#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில் பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்ததும்;
விளக்கம்
=========
கங்கையிலே நீராடும் ஏழு கன்னிப் பெண்களைக் காணுகிறார். அவர்கள் தங்கள் கற்பினால் கொண்ட ஆணவத்தைத் திருமால் சோதித்து அவர்கள் கற்பை அழிக்க நினைத்தார். எனவே, கயிலை முதலிய ஏழு லோக வித்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தம்முள் அடக்கி எரிகின்ற பிரகாசமான கட்டையைப் போலக் கிடக்கிறார். அக்கன்னிமார் ஏழு பேருக்கும் குளிரும், நடுக்கத்தையும் உருவாக்கித் தம்மை நெருங்கச் செய்து அவர்களைக் கருவுறச் செய்து ஏழு அழகு பொருந்திய குழந்தைகளையும் ஈண்றெடுக்க வைத்து, அக்கன்னிகளைத் தவசு புரிய அனுப்பி வைக்கிறார். பத்திரகாளியிடம் தமக்குப் பிறந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்காகக் கொடுக்கிறார். பிறகு ஸ்ரீரங்கம் போய் இவ்வுலகோர் காண நாராயணர் பள்ளி கொள்ளுகிறார்.
.
.
அகிலம்
========
தேவாதிகளுடைய வாக்கினாலே ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே,
.
விளக்கம்
==========
தேவர் முதலியவர்களுடைய துன்ப வார்த்தைகளினால் ஈசன் திருமாலிடம் ஆலோசனை கேட்காது, தாமே கலியனைப் பிறவி செய்கிறார். அவன் 2,30,000 வருடங்களாக மிகுந்த கஷ்டங்களையும், கொடுமைகளையும் மக்களுக்குச் செய்து இந்த பூவுலகை அரசாண்டு வர, அன்பு மக்களாகிய சான்றோர்கள் அனுபவிக்கின்ற துன்பத்தில் எல்லையைப் பொறுக்க முடியாமல்
.
.
அகிலம்
========
வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில் வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும்
.
விளக்கம்
==========
வியாகரமுனிவர் வகுத்த திருவாசகத்தின்படி நாராயணர் தாமே வைகுண்டமாய் 1008ஆம் ஆண்டு மாசி மாதம் இப்பூவுலகில் ஆதி சாதியாகிய சான்றோர் இனத்தில் ஒரு மனித உருவில் வந்து பிறந்து பதினெட்டுச் சாதிகளையும் ஓர் இடத்தில் வரச் செய்வார். எந்தவிதப் பலனையும் எதிர்பாராமல் எல்லாருக்கும் நோய், நாள்பட்ட பிணி போன்றவற்றைத் திருத் தண்ணீரால் நீக்கவும்,
.
.
அகிலம்
========
சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும் தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும் சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில் நாலுதரம் சளங்கள் படவும் சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்; சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும்
.
விளக்கம்
==========
சந்தி இல்லாதவர்களுக்குச் சந்ததி கொடுக்கவும், பொருள் இல்லாதவருக்குப் பொருள் கொடுக்கவும், வாதைகள், பேய்கள் போன்றவற்றை அக்கினியிலே தள்ளிச் சருகில் எரிந்து கரிந்து போகச் செய்யவும், உண்மையும், அன்புமுள்ள மனிதருக்காக இப்பூமியில் நான்கு தடவை கடுமையான துன்பங்களைச் சந்திக்கவும்,
சாத்திரங்கள் வேதமங்கள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குப் பலவகைகளில் உதவிகள் செய்யவும் ஏழு யுகக் கணக்கையும் கேட்டு மிகத்துன்பம் கொடுத்துக் கலியனை அவனாலேயே ஒழித்துக் கட்டவும்,
.
.
அகிலம்
========
தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும் தங்கநவரத்தினத் திருமுடி சூடியே சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும், தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும் சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும் சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும் அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும், ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும்
.
விளக்கம்
==========
இப்பூமியில் உள்ளாரை ஒரே ஆட்சியின் கீழ் ஆளவும், இரத்தினத்தால் ஆகிய திருமுடியைச் சூடிச் சகலவிதமான பெருமைக்கும் உரிய இருக்கைகள் அமைந்த மேடைகள் உருவாக்கவும், அவர்களுடைய தவரு பெருமைப்படவும்,
.
தங்கமணியால் ஆகிய சக்கராயுதக் கொடியும், தங்க விருதுக் கொடியும், ஒற்றைக் கொடியும் கட்டவும், எல்லாரும் புகழுகின்ற தரும இராஜாவாகவும், எட்டுத் திக்குகளும், பதினான்கு உலகங்களும் அறிய அசையாத மணி ஒன்றைக் கட்டிச் சர்வேசுரனாகவும். இவ்வுலகின் ஐம்பத்தாறு தேசங்களையும் ஆதி முதல் சர்வ காலமும் அழியாத திருவுளமாய் இருந்து ஒரு குடையின் கீழ் அரசாளவும்,
.
.
அகிலம்
========
ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே, அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும் அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே என்றவர் கயிலையங்கிரியில் எழுதினார்.
.
விளக்கம்
==========
ஆதியான சூரியப் பிரகாசமான நாராயணருக்கு ஆதி ஆகமத்தின்படி வைகுண்டம் பிறந்தார் என்று குறிக்க இந்த அண்டத்தில் உள்ளவர்களும் மூவரும் தேவர்களும், சகல மாமுனிவர்களும் ஆகிய எல்லாரும் கூடி இருந்து ஆராய்ந்தனர்.
அதன்படி அச்செய்தியை இறைத் தொண்டரகளுக்கு என்று உயர்வு பொருந்தி கொன்றை மாலை அணிந்த சிவன் இருக்கும் கயிலையில் எல்லா மண்டலங்களும் புகழச் சிவனுடைய அருளினால் திருலெழுத்தை எழுதிப் பொறித்தனர்.
.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது.
.
.
தொடரும்… அய்யா உண்டு.