D Muthu Prakash, Kanchipuram 💐
594 views
2 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில் சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன் எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும் சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே . விளக்கம் ========= என்னுடைய சொல்லையும் எழுத்தையும் ஏடாக இணைத்து இந்த உலகத்தில் கவனக் கூர்மையால் கருத்து தெளிந்து மகிழுகின்ற பக்தர்களுக்கு எளிதில் புரிகின்ற வகையில், காரணக் காரியக் குணக் கூறுகளோடு இந்த ஆகமத்தை எழுதி வைத்துள்ளேன். . அதை அந்த பக்தர்கள் எந்த நிலையில் இருந்தாலும், அதனால் அச்சங்கொள்ளாமல் எடுத்துப் படிப்போரும், அதற்கு ஏற்புடைய கருத்துரை கூறுவோரும், இவ்வுலகில் சகல நித்திய சேமங்களோடும், நிலையான புகழோடும் நீடித்து வாழ்ந்து அடுத்து வரவிருக்கின்ற தர்மயுக வாழ்வையும் அடைவார்கள். . . அகிலம் ======== காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல் காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக் காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே . விளக்கம் ========= இப்படி, தர்மயுக் காட்சிகளைத் தம் வாழ்வில் ஆன்மிக ஞானத்தின் மூலமாகக் கண்டு, தர்ம நெறிமுறைகளைச் செவ்வனே கடைப்பிடித்து கையாண்டு கருணையே வடிவாக வாழுகின்ற அன்பு மயமான பக்தர்கள், பிறப்பு இறப்பு என்ற துன்பங்களைக் கடந்து பேரானந்தப் பெருநிலையை அடைவர். . எவ்வகையான இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் இயல்பைப் பெற்று, என்றென்றும் ஆத்ம ஞானத்தோடு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவ ஞானத்தால், ஆக்ஞாவில் அதாவது புருவமத்தில் ஞானக்கண் திறக்கப்பெற்று, அதன் மூலம் எப்போதும் பிரபஞ்ச கர்த்தனாகிய பரம்பிரம்மத்தை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். . நீதிக்கு நிகரான ஞானக் கண்ணைப் பெற்ற அந்தப் புனிதர்கள், கருணையை தம் கரங்கெளெனக் கொண்டுள்ள சிவபெருமானைப் போல் எப்போதும் கவலையற்ற நிலையிலேயே காணப்படுவார்கள். . அவர்கள் எங்கே இருந்தாலும் தாம் இருக்கின்ற இடத்தைச் சிவபெருமானின் இருப்பிடமாகிய கயிலாசமாகவே நினைத்து அதற்கேற்ப தம்மை ஆட்படுத்திக் கொண்டு ஆனந்தமாக வாழ்வார்கள். . . அகிலம் ======== இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே . விளக்கம் ========= இந்த் திருவாசகச் செய்திகளை இளக்காரமாகப் பேசி ஏளனம் செய்வோர் அகந்தை உடையவராவார். அத்தகு பொல்லாதவர்கள் படப்போகும் பாட்டையும் கற்றுக் கேட்டுக் கொள்ளுங்கள். . இறைவன் படைத்த இறைவனுக்கே சொந்தமான இந்த உலகத்தைக் கவ்விக்கொண்டிருக்கும் கொடுமையான கலி, அவர்களை விட்டு ஒரு நாளும் விலகாது. அதனால் அவர்களின் அறிவுக்கண் குருடாகி ஆணவமல வேட்கையால் தெய்வத்தை நிந்தித்து, சுவாசக் கால்களின் தடுமாற்றத்தினால் உடல் உபாதைகளுக்குள்ளாகி உருக்குலைந்து மடிவார்கள். ஆகவே, இத்தகையோர்க்குப் பாவப் பெருக்கு மேலோங்கி பிறவிப் பிணியாகிய உபாதையிலிருந்து விடுதலை பெறாமல், மேலும் மேலும் பூலோகத்தில் பிறந்து பிறந்து இறப்பர். அவர்களுக்கு மனிதப் பிறப்பு என்பது அகன்று, எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் பிறந்து அலைந்து அழிவர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இது என்மீது சத்தியம். . . அகிலம் ======== தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய் எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன் ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே . விளக்கம் ========= இந்த ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றில் எதுவுமே நழுவிப்போகாது என்பதை வலிமையான என்மீது சத்தியம் செய்து உறுதியளித்துள்ளேன். இந்த ஆகமச் செய்திகள் யாவையும் உலகத்தில் உள்ள எல்லாரும் அறியவேண்டும் என்பதற்காகவே எழுதியுள்ளோம். . இது இந்த உலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் ஒப்பு உவமை சொல்லமுடியாத அளவில் உயர்நிலை பெற்றர்களாலுங்கூட எழுத முடியாது. அண்ட சராசரத்திற்கும் தந்தையாகிய இறைவன் எழுதிவைத்த அகிலத்திரட்டு அம்மானை இதுவே ஆகும். . . அகிலம் ======== என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே . விளக்கம் ========= உலக நிகழ்வுகள் யாவையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாகச் சொல்லப்பெற்ற இந்தத் திருவாசகத்தைச் சொல்லின் செல்வியாகிய சரசுபதிதேவி சொல்லச் சொல்ல மகாவிஷ்ணு தம் திருக்கரத்தால் எழுதினார். இவ்வண்ணமாக வைகுண்ட லோகத்தில் வைத்து எழுதிய அந்தத் திருவாசகத்தைக் கலியுகத்திற்கு அணுப்பும்போது, ஏதேனும் ஒரு மேன்மை மிகுந்த மறையோனிடம் சென்று இருந்துகொண்டு, அவர் மூலமாக உன்னுள் அடங்கியுள்ள எல்லாவற்றையும் உலகம் அறியும்படி செய்வாயாக என்று அந்தத் திருவாசகத்திற்குப் போதனை செய்து, அதைப் பூலோகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். . . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு மற்றும் முதல் பாகம் நிறைவு பெற்றது. . தொடரும்... அய்யா உண்டு.