#vaalkkay payanam. நல்லறமாக...
இந்த உலகம் பரந்துபட்டது. அன்பும், உறவுகளும் பின்னிப்பிணைந்த கூட்டுக் கலவை தான் இவ்வுலக வாழ்வியல்...
இவை இல்லாமல் வாழ்க்கை முற்றுப் பெறாது. இந்த உறவுகளில் கணவன், மனைவி என்ற உறவு வலிமையானது என்று முன்னோர் சொன்னார்கள்.
வலி நிறைந்தது என்று இன்றைய தலைமுறை சொல்லிக் கொள்கின்றனர்.
இல்லறம் எனும் பந்தம் நல்லறமாக சில தியாகங்களை இணையர்கள் இருவரும் செய்ய வேண்டும். நான் ஆண்... நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று கணவன் கூறக்கூடாது...
மனைவியும் தான் பேசுவதே சரி என பிடிவாதம் செய்யக் கூடாது. தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிடிவாதத்தை துரத்தி விட்டு இருவரும் ஒருவராகப் பயணியுங்கள்...
பணத்திற்கான முக்கியத்துவத்தை விட அன்பிற்கு முக்கியத்துவம் தாருங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்; அன்பு செலுத்துங்கள். இணைந்து நின்று ஒருவொருக்கு ஒருவர் தோள் கொடுங்கள்...
இல்லறம் எனும் நல்லறத்தில்'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது' எனும் வள்ளுவத்தின் வழி நின்று வாழப் பழகிக் கொண்டால் அந்த வாழ்க்கையை வரலாறு பேசும். இல்லத்தில் வசந்தம் குடிகொள்ளும்...
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை' என்பது பழமொழி. இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்து விடாதீர்கள். கடந்த காலத்தில் ஆண் சம்பாதித்தான்; பெண் வீட்டிலிருந்தாள்...
ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. ஆணிற்கு இணையாகப் பெண் வேலைக்குச் செல்கிறாள். பணம் சம்பாதிக்கிறாள். இதனால் இணையர்கள் இருவருக்கும் இடையே ஈகோ எனும் கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது...
இந்நோய்க்கு மருந்துமில்லை; மாத்திரையுமில்லை. விளைவு விவகாரத்து.இதற்காகவா இந்த இல்லறப் பாதையில் பயணித்தோம்.
ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கையும் சேர்த்து தட்டினால் அந்த ஓசை பத்து பேருக்குக் கேட்கும். அதே போல் தான் வாழ்க்கையும். ஆம் ஒருவர் பேசும் பொழுது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் அமைதி நிலவும். இரண்டு பேரும் நீயா நானா என்றால் கடைசியில் காலம் தான் ஜெயிக்கும். காலத்தை நாம் ஜெயிக்க முடியாது. எனவே இல்லற வாழ்க்கையில் ஈகோவை துாக்கி எறிந்து இன்பமாக வாழப் பழகிக் கொள்வது அவசியம்...
கணவன், மனைவி மீதும் மனைவி, கணவன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லாத பொழுது கொலையும், தற்கொலையும் தலைதுாக்கி நிற்கும். இருவரிடமும் உண்மையும், அன்பும் இல்லாத பொழுது தான் இதுபோன்ற வன்மங்கள் ஏற்படுகின்றன.
இல்லற வாழ்க்கைக்கு தனிமனித ஒழுக்கம் அவசியம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாடு மீறும் பொழுது அங்கே அமைதியான வாழ்க்கை கேள்விக்குறியாகிறது...
சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் மது எனும் அரக்கனால் மணமுறிவு பெற்ற தம்பதியர் பலர். கணவன், மனைவிக்கிடையே எப்போதும் சண்டை நடப்பதால், ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்...
பெற்றோர்களின் சண்டையால் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. போதை பழக்கமுள்ளவர்கள் அதனை மறந்து மனைவியை நேசித்து பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இல்லறம் இனிக்கும்...
இனிய இல்லறம் மனங்கள்
இரண்டும் இணையும் போது ...
திருமணம் அரங்கேறும் ....
குணங்கள் ஒன்றாய் கூடும் போது
குடும்பம் உறுதி படும் ...
சொந்த உறவுகள் மனம் மகிழ
ஒன்று கூடி வாழ்ந்தாலே
இறைவன் நமக்குத் தந்த
ஆசிர்வாதம் தேடி வரும்... !
இரவும் பகலும் இணைந்தாலே
ஒரு நாளாய் முழுமை பெறும் ...
இன்பம் துன்பம் கலந்தாலே
அதில் வாழ்க்கை நிறைவு பெறும்
அன்பு எனும் வழியில் சென்றால்
ஆசை எல்லாம் தேடி வரும் ....
இதுவே என்றும் இறைவன் விரும்பும்
இனிய இல்லறம்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.