலம்:
========
இப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலே
முப்படித்தான் ஈசர் மொழிந்தநா ளதுவரைக்கும்
இருப்போ மெனச்சொல்லி இருந்தார்கா ணம்மானை
அருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதற்பின்
என்ன விசாரம் இப்பேய னுக்குகெனவே
.
விளக்கம்:
==========
முன்னர் நாராயணர் சொன்ன நாள்வரைக்கும் இங்கு இருப்போம் என்று நினைத்து அப்படியே அய்யா அங்கே அமர்ந்து இருந்தார். சில நாள்கள் சென்ற பின் கொலைகார நீசன் இந்த பேயனை என்ன செய்யலாம் என தனிமையில் இருந்து ஆலோசித்தான்.
.
.
அகிலம்:
--------------
பூவண்டர் பரிந்துரை:
===================
தன்னே யிருந்து தானினைக்கும் வேளையிலே
முன்னே யொருயுகத்தில் மூவரிய நாரணர்க்கு
அன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்த
ஆயர் குடியில் அவதரித்தக் கோமானில்
தூய வொருகோனும் துணிந்தங் கெழுந்திருந்து
பத்தியுள்ள நாரணரைப் பாரா வதுஇளக்க
உத்தரித்துக் கோனும் உலகமதை யாளுகின்ற
மன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான்
.
விளக்கம்:
==========
முன்பு ஒரு யுகத்தில் மூவர்க்கும் மேலான நாராயணர்க்குப் பசி ஆறுவதற்காக அன்னமும் பாலும் மிக அன்புடன் கொடுத்த ஒருவன், இந்த கலியுகத்தில் ஆயர்க் குடியில் தோன்றியுள்ளான். அந்த இடையன் போகண்டன் என்னும் பூவண்டன் ஆவான். அவன் நீச அரசனுடைய அரசவையில் துணிச்சலுடன் எழுந்து, பக்தியுள்ள வைகுண்டரை சிறையிலிருந்து வெளிக் கொணர நிச்சயித்து அத்தேசத்தை ஆளுகின்ற நீச மன்னனின் முன்பு வந்து நின்றான்.
.
.
அகிலம்:
========
தன்னதிய மானத் தலைவனே கேட்டருளும்
நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிட தன்னினத்தில்
எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான்
சாணானில் நல்ல தன்மைவெகு மானமுள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்
நேர்மை யொழுங்கோன் நேர்சொல் லொருவாக்கன்
ஓர்மை யுடையோன் உபகாரக் காரனிவன்
ஆனதா லெங்களுக்காய் அரசேநீர் தாமுருகி
ஈனமிலா தெமக்காய் இரங்கு மெனத்தொழுதான்
.
விளக்கம்:
===========
தனக்கு நிகர் தானான மன்னவனே, நீர் நான் சொல்லுவதைக் கேட்டு அருள்வீராக. நம்முடைய இராச்சியத்தில், ஒதுக்கப்பட்ட தாழ்ந்த இனத்தில் கைது செய்யப்பட்ட சாணான், சாணார் இனத்தில் இருப்பினும் எனக்குரிய ஆளாய் இருக்கின்றவன். சாணார்களில் நல்ல தன்மை உள்ளவன். மிகுந்த மானம் உள்ளவன். நல்லவன், நேர்மை ஒழுக்கமுள்ளவன். தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன். நல்ல சிந்தனையாளன். எல்லாருக்கும் உதவி செய்பவன். எனவே, அரசே, எனக்காகத் தாங்கள் கருணை கூர்ந்து மனமிளகி எந்த இழுக்கும் உமக்கு வராவண்ணம் மனம் இரங்கி விடுதலை செய்விக்க வேண்டும் என வணங்கித் தொழுதான்.
.
.
அகிலம்:
=========
வைகுண்டர் விடுதலை:
======================
அப்போ தரசன் அவன்மனது தானிளகி
இப்போ திவனை யாமனுப்பி விட்டிடுவோம்
விட்டா லவனும் மேலு மிருக்குமுறை
கட்டாகச் சொல்லிக் கைச்சீட் டெழுதிவைத்துப்
போகச்சொல் லென்று போகண்ட னார்க்குரைக்க
ஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத் தேதுசொல்வான்
.
விளக்கம்:
==========
அப்பொழுது கலியரசன் மனம் இளகி, பூவண்டனே, இப்போது நாம் அவனை அனுப்பி விட்டிடுவோம். அப்படி விட்டு விட்டால் அவன் மீண்டும் அங்கே இருக்க வேண்டிய முறை பற்றியும், முழுமையான விபரம் பற்றியும் அவனிடம் சொல்லி கைச்சீட்டு ஒன்று எழுதி வாங்கி வைத்துக் கொண்டு அவனைப் போக சொல் என்றான். உடனே மனம் மகிழ்ந்து அந்த இடையன்,
.
.
அகிலம்:
=========
என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள்
மன்னவனே சொல்லுமென மாறி யவன்தொழுதான்
அப்போ தரசன் எல்லோரு மேகேட்க
இப்போ திவனினத்தில் எத்தனைபேர்க் கானாலும்
ஒப்போ டுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சற்பம்போ லொத்த சகலசா திதனக்கும்
உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த் தானிருந்து
மற்றுமொரு சாதிகளை வாவென்று ரையாமல்
தன்னொரு சாதி தன்னோ டிருப்பதல்லால்
பின்னொரு சாதி பிதனம்வைத்தப் பாராமல்
இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லிக்
கனத்தோ டவனும் கைச்சீட் டெழுதிவைத்துப்
பின்னவன் எல்லையிலே போகச்சொல் லென்றுரைத்தான்
.
விளக்கம்:
==========
மன்னவரே, எந்த விதமான வாசகங்களை எழுதி வைக்க வேண்டும் என்று தாங்கள் சொல்ல வேண்டும் என்று பணிவுடன் கூறித் தொழுதான். அரசன் எல்லாரும் அறியும் படி, வைகுண்டர் என்ன என்ன எழுத வேண்டும் என்று கூறலானான்.
இப்பொழுது சாணார் இனத்தில் எத்தனை பேருடனும் அவர்களுக்கு இயைந்தபடி ஒத்திருந்து உறவு கொண்டு வாழ்ந்து வருவேன். அப்படி அல்லாமல், பாம்பைப் போல் ஒதுங்கி வாழும் சகல சாதி மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றேன் என்னும் முறையில் சொல்லாமலும் அவர்களுக்கு உதவியாய் இருந்தும், அடுத்த சாதி மக்களை என்னிடம் வந்து துன்பம் தீர்ந்து செல்ல வாருங்கள் என்று அழைக்காமலும் வேறு சாதி மக்களைப் பகையுடன் பார்க்காமலும், என் சாணார் இனத்துடன் மட்டும்தான் நான் சேர்ந்து வாழ்ந்து வருவேன் என்று எழுத வேண்டும். இவ்வாறாக மிகவும் கண்ணியத்தோடு அவன் கைச்சீட்டு எழுதி வைத்து அவனுக்கு எல்லைக்குள் போய வாழ்ந்து வரச் சொல் என்று சொன்னான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008}