#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்:
========
சாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகரு
அரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகரு
பரம்பெரிய சேடன் பவிசுக் குருநகரு
வாவி யுறைநகரு வைகைக் குருநகரு
தாவிக் குலாவும் சந்தப்பட்சி தன்னகரு
சொல்லஎளி தல்லகாண் தெச்சணா பூமிவளம்
.
விளக்கம்:
=========
சாலோகம் சாமீபம் ஆகிய இரண்டு நிலைகளையும் எல்லாரும் அடைந்து வாழ்ந்து கொண்டிருப்பதும், அழகான அரம்பைப் பெண்கள் நீராடும் அருவி நிறைந்ததும், மிகவும் பெரிய சேடன் பாம்புகள் நிறைந்ததும், செழிப்பு நிறைந்ததும், சிறந்த பல குளங்கள் நிறைந்ததும், வைகை நதி தனது கிளை ஆறுகள் மூலம் தாவிக் குலாவுவதும் ஆகிய இப்பூமியைச் சொல்லி விளக்க முடியாது.
.
.
அகிலம்:
========
நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடு
பசுவும் புலியம் பாவித்திருந் தநகரு
கசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடு
அந்நாடு நாடு அரனாட்டுக் கொப்பிடலாம்
பொன்னாடு நாடு புரந்தரநாட் டுக்கீடாம்
தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக் குருநாடு
பவமற்றோ ராகி பாவித்த தின்னாடு
நல்ல மலைவளரும் நாஞ்சி வளநாடு
சொல்லுருசி யானச் சிறந்த குருநாடு
ஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரே
.
விளக்கம்:
==========
சுவாமி, இது தங்களுக்குத் தவம் புரியச் சிறந்த நாடு ஆகும். இது பசுவும், புலியும் சாந்தமாய் ஒத்திருக்கும் நல்ல நாடாகும். எப்பொழுதும் அன்பு கரைபுரண்டு ஓடும் மக்கள் வாழும் நாடு இது ஆகும். இந்த நாடு சிவனின் கயிலாய நாட்டுடனும், இந்தப் பொன் நாடு இந்திரனுடைய உலகத்துடனனும் ஒப்பிடும் வண்ணம் அமைந்து இருக்கிறது. தவம் செய்து வெற்றி அடைந்தவர் வாழும் குளுமை பொருந்தியதும், பாவம் அறவே நீக்கப் பெற்றதும், மேன்மையான மலைகள் வளரும் வளமை பொருந்தியதும், உண்மை பேசுகின்ற மக்கள் வாழுவதும் இத்தெச்சணாபூமி ஆகும். இந்நாட்டுடன் உலகின் எந்த நாட்டையும் ஒப்புமைக் கூற முடியாது.
.
.
அகிலம்:
========
திருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடு
சம்பத்துக் கேற்ற சகல குருநாடு
இன்பம் வளரும் இசைந்த குருநாடு
.
விளக்கம்:
=========
உத்தமரே, இத்திருநாட்டில் ஈசர் எந்நாளும் உறைந்திருப்பார். தீராத வினைகள் முழுவதையும் அறுத்தெறியும் தன்மையுள்ளதும், ஆழமான நீர் நிலைகளைப் பெற்றதும், நிழல் பொருந்தியதும், சகலவித சம்பத்துக்களைப் பெற்றிருப்பதும், எல்லாவகை இன்பங்கள் அமைந்துள்ளதும் இத்தெச்சணாபூமி ஆகும் என்று வேதமுனி வைகுண்டரிடம் கூறி மீண்டும் தொடரலானான்.
.
.
அகிலம்
========
ஆதி யொருமுனிவன் அடவில் தவசிருக்க
நீதி யறியவென்று நிலமலனுந் தேவியுமாய்
கற்றாவுங் கன்றதுபோல் கறைக்கண்டர் வேசமிட்டுப்
பற்றாண்மை பார்க்கப் பாரில் மிகமேய்ந்து
அந்த முனியடுக்கல் அன்றிராப் போயடைந்தார்
.
விளக்கம்:
=========
சுவாமி, இப்பூமியின் மகிமை பற்றிக் கூற இன்னும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். கேட்பீராக. முன்பு ஒரு காலத்தில் ஒரு முனிவன் அடர்ந்த ஒரு காட்டில் தவம் செய்து வந்தான். அப்போது அவனது தவ முறையைச் சோதித்து அறிய ஈசனும், சக்திதேவியும் பசுவும் கன்று போன்று வேடமிட்டு வந்தனர். அந்த முனிவனின் பற்ற்ற தன்மையைச் சோதித்துப் பார்க்க அந்தக் கானகத்தல் அவர்கள் மேய்ந்து திரிந்து அன்று இரவு முனிவன் தவம் செய்து வந்த மலைக்குச் சென்றடைந்தனர்.
.
.
அகிலம்:
========
சிந்த னருளால் சீறி யொருகடுவாய்
பசுவையுங் கன்றதையும் பார்த்து மனமகிழ்ந்து
இசுவாக வந்தீர் இரையாய் நமக்கெனவே
என்று கடுவாய் இயல்பசுவின் கன்றதையும்
தின்றுவிட வென்று சென்றுப் பிடித்திடவே
அப்போ பசுவும் அந்த முனியடுக்கல்
இப்போ தென்கன்றை இந்தக்கடு வாய்பிடிக்கு
மாமுனியே நீயும் வந்தொரு சத்தமிட்டால்
தாம்பயந்து கடுவாய் தன்னா லொதுங்கிவிடும்
.
விளக்கம்:
=========
சிவனுடைய அருளினால் ஒரு கடுவாய் அங்குத் தோன்றியது. அது பசுவையும் கன்றையும் பார்த்து தனக்கு ஏற்ற சுவையான இரை கிடைத்தது என்று மகிழ்ந்தது. இவ்வாறு மகிழ்ந்து பசுவின் கன்றைப் பிடித்துக் கொன்று தின்பதற்காக கடுவாய் கன்றைத் துரத்திப் பிடித்தது. பசு அந்த முனிவனின் பக்கத்தில் ஓடோடிச் சென்று அம்முனிவனை நோக்கி, முனிவனே, இப்பொழுது என் கன்றை ஒரு கடுவாய் பிடித்துக் கொண்டது. நீ அங்கே வந்து ஒரு ஓசை எழுப்பினால் அக்கடுவாய் பயந்து ஒதுங்கி ஓடி விடும்.
.
.
அகிலம்:
========
வந்துசொல் லாதாலும் மாமுனியே யிங்கிருந்து
உந்தித் தொனியால் ஒருசத்தங் கூறினையால்
என்பிள்ளை யென்றனக்கு இப்போ துதவுமென்றார்
உன்னுள்ள முமேற்று உடையோன் பதம்பெறுவாய்
.
விளக்கம்:
=========
அப்படி நீ வர முடியாவிட்டால் முனிவனே, நீ இங்கிருந்து கொண்டே உனது உந்தியிலிருந்து வருவாகும் அளவு ஒரு சத்தம் இட்டால் என் அருமைக் கன்று எனக்குப் பயனுள்ளதாக உயிர் பிழைத்து விடும். இதற்கு நீ உடனே உதவுவாயாக, அப்படி நீ செய்தால் உனது உள்ளம் உயர்வு நிலை அடைந்து இறைபதம் அடைவாய் என்று கூறியது.
.
.
அகிலம்:
========
என்று பசுவும் ஈதுரைக்க மாமுனியும்
ஒன்றுமுரை யாடாது உள்ளங் கவிழ்ந்திருந்தான்
கடுவாயுங் கன்றைக் கயிலையங் கிரிதனிலே
வெடுவாகக் கொண்டு விட்டதுகா ணம்மானை
பசுவும் வனமறைந்து பார்முனிவன் காணாமல்
விசுவாச மாக மேலோகஞ் சேர்ந்ததுவே
.
விளக்கம்:
=========
இதைக் கேட்ட மாமுனிவன் அதற்கு எதுவும் செய்யாமல் உள்ளத்தைத் தவத்தின்பால் செலுத்தலாளான். கடுவாய் அந்தக் கன்றைக் கயிலை மலையில் மிகவிரைவாகக் கொண்டு சேர்த்தது. பசுவும் அங்கிருந்து அந்த முனிவன் காண முடியாதவாறு மறைந்து கன்றின் மேல் விசுவாசம் கொண்டு கயிலையை அடைந்தது.
.
.
அகிலம்:
========
பின்னுஞ்சில நாள்கழித்துப் பேர்முனிவன் சிந்தையிலே
முன்னும் பசுமுறையால் முகுந்தன்பதங் காணாமல்
இத்தோசங் கழிக்க இன்னுஞ்சில நாள்வரையும்
சித்தத்தோ டொத்தத் தெச்சணா பூமியிலே
இரந்து குடித்து இத்தவ மேபுரிந்தால்
பரந்தணியும் வேதன் பதமடைய லாமெனவே
உத்தரித்து மாமுனிவன் ஒருநொடியி லேயிறங்கித்
திர்ப்தியுட னேகித் தெச்சணா பூமிவந்தான்
.
விளக்கம்:
=========
கடுமையான தவத்தைச் செய்து வந்த முனிவன் முன்பு பசுவுக்கும் கன்றுக்கும் செய்த அநீதியினால் சிவபொருளைக் காண முடியவில்லை என்றும் அந்தத் தீய வினைத்தோசம் கழிவதற்குச் சிலகாலம் தெச்சணாபூமியில் இரந்து குடித்து உயர்வான தவம் புரிந்தால் பரிசுத்தமாகி நீயும் சவபதத்தின் காட்சியைக் காணலாம் என்றும் உள்ளத்தில் உணர்ந்தான். உடனே, சிவப்பொருளின் மந்திரச் சொல்லை உச்சரித்து அக்காட்டிலிருந்து மிகவிரைவாக இறங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தத் தெச்சணாபூமிக்கு வந்தான்.
.
.
அகிலம்:
========
வந்து இரந்து வருசமொன் றானதின்பின்
முந்துநின்ற காவில் உவந்து தவசுநின்று
பரமன் பாதாரப் பவிசு மிகவடைந்து
வரமருளப் பேறுபெற்று வாழ்ந்திருந் தானம்மானை
அப்படியே தோசம் அகன்று அறம்வளரும்
உற்பனம்போ லொத்த உகந்ததெச்ச ணாபதியே
.
விளக்கம்:
=========
இங்கு வந்து ஒரு வருடமாக இரந்து திரிந்து பிறகு ஏற்கெனவே தவம் புரிந்த காட்டிற்குச் சென்று தவம் செய்து அப்பரமனுடைய பாதங்களின் சிறப்பை அடைந்து வரங்கள் பல பெற்று உயர்ந்த பேறுகளும் பெற்று வாழ்ந்தான். இப்படியாக ஞானம் பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த பூமி இதுவாகும். இறைவனை ஒத்தவர்கள் விரும்புகின்றது இந்தத் தெச்சணாபூமி ஆகும்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.