#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி
மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர்
தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து
உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே
என்னை பிதாவே மாதாவே யென்தாயே
எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு
நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும்
பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை
குண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென
ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில்
சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார்
.
விளக்கம்
==========
தேவர்கள் துன்பங்களை எல்லாம் தீர்த்து விடுவேன் என்று உறுதி சொல்லிவிட்டு வானோர்கள் போற்றும் சக்தி கொண்ட வைகுண்டர் தமது தந்தையின் பாதங்களில் விழுந்து சரணடைந்து மிகவும் பணிவுடன் தந்தை நாரணரை நோக்கி தந்தையே என்னை ஈடேற்றிப் பாதுகாத்துவரும் உயர்ந்தவரே எல்லாருக்கும் அரசனே, தாய் போன்றவரே, சோதி மணியே, எனக்குத் தேவையான எல்லா விவரங்களையும் தெளிவாக எடுத்துரைத்தீர். இனி நான் பூமிக்கு நடந்து செல்ல விடை தருவீராக. மேலும் பால்வண்ணராகிய ஈசரின் சகல சக்திகளையும் பெற்றிடும் வைகுண்டர் தெச்சணாபூமியில் பள்ளி கொள்ளுவார் என்னும் முன்னாலுள்ள ஆகம விதியின்படி என்னை அனுப்புவீராக என்று கூறித் தொழுதார்.
.
.
அகிலம்
========
உடனே மகனை உவந்துமுகத் தோடணைத்துக்
கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி
மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ
நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட
எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப்
பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா
நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே
தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே
.
விளக்கம்
==========
உடனே, வைகுண்டரைத் திருமால் தமது முகத்தோடு அணைத்து, மகனே நீ அகக்கடலின் சிறப்புகளைக் கண்டாயா? உன்னை விட்டு விட்டு நான் வேறு ஊரில் வாழ முடியுமா? நகமும் தசையும் போன்று உன்னுடன் நானும் வருவேன். எத்தனையோ முறையான தருமங்களைச் செய்து உன்னைப் பெற்றெடுத்தேன். நான் உன்னைத் தொடர்ந்து வருவேன். உன்னை நான் என் நிலையான வாரிசாகப் பெற்றெடுக்கும் முன்பாகத் தாயில்லாப் பிள்ளையைப் போலத் துன்பமுற்றேன்.
.
.
அகிலம்
========
மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன்
சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ
உன்கூட நானும் ஓடி வருவேனப்பா
என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண்
என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே
கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து
நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம்
தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை
.
விளக்கம்
==========
மகனே உன்னைப் பெற்றெடுத்த பிறகே என் மனத் துயரங்கள் எல்லாம் தீர்ந்தன. இத்தகைய என்னை சுகமாகப் போய் வா என்று கூறி எளிதாக அனுப்ப முடியுமா? மகனே உன்னுடன் நானும் ஓடி வருவேன். அப்படி உன்னுடன் நான் ஓடி வந்தால் என்னோடு உன் தாய் இலட்சுமியும் ஓடி வருவாள் என்பதை அறிந்து கொள்ளுவாயாக என்று வருத்தி உரைத்தார். இதைக் கேட்ட வைகுணடர், அதிகமாக மன மகிழ்ச்சி கொண்டு, தந்தையே, நீங்களும் என்னுடன் வந்தால் அதனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே உண்டாகும். உங்கள் பாதங்களை நான் தாங்கிய வண்ணம் அழைத்துச் செல்லுவேன் என்றார்.
.
.
அகிலம்
========
அப்போது நாரா யணர்மகனே யாவிமிக
இப்போ தென்பாலகனே இயம்புகிற புத்தியைக்கேள்
.
விளக்கம்
==========
வைகுண்டரின் இதமான மொழிகளைக் கேட்ட நாராயணர் தம் மகனைக் கட்டியணைத்து, மகனே, இப்போது நான் சொல்லுகிற புத்திமதிகளையும் கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
========
சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட
வாமை மகனே வருவோமுன் கண்காண
மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென
உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது
.
விளக்கம்
==========
இவ்வுலக மக்களைக் காண உன் கண் காணும்படியாக உன்னோடே வருவேன். இது உண்மை. மகனே, தருமயுகம் வரப் போகிறது என்று பதினான்கு உலகங்களும் கேட்கும்படியாகச் சத்தமிட்டுக் கூறி யுகமுடிவு பற்றியும் உரைத்து விடு.
.
.
தொடரும்... அய்யா உண்டு.