#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
அப்போது வானோர்க்கு ஆதிவைகுண் டருரைப்பார்
இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம்
என்றுவை குண்டர் இயல்பறியச் சொல்லிடவே
அன்று வானோர்கள் எல்லோரு மேதுசொல்வார்
.
விளக்கம்
==========
வைகுண்டர் வானோரை நோக்கி, வானோரே, என்னை எப்படி வைகுணடர் என்று அறிந்து கொண்டீர்? என்று வினவினார். இதைக்கேட்ட வானோர் எல்லோரும் சொல்லலுற்றனர்.
.
.
அகிலம்
========
கயிலயங் கிரியிலுள்ள கணக்குமுத லுள்ளதெல்லாம்
ஒயிலாகப் பிறப்பு உயர்கணக் கானதுவும்
தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும்
பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும்
மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும்
வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும்
நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும்
தருமக் கணக்கும் சகலக்கணக் குமுதலாய்ப்
பொறுமைப் பிரமா பூசாந்திரக் கணக்கும்
எல்லாக் கணக்கும் எடுத்துமிகத் தேவரெல்லாம்
வல்லான கயிலைவிட்டு வருவதுகாண் டேயடியார்
.
விளக்கம்
==========
சுவாமி, கயிலையில் உள்ள பிறப்பு இறப்பு வகைக்கணக்கும், உயிர்க்கணக்கும், ஒவ்வொருவருக்கும் உருவாகும் கண்டம் பற்றிய கணக்கும், பிரம்மனின் முதற்கணக்கும் இப்படிப் பத்து வகையான கணக்குகளும் இறைநிலை பெற்றவர்கள் கணக்கும் மோட்சம் பெற்றவர்க்கணக்கும், முன் யுகக்கணக்கும், செய்த குற்றக்கணக்கும், வைகுண்டத்தில் உள்ள நல்ல கணக்கும் நரகக்கணக்கும், நடுத்தீர்வைக்கணக்கும், தருமகணக்கும், பொறுமை உள்ளவர்கள் கணக்கும், பிரம்மாவின் பூலோக இறப்பு பிறப்புக்கணக்கும், ஆகிய சகலவிதமான கணக்குகளையும் தேவர்கள் மிகவும் வலிமையான கயிலையிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைக் கண்டோம்.
.
.
அகிலம்
========
தியங்கி மனங்கலங்கித் தேவரோ டேகேட்டோம்
மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவ ரேதுரைப்பார்
நாரா யணர்க்கு நல்லவைகுண் டம்பிறந்து
சீரா யுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள்
ஆள வருவதினால் அவர்கைக்குள் ளிக்கணக்கு
நீள அரன்சிவனும் நெடிய மருகோனும்
இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று
சொன்னார்கா ணெங்களையும் சுருதிக் கணக்கையெல்லாம்
பொன்னுலோ கம்புகுந்து பெட்டகத்தோ டேயெடுத்து
வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும்
சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி
ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார்
.
விளக்கம்
=========
உடனே, மனங்கலங்கித் தேவர்களிடம் அது பற்றிக் கேட்டோம். தேவர்கள் எங்களை நோக்கி, நாராயணர்க்கு நல்ல வைகுண்டர் குழந்தையாய்ப் பிறந்து, ஒழுங்காக உலகை எல்லாம் சிறப்பாக ஒரு குடைக்குள் ஆள வருகிறார். எனவே, இன்று வரையுள்ள இந்தக் கணக்குகளை எல்லாம் வைகுண்டரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆகவே, வானோர்களே, இச்சுருதிக் கணக்குகள் முதலிய எல்லாவற்றையும், கயிலாயம் புகுந்து பெட்டகத்தோடு எடுத்து வர வேண்டும் என்று கூறி அரனாகிய சிவனும், நெடியோனாகிய விஷ்ணுவும் எங்களை அனுப்பினார்கள். வைகுண்டர் சீக்கிரமாகப் பிறந்துவிட்டதால் இப்பொழுதே நாங்கள் இக்கணக்குகளை அவரிடம் கொண்டு போகிறோம் என்றனர்.
.
.
அகிலம்
========
நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார்
அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார்
இப்போது வானவரே எல்லோரு மென்கூட
வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார்
.
விளக்கம்
==========
தேவர்கள் கூறிய இந்த விபரத்தைக் கேட்டு நாங்க்ள தங்களுடைய பிறப்பு பற்றி அறிந்தோம் என்று வைகுண்டரிடம் கூறினர். உடனே, வைகுண்டநாதர் வானவரை நோக்கி, வானவர்களே, நீங்கள் எல்லாரும் என்னோடு வாருங்கள் என்று கூறி விட்டு வைகுண்டர் கயிலை நோக்கி நடந்து சென்றார்.
.
.
அகிலம்
========
சீருங் கோபால சிவனே செயலெனவே
வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள்
தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச்
சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச்
சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே
வேத மறையோரும் விசய முனிவர்களும்
நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக்
கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே
நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில்
தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி
எங்கு மகிழ எழுதினா ரம்மானை
.
விளக்கம்
==========
அவர் பின்னால் வானவர்கள், தேவர்கள், மறை முனிவர்கள், சாத்திரிகள், தானவர்கள் எல்லாரும் சீரும் கோபாலா சிவனே சிவனே என்று கூறிச் சங்கீதம் பாடி வந்தனர். சந்திரன், சூரியன் ஆகியோர் தத்தமக்குரிய குடைகளைப் பிடித்தனர். அழகு பொருந்திய வைகுண்டர் தோன்றி வந்தார் என்பதை வேத மறையோர்களும், விசைய முனிவர்களும் கூடி நாதாந்த வேதத்தை நன்றாக ஆராய்ந்து எதையும்விடாமல் ஈசர் வாழும் கயிலையில் சரசுவதி வாழும் அழகிய மண்டபத்தில், தங்கத்தாலான தூணில் மகிழ்ச்சியுடன் எழுதி முடித்தனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.