#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே
முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே
பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில்
உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது
.
விளக்கம்
==========
என் மகனே, இன்னும் ஓர் உபதேசம் கூறுகின்றேன். கேட்பாயாக. ஏற்கெனவே, உரிமையுள்ள ஒருவனிடம் அவன் உரிமையைப் பறிக்க அவனோடு மோதிப் பகைத்துக் கொள்ளாதே. அப்படி நீ பகைத்துக் கொண்டால் உன்னை அந்த இடத்தில்கூட இருக்கவிட மாட்டான். கலியுகத்தை அடக்கும் முன்னர் யாரிடமும் கோபப்படாமல் இரு.
.
.
அகிலம்
========
தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே
ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே
ஆனதால் நீயும் அவனைப் பகையாதே
நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும்
.
விளக்கம்
==========
கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பது எல்லாருக்கும் கீழ்படிந்து நடப்பதே ஆகும். எல்லாருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ஒருவரின் பகையும் ஆகாதே. எனவே, நீயும் யாரையும் பகைக்காதே. அவர்கள் நியாயக் கேடு செய்தால் நான் நியாயம் கேட்பேன்.
.
.
அகிலம்
========
வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே
மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே
சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே
வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே
.
விளக்கம்
==========
வலியோருக்காக ஒருவகை நீதி செய்தும் வலியற்றோர்க்காக இன்னும் ஒரு வகை நீதி செய்தும் பேசாதே. சொத்து சுகம் பெண் சுகம் போன்ற சுகங்களைச் சுகம் என்று எண்ணாதே.
.
.
அகிலம்
========
நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும்
தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு
சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ
புத்திர ரோடும் பேசியிரு என்மகனே
.
விளக்கம்
==========
இவ்வாறு நீ எண்ணாது இருந்தால் உனக்கு இந்த உலகமே பணிந்து நிற்கும். எனவே, இப்படிப்பட்ட எண்ணத்தையுடைய இவ்வுலகத்தில் வாழ்ந்து வந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வாயாக. உன் சத்துருவோடும் சாந்தமாகப் பழகு. உன் புத்திரருக்கும் நல்லவற்றை உபதேசித்துக் கொண்டிரு.
.
.
அகிலம்
========
அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ
வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ
சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு
மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே
.
விளக்கம்
==========
உன்னிடம் அன்புள்ளோருக்கும் உனக்கு ஆகாத பேர்களுக்கும், வன்மைக்குணம் உள்ளோர்க்கும், வழிப்போக்கர்களுக்கும், வலிமை இல்லாதவருக்கும் இப்படியாகச் சகல மக்களுக்கும் உன்னால் கொடுக்க முடிந்ததைக் கொடுத்து உதவு.
.
.
தொடரும்... அய்யா உண்டு.