#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
அய்யாநா ராயணரும் ஆதிவை குண்டமென
மெய்யா யுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார்
.
விளக்கம்
==========
உடனே, உயர்வு பொருந்திய வேதம் அறிந்தோர்கள் வைகுண்டரை நோக்கி வாழ்த்துக்கள் கூறத் தொடங்கினர்.
.
.
அகிலம்
========
மகனே வுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம்
உகமழியு முன்னே ஒருவர்கண் காணாதென
அகமே வைத்து அகமகிழு என்மகனே
வைகுண்ட மென்றுமிக வாழ்த்தக் குருநாதன்
மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார்
.
விளக்கம்
==========
அய்யா நாராயணரும், ஆதி வைகுண்டம் என உண்மையுடன் எல்லாருக்கும் புரியும்படி வாழ்த்தலுற்றார். மகனே, உன் தேகத்தில் நான் உருவாக்கியுள்ள சிறப்பான குண நலன்கள் எல்லாம் இந்த கலியுகம் அழிவதற்கு முன்பு ஒருவர்கூட கண்ணால் காண முடியாது என்பதைத் தெரிந்து உன் மனதில் மனமகிழ்ச்சியுடன் வாழ்வாயாக. நீ வைகுணடம் எனப் பெயர் பெறுவாயாக என்று வாழ்த்தினார். பிறகு ஈசர் தேவலோகத்தோர் இதர மேலோகத்தவர்கள் எல்லாரும் வைகுண்டரை வாழ்த்த ஆரம்பித்தனர்.
.
.
அகிலம்
========
மகரவுந்தி விட்டு வைகுண்டந் தான்பிறந்து
சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன்
தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை
மூவர்தே வர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து
ஏந்தி யெடுத்து இளந்தொட்டில் மீதில்வைத்துச்
சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டுச்
சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு
.
விளக்கம்
==========
மகர இலட்சுமியின் வயிற்றிலிருந்து வைகுண்டர் பிறந்து சிகர முனியுடனும், தேவர்களுடனும் சிறப்பாக வெளியே வந்தார். உடனே, தேவர்களும் மேன்மையான வானோர்களும் வைகுண்டரைச் சென்று எடுத்தனர்.
மூவர்களும் தேவர்களும் மகிழ்ச்சியுற்று முதலோனாகிய வைகுண்டரைக் கைக்குவித்து கும்பிட்டுக் கையினால் ஏந்தி கழித்து தவலோகத்தினருக்குரிய சட்டை இட்டு வைகுண்டரைப் பெற்றெடுத்த இலட்சுமியின் மயக்கம் எல்லாம் தீர்த்திட வேண்டிய உத்தரவுகள் பிறப்பித்தனர்.
.
.
அகிலம்
========
வீரரையும் வந்து வீரலட்சு மியெடுத்து
மடிமீதில் வைத்து மாதுசர சோதியுடன்
குடியான பேரும் கொண்டங் ககமகிழ்ந்து
பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட
பைங்கொடி யாள்சரசு பதிமாது தாலாட்டத்
தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுப் பின்பாட
ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழச்
சார்சர சுபதியாள் தாலாட்ட வேதுணிந்தாள்
.
விளக்கம்
==========
பிறகு வைகுண்ட வீரரை வீர இலட்சுமி அன்போடு எடுத்துத் தனது மடி மீது வைத்து சரசுவதியிடமும் அவளோடு குடி கொண்டிருக்கும் பிரம்மனிடமும், பேசி மனம் மகிழ்ந்து வைகுண்டரைப் பொன் தொட்டிலில் இட்டுத் தாலாட்டினாள்.
அடுத்து பசுமையான கொடியிடையாள் சரசுவதி தாலாட்டுவதற்காகத் தேவரிஷி வானோர், தேவரம்பை, மாதர்கள் ஏனைய சீவசெந்துகள் எல்லாரும் சிறப்பான பாடலைப் பின் பாடலாகப் பாடினர். ஈசர் முதல் ஏனைய கூட்டத்தினர் கண்டு மனம் மகிழ்ந்தனர். சரசுபதி வைகுண்டரைத் தாலாட்டினாள்.
.
.
அகிலம்
========
பொன்மணிப் பதியி னுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற
தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந் தொட்டி லிட்டு
மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது
கண்மணி வைந்த ராசர் காணத்தா லாட்டி னாளே
.
விளக்கம்
==========
பொன்னாலும் மணிகளினாலும் அமைக்கப்பட்ட பதியினுள்ளே, ஞான மயமாகிய அரிகிருஷ்ணர் பெற்ற குளிர்ச்சி பொருந்திய மணியைச் சூடிய குழந்தை வைகுண்டரைத் தங்கத் தொட்டிலில் கிடத்தி, மின்னல் போன்று பிரகாசிக்கின்ற மணிகள் கோத்த கொடியை அணிந்த கன்னித்தன்மை விளங்கும் சோதியாகிய சரசுபதி, கண்மணி போன்ற வைகுண்டராசரை அறி துயில் கொள்ளத் தாலாட்டு பாடினாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.