#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து
நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால்
பால்போல் பதம்போல் பாவந்தீ ரன்பருக்குச்
சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே
என்றுவை குண்டர் யாமம் கூறிக்கூறி
இன்றுதெச்ச ணம்போக எழுந்தருளி யேவருக
.
விளக்கம்
==========
தெச்சணம் நோக்கிப் போகும்போது கங்கைக் குலத்தின் தாயாகிய கடல் நீரை அழைத்து பெண்ணே, என் பெயரைக் கூறியவண்ணம் உன்னில் தீர்த்தமாட யாராவது வந்தால் என் பெயரை கேட்டவுடனே, பால் பதம் போன்று இருந்து அவர்கள் பாவத்தைத் தீர்த்துவிடு. அதே சமயம், வஞ்சனை எண்ணமுள்ள வம்பர்கள் யாராவது வந்தால் அவர்களை நரகம் அடைய வேண்டிய வம்புகளைச் செய்வாயாக என்று வைகுண்டர் உபதேசித்தார். இன்னும் பலருக்கு இப்படியே உபதேசித்துத் தெச்சணாபூமி நோக்கி நடந்தார்.
.
.
அகிலம்
========
சகல வுலகோரும் சந்தோசங் கொண்டாடப்
புகல எளிதில்லாத பெரியநா ராயணர்க்கு
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
மெய்கொண்ட முப்பொருளோர் மேனியொன் றாய்த்திரண்டு
எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து
.
விளக்கம்
==========
வைகுண்டர் தெச்சணம் நோக்கி வந்தபோது சகல உலகத்தினரும் சந்தோசம் கொண்டு ஆடினர். சொல்லமுடியாத பெருமைக்குரிய நாராயணர்க்கு வைகுண்டர் பிறந்துள்ளார். ஒரு வார்த்தைக்குக் கீழ் ஒரு குடைக்குள் ஆள உண்மையான முப்பொருளும் ஒரு பொருளாகி வைகுண்டர் உடம்பாகத் திரண்ட இவருக்கு நாரணர் எல்லா வரங்களும் கொடுத்துள்ளார்.
.
.
அகிலம்
========
நல்லோர்க்குக் காலம் நலமாகு மென்றுசொல்லி
வானலோ கம்வாழும் வானவருந் தானவரும்
தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர்
வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்துதென்று
மாமுனிவ ரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி
.
விளக்கம்
==========
நல்லவர்களுக்கு வாழ்நாள் நல்லபடியாய் இருக்கும். இப்படியாகச் சொல்லி, வானலோகத்தில் வாழும் வானவரும், தானவரும், முன் ஆகமங்களின் உண்மைகள் தப்பாத வகையிலும், வியாகர முனிவர் உருவாக்கிய ஆகமங்களின் சொல் தப்பாத வகையிலும் வைகுண்டர் பிறப்பு நிறைவேறியது என்று மாமுனிவர்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடி மகிழ்ந்தனர்.
.
.
அகிலம்
========
நாமு மெதிரேபோய் நல்லவை குண்டர்பதம்
கண்டுகொள்வோ மென்று கனமுனிவ ரெல்லோரும்
கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீ தேசொரிந்து
.
விளக்கம்
==========
நாமும் நல்ல வைகுண்டர் எதிரே போய், அவர் பாதங்களைக் கண்டு தரிசித்து வருவோம் என்று தீர்மானித்தனர். அதன்படி பல வகை மலர்களைத் திருமாலின் மகன் வைகுண்டர் பாதங்கள் மீது சொரிந்தனர்.
.
.
அகிலம்
========
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற துலுக்கன் உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் வருவோமென் றாகமத்தின்
வர்த்தமா னம்போலே வந்தவை குண்டரென
எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே
.
விளக்கம்
==========
நன்றாக ஆட்சி செய்து வந்த அரசர்கள் இறப்பு எய்தி நாட்டில் குற்றம், கொலைகள் அதிகமாகித் துலுக்கன் ஒருவன் தெச்சனத்துக்கு வந்தவுடனே தோல்வியுற்று ஓடி மற்றொரு பத்து ஆண்டில் நாம் வருவோம் என்று ஆகமங்களின் உண்மையான வாசகம்போல் அதை நிறைவேற்ற வந்தவர் இந்த வைகுண்டர் என்று கூறி எல்லாரும் போற்றி எதிர்கொண்டு அழைத்து வாழ்த்தினர்.
.
.
அகிலம்
========
நல்லோரா யெங்களையும் நாரா யணர்மகனே
உன்கிருபை தந்து உதவிதரு வாய்மேலும்
முன்கிருபை யெல்லாம் உனக்குள்வச மாச்சுதல்லோ
முப்பொருளும் நீதானாய் உறுவெடுத்தா யானதினால்
எப்பொருளைக் கண்டு இயல்புபெறப் போறோங்காண்
வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும்
மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார்
.
விளக்கம்
==========
நாராயணருடைய மகனே, நல்லோராகிய எங்களையும் உன் கருணையைக் காட்டி உதவி செய்தருள்வாய். இதற்கு முன்னர்த் தோன்றிய எல்லாருடைய அருள் சக்தியும் இப்போது உன்னுள்ளே அடக்கமாகி விட்டது அல்லாவா? முப்பொருளும் நீயாகவே உருவெடுத்துள்ளாய். எனவே, எல்லா பொருளையும் உன்னில் கண்டு நல்ல பேறு பெறப் போகின்றோம். வைகுண்ட மாமுனியே, நீர் மனமிரங்கி எங்களைக் காத்திட வேண்டும் என்று எல்லாரும் வைகுண்டரின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.