#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப
வல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண்
முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிக
என்னடையில் வந்து ஏந்திழையா ராடுவது
.
விளக்கம்
=========
நான் வீற்றிருந்த தெற்கு கடற்கரை ஓரத்திலும் ஏராளமான அழிமதிகளும் நடந்தன. பலம் பொருந்தியவர் நியாயம்தான் அங்கே நியாயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்னர் ஒழுக்கம் நிறைந்த பெண்டிர்கள்தாம் நான் இருந்த இடத்தில் வந்து முங்கிக் குளித்து என் நடையில் ஆட வந்தனர்.
.
.
அகிலம்
========
ஆட வரும்போது அசுத்தத்தோ டுவாறாள்
பாடவரும்போது பண்ணுறா ளசுத்தமது
கோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்து
தேவியருக் கீயத் திருடுகிறா ரென்முதலை
கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண் ணார்களுக்கு
இணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டு
எடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடி
ஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண் ணொத்திருந்து
.
விளக்கம்
=========
இப்பொழுதோ ஆட வருபவர்கள் அசுத்த நிலையிலேயே வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கோவிலில் பாட வரும்போதும் பெண்டிர் பலவகைகளில் அசுத்த நிலையை உண்டாக்குகின்றனர். கோவிலில் பூசை செய்கின்ற குறும்பு நிறைந்த பூசாரிகள் மிகவும் துணிச்சலுடன் அவர்களுக்கு விருப்பமான பெண்களுக்குக் கொடுப்பதற்காக என் வருமானத்தைத் திருடுகிறார்கள். கணக்கர் வரை அங்குள்ள வேசிப் பெண்களுக்குச் சாதகமாக இருந்து கொண்டு என் வருவாயைக் கொள்ளை அடித்து அவர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். அவ்வேசிப் பெண்களும் வேசித்தனமாக அவர்களுக்கு இயைந்தவாறு நடந்து என் முதலைப் பதுக்குகிறார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்திருப்பதால் அவ்வேசியர்க்ள அந்த ஆடவரைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
.
.
அகிலம்
=======
பம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம்
எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியே
ஆனதா லிவ்வகைகள் யான்வேண் டாமெனவே
மான மழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில்
பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச்சில நாள்கழித்துக்
கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய்
நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லா மிகநிறுத்திப்
பொறுத்தரசு தர்மப் புவியாளப் போறேனினி
மாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமே
.
விளக்கம்
=========
பம்பையர்களும், பரத்தையர்களும், பிறரைக் கவரப் பகட்டுத்தனமாகக் கையினால் காட்டுகின்ற முத்திரைகள் எல்லாம் எனக்கு ஏற்றவை அல்ல. மாமுனியே, இந்த வகைச் செயல்கள் எல்லாம் எனக்குத் தேவையில்லை என்று மானம் அழியும் முன்னரே கூறியதுண்டு. மாமுனியே, நான் தெச்சணத்தில் பள்ளி கொண்டு, களியாட்டு காவடித் தூக்குதல், கைக்கூலி கொடுத்தல் போன்றவை தேவையில்லை என்று தடை செய்ய வேண்டிய எல்லாவற்றையும் தடை செய்து, பரிசோதனை பார்த்து, சிறிது காலம் கழித்து, நான் தருமபூமியை ஒரு குடைக்குக் கீழ் ஆட்சி புரியப் போகிறேன் என்று கூறித் தெச்சாணாபூமி நோக்கி நடக்கலானார்.
.
.
அகிலம்
========
தாமுனிந் தையா தவறாத மாமுனியும்
தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து
உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி
நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்
கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்
சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே
மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து
நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்
.
விளக்கம்
=========
திருச்செந்தூர்க் கோவிலில் தீமையின் உச்சத்தைக் கண்டு திருச்செந்தூர்ப் பதிகளுக்குள்ள சாபமுறைகளைக் கூறிவிட்டு, வைகுண்டர் மாமுனிவருடன் தெச்சாணாபூமிக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணித் திருச்செந்தூர்க் கடக்க அங்கிருந்த தருவையின் கரைவழியே நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த தேவர்கள் எல்லாரும் சங்கீதம் பாடிக் கொண்டு வந்தனர். அப்போது, மங்களநாதனாகிய வைகுண்டர் தம்முள் மாற்றம் அடைந்தாலும் மனித உருவத்தோடு அங்குள்ள மக்கள் எல்லாரும் நான்கு திசைகளிலுமிருந்து காணும்படியாக வந்து கொண்டிருந்தார்.
.
.
அகிலம்
========
பிசாசுகளின் பணிவிடையை மறுத்தல்
========================================
மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர
கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரைத்
தாழநடை விடாமல் சற்பூத மேந்திவர
அப்போது பூதமதை அல்லகா ணென்றுசொல்லி
மைப்போடுங் கண்ணர் மாபூத மதைவிலக்கி
.
.
விளக்கம்
==========
இவ்வாறாக வைகுண்டர் தெச்சணாபூமி நோக்கி வந்து கொண்டிருந்த போது பூதங்கள் எல்லாம் கூடி அவரைச் சுற்றி வந்து கொணடிருந்தன. அவரைப் பூமியில் நடக்கவிடாவண்ணம் ஏந்தி வரப் பல பூதங்கள் முயன்றன. அதைக் கண்டு கொண்ட வைகுண்டர் அப்பூதங்கள் தம்மை ஏந்தி வராவண்ணம் விலக்கித் தள்ளினார்.
.
.
அகிலம்
=======
நீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில்
தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்கு
வேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளா வுன்வேலை
பாண்டவர்க ளானப் பஞ்சவர்க ளுண்டெனக்கு
என்று வைகுண்டர் இசையத் திசைநடந்தார்
.
விளக்கம்
=========
பிறகு அப்பூதங்களை நோக்கி, பூதங்களே, நீங்கள் என்னைச் சுமந்தால் இந்தப் பரந்த உலகத்தில் சோதனை செய்ய நான் வருகின்ற காலத்தில், என் சட்டத் திட்டங்களை மீறி நடந்தால் உங்களிடம் நீதி கேட்பதற்கு நான் தகுதி இல்லாமல் ஆகி விடுவேன். எனவே, வேதாளங்களே, நீங்கள் என்னைச் சுமக்கும் வேலையைச் செய்ய வேண்டாம். என்னைச் சுமக்கப் பஞ்சபாண்டவர்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி வைகுண்டர் தெச்சணாபூமி திசை நோக்கி மீண்டும் நடக்கலானார்.
.
.
அகிலம்
========
தொண்டு செய்யாமல் சூல்பூத மாடிவரப்
பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும்
தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும்
மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும்
சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவர
மதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத்
துதியும் வழிதீய்க்கத் தேவர்மிக வோலமிட
இத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவரப்
புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே
.
விளக்கம்
=========
இவ்வாறு சிறப்போடு வந்து கொண்டிருந்த வைகுண்டரைக் கண்டு அவருக்குப் பூக்கள் கொண்டு வந்து அவர் மீது சூடச் செய்து வணங்குவாரும், கற்பூறத் தீயினால் அவருக்குத் தீபாராதனை காட்டுவாரும், இரு மருங்கும் நின்ற பூச்செடியிலுள்ள பூக்கள் அசைந்து வெஞ்சாமரை போன்று வீசிக் கொண்டு நிற்கவும், மழை பொன் துளிகள் போன்று மெதுவாக அவர்மேல் தெளித்து வரவும், சந்திரன் தம்முடைய குளுமை பொருந்திய குடையைப் பிடிக்கவும், காற்று வெஞ்சாமரை வீசவும், துதிப்பாடல்கள் பாடுபவர்கள் வழி செய்து கொடுக்கவும், தேவர்க்ள அழகாகப் பாடிக் கொண்டு வரவும், இப்படியாக எல்லா வகையான சிறப்புகளும் நல்ல முறையில் முழங்கி வரவும், தெச்சணம் நோக்கி புறப்பட்டார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.