D Muthu Prakash, Kanchipuram 💐
928 views
7 days ago
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்று நடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில் நல்லநா ராயணரும் நாடி வழிநடக்க வல்ல பெலமான மாமுனிவ ருங்கூடி எல்லோருங் கூடி இயல்வா ரிக்கரையே நல்லோர்க ளாக நடந்தார்கா ணம்மானை வாதையே யானதெல்லாம் வைகுண்டர் பாதமதை சீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவரக் காட்டுகின்ற தீபமெல்லாம் காணாத வர்போலே நாட்டுக் குடைய நாரா யணர்நடந்தார் . . விளக்கம் --------------- மிகவும் சக்தி வாய்ந்த மாமுனிவர்களும் இவரோடு கூடி நல்லவர்கள் எல்லாருமாக விரைவாகத் தெச்சணாபூமியை அடைந்து கடற்கரை ஓரத்தின் வழியாக நடந்து சென்று கொணடிருந்தனர். தெச்சணாபூமியை வந்தடைந்த வைகுண்டரைக் கண்ட வாதைகளும் பேய்களும் அவர் பாதங்களை வணங்கி அவருக்குத் தீபாராதனை காட்டி வந்தன. தீபாராதனை எல்லாவற்றையும் நாட்டு மக்களுக்குரிய வைகுண்டர் காணாதவரைப் போன்று நடக்கலானார். . அகிலம் -------------- நல்ல குலதெய்வங்கள் மறைதல் ------------------------------- நல்ல குலதெய்வம் நாட்ட மதையறிந்து எல்லைக் குடையை ஈசர்வந் தாரெனவே இன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்துதென்றும் நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்துதென்றும் முற்கலியன் சட்டம் முதன்மையின் றுமுதலாய்த் துற்கலிபோ லாகிச் சுற்றுக் குலைந்துதென்றும் கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லிக் கண்டா ருடனேயும் கைதொழுத மனுவோடும் இன்றுமுத லெங்களுக்கு எற்கும்வகை யில்லையேகாண் கண்டுகொள்ளுங் கோவெனவே கண்காட்டிப் போய்மறைந்தார் . . விளக்கம் ---------------- நல்ல சான்றோர் குலத் தெய்வமாகிய வைகுண்டரின் விருப்பத்தைப் பேய்கள் அறிந்து, கலியை அழிக்கும் எல்லைக்குரிய வைகுண்ட இராசர் வந்தார் என்றும், இன்று முதலாக வம்பர்களுக்குக் கடினமான பகைமை சூழ்ந்தது என்றும் நல்ல மனத்தை உயடைவருக்கு நல்ல காலம் வந்தது என்றும் கலியன் நமக்குச் சாதகமாக இட்ட சட்டங்கள் முறைதப்பி இன்றுமுதல் நமக்குக் துன்பமயமான கலிபோன்று ஆகி நமது சுற்றங்கள் முழுவதும் குலைந்து விட்டன என்றும் கூறி வருந்தின. அதிக குற்றம் நிறைந்த கூளிக்கணங்கள் அய்யோ எங்களைக் கண்டவரும் தொழுதவரும் தரும் பூசை முதலியவற்றை இன்று முதல் ஏற்கின்ற முறை இல்லையே என்ன செய்வோம்? இதைக் கண்டு கொள்வீராக என்று கூறிக் கண்ணைச் சிமிட்டி ஓடிப் போய் ஒளித்துக் கொண்டன. . . அகிலம் -------------- நானில மரசு ஆள நாரணர் பெற்று வாறார் தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும் மாநிலத் தோரே யென்னை வருந்தியே தேவ வேண்டாம் நானினிச் செய்ய ஆகா நவின்றவர் தெய்வம் போனார் . விளக்கம் ---------------- நீதியுடன் வாழ்ந்துவரும் அன்பர்களே, இப்பெரிய உலகில் வாழ்வோரே. எல்லாரும் கேட்டுக் கொள்ளுங்கள். மக்கள் வாழும் குறிஞ்சி, முல்லை, நெய்தல் மருதம் ஆகிய நான்கு பூமிகள் போன்றவற்றை ஆள வைகுண்டர் வரம் பெற்று வருகிறார். இனி எம்மைக் காண மனம் வருந்தித் தேட வேண்டாம், நாங்கள் எந்த உபதேசங்களும் இனிச் சொல்ல முடியாது எனச் சொல்லி தெய்வங்கள் இவ்வுலகைவிட்டு தமது இருப்பிடம் சென்றன. . . அகிலம் -------------- தேயவங்க ளுலகி லெல்லாம் தெரிசனங் காட்டிக் காட்டி மெய்வரம் புள்ளோ ரெல்லாம் மேதினி விட்டுப் போந்தார் பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையா ராமல் மெய்மறந் துரைகள் சொல்லி மேதினி யொழித்தா ரென்றே . விளக்கம் ----------------- இவ்வாறாக இவ்வுலக மக்களுக்குத் தரிசனம் காட்டி வந்த உண்மை நியாய வரம்புள்ள தெய்வங்களும் இவ்வுலகை விட்டுச் சென்றன. பொய்யான வரங்களைப் பெற்றுக் கொண்ட பசாசு பேய்கள் எல்லாம் தாம் அழிகின்ற வழியினைப் பாராமல் மனம் பதறி உண்மை நிலை மறந்து வாய்க்கு வந்தவாறு உளறியவண்ணம் உலகிலிருந்து சென்று ஒளித்தன. . . தொடரும்... அய்யா உண்டு.