108 திவ்ய தேசங்கள்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
631 views
19 hours ago
AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-5* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் தொடர் பதிவில் இன்று ஐந்தாவதாக தரிசனம் செய்ய இருப்பது 108 வைணவ திவ்ய தேச உலா - 5. அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தரராஜப் பெருமால் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 5-வது திவ்ய தேசம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல இங்கும் திருமால் தாரக விமானத்தின் கீழ் உள்ளார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் உள்ளது. திருமழிசையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் (நான்முகன் திருவந்தாதி) செய்துள்ளார். நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்- நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான் மூலவர்: சுந்தரராஜப் பெருமாள் உற்சவர்: வடிவழகிய நம்பி தாயார்: அழகியவல்லி தலவிருட்சம்: தாழம்பூ தீர்த்தம்: மண்டுக தீர்த்தம் தல வரலாறு ஒருசமயம் நான்முகனுக்கு உலகில் தானே மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் மேலிட்டது. மேலும் தான் மட்டுமே உலகில் உயிர்களைப் படைக்கிறோம் என்றும் அவை அழகாக இருப்பதற்குக் காரணம் தான்மட்டுமே என்ற ஆணவமும் வலுப்பெற்றது. இருப்பினும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. நான்முகனின் இந்த எண்ண ஓட்டத்தை உணர்ந்த திருமால், இதுகுறித்து நான்முகனை எச்சரித்தார். இதற்கெல்லாம் செவி சாய்க்காதவராக இருந்தார் நான்முகன். திருமால், நான்முகனைத் திருத்தும் நோக்கில், பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடப் பிறவி எடுக்குமாறு அவரை சபித்துவிட்டார். பூலோகத்தில் அனைத்து தலங்களுக்கும் சென்று தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரி வந்தார் நான்முகன். இவ்வாறு ஒவ்வொரு தலமாகச் சென்று வரும்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தார். இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். அச்சமயத்தில் திருமால் பேரழகு வாய்ந்த மனிதராக நான்முகன் முன்பு வந்தார். அப்போது அவரைக் கண்டு அவருடைய அழகு குறித்து வினவினார். அப்போது திருமால், நான்முகனிடம் அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவரை அழிக்கக் கூடியது. இவ்விரண்டையும் கொண்டிருப்பவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுவதில்லை என்று கூறினார். உபதேசம் செய்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி கொண்ட கோலத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழ மன்னர் ஒருவரால் கோயில் எழுப்பப்பட்டது. நான்முகனிடம் மிகுந்த அன்பு கொண்டு, திருமால் எழுந்தருளிய தலம் என்பதால் ‘அன்பில்’என்ற பெயரை இத்தலம் பெற்றது. சுதபா என்ற முனிவர் தன் தவ வலிமையால் நீரிலும் நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டிருந்தார். திருமால் மீது மிகுந்த பக்தி உடையவர். ஒரு சமயம் நீருக்கடியில் திருமாலை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். நீருக்குள் இருந்ததால் சுதபா முனிவர், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. வெகு நெரம் காத்திருந்ததால் கோபமடைந்த துர்வாசர், அவரை தண்ணீருக்கடியில் வாழும் தவளையாக (மண்டுகம்) பிறக்குமாறு சபித்துவிடுகிறார். இதன்காரணமாக சுதபா முனிவருக்கு மண்டுகர் என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரிடமே சாப விமோசனம் குறித்து கேட்டார் மண்டுகர். முற்பிறவியில் செய்த கர்மத்தாலேயே இச்சாபம் கிடைத்தது என்றும், தகுந்த காலத்தில் திருமாலின் தரிசனம் அருளப் பெற்று சாப விமோசனம் கிடைக்கும் என்று மண்டுகரிடம் கூறினார் துர்வாசர். அதன்படி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுக தீர்த்தம்) திருமாலை நோக்கி தவம் செய்தார் மண்டுக முனிவர். அவரது தவத்தை மெச்சி திருமால் அவருக்கு சுந்தரராஜராக காட்சி அளித்து சாப விமோசனம் கொடுத்தார். கோயில் மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் நான்முகனுடன் அருள்பாலிக்கிறார் சுந்தர்ராஜ பெருமாள். உத்தமர் கோயிலில் ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதும், இத்தலத்துக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தார். இத்தலத்தில் முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவர் நின்ற கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரண்டு கோலங்களை தரிசனம் செய்வது சிறப்பு. தேவலோக நடன மங்கை ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக ஆண்டாளை வணங்கிச் சென்றுள்ளாள். ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாள். பிரகாரத்தில் நரசிம்மர், வேணு கோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் அருள்பாலிக்கின்றனர். திருச்சி, திருப்பேர் நகர், திருஅன்பில் என அருகருகே மூன்று திவ்ய தேசங்களில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருவிழாக்கள் ஆடிவெள்ளி, தைவெள்ளியில் தாயார் புறப்பாடு, நவராத்திரி உற்சவம், திருக்கார்த்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு. மார்கழியில் திருவாய்மொழி, திருமொழி திருநாள், ராப்பத்து திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாசி மாத தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தாயாரையும், ஆண்டாளையும் வணங்குவதால் திருமணத் தடை நீங்கி வாழ்வில் ஒளி பிறக்கும். அமைவிடம்: திருச்சியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ளது. திருமண வரம் அருளும் ஐந்தாவது திவ்ய தேசமான அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
622 views
19 hours ago
AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-4* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் தொடர் பதிவில் இன்று நான்காவதாக தரிசனம் செய்ய இருப்பது திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்   திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 4-வது திவ்ய தேசம் ஆகும். கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் பெரிய பிரகாரத்தின் தென்பகுதியில் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். உய்யக்கொண்டார் எங்களாழ்வானின் அவதாரத் தலம். திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் பாசுரம் (பெரிய திருமொழி) ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே எனக்கருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே. மூலவர்: புண்டரீகாட்சன் தாயார்: செண்பகவல்லி, பங்கயச் செல்வி தலவிருட்சம்: வில்வம் தீர்த்தம்: மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம் விமானம்: விமலாக்ருத விமானம் தல வரலாறு ஒருசமயம் பாற்கடலில் திருமாலும் திருமகளும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமால் திருமகளை வெகுவாகப் புகழ்ந்தார். அவள் கருணையால் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாக உள்ளன. அதில் தனக்கு பரம திருப்தி என்பதால் திருமகளுக்கு ஏதாவது வரம் கொடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.. அதற்கு திருமகள், திருமாலின் திருமார்பில் தான் நித்ய வாசம் செய்வதால் தனக்கு தனியாக வரம் ஏதும் பெற விருப்பம் இல்லை என்கிறார். இருப்பினும் தேவர்களைக் காட்டிலும் திருப்பாற்கடலில் தனக்கு அதிக உரிமை வேண்டும் என்றார். பெருமாள் தான் திருப்பாற்கடலில் அனைத்துமாக இருப்பதால், திருமகளின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறுகிறார். ஆனால் பூலோகத்தில் சிபி சக்கரவர்த்திக்கு தான் தரிசனம் தரும்போது, திருமகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கிறார். ஒருமுறை தென்னிந்திய பகுதியில் அசுரர்கள், அங்கு வசிப்பவர்களுக்கு நிறைய இன்னல்கள் கொடுத்து வந்தனர். அந்த சமயத்தில் சிபி சக்கரவர்த்தி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு வெள்ளை வராகம் (பன்றி) அங்கு தோன்றி அவர்களுக்கு நிறைய இன்னல்களைக் கொடுத்தது. சிபி சக்கரவர்த்தியின் படைவீரர்கள் எவ்வளவு முயன்றும் வராகத்தைப் பிடிக்க முடியவில்லை. சிபி சக்கரவர்த்தியே அதைப் பிடிக்க முயன்றார். அது தப்பித்து மலை மீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. சிபி சக்கரவர்த்தி அதைப் பிடிக்க மலையைச் சுற்றி வந்தார். அப்போது ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவரைக் கண்டார். அவர் கடும் தவம் புரிந்து கொண்டிருந்தார். விஷயத்தை மார்க்கண்டேய முனிவரிடம் கூறினார் சிபி சக்கரவர்த்தி. அப்போது மனம் மகிழ்ந்த முனிவர், “வராக வடிவில் வந்தது நாராயணன்தான். அவர் உனக்கு அருள்பாலித்திருக்கிறார். நான் அவரை நினைத்துத்தான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். நீ மிகவும் கொடுத்து வைத்தவன்” என்றார். மேலும் அங்குள்ள புற்றில் பாலால் அபிஷேகம் செய்யப் பணித்தார். அரசனும் அவ்வாறே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் அருள்பாலிக்கிறார். அப்போது இந்த தரிசனத்துக்கு வந்திருந்த திருமகளை நோக்கி, “உன் விருப்பப்படி இத்தலத்தில் உனக்கு அனைத்து அதிகாரத்தையும் தருகிறேன் . நான் அர்ச்சா ரூபமாக இருந்துகொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்” என்றார் திருமால். சிபி சக்கரவர்த்தி அனைவரிடத்தும் விடைபெற்றுக் கொண்டான். தான் ராவணனை அழிக்கச் செல்வதாக கூறும்போது, மார்க்கண்டேய முனிவர் மன்னரைத் தடுத்து, ராவணனை அழிக்க திருமால் ராமாவதாரம் எடுக்க இருப்பதாகக் கூறுகிறார். அவரை அவர் நாட்டுக்குச் சென்று நாட்டை ஆளும்படி கூறுகிறார் முனிவர். மன்னருக்கு இதில் திருப்தி இல்லை. அப்படியென்றால் காட்சி கொடுத்த பெருமாளுக்கு கோயில் எழுப்பும்படி முனிவர் சிபி சக்கரவர்த்தியிடம் கூற, அவரும் அவ்வாறே செய்வதாக உறுதி அளிக்கிறார். கோயில் கட்டும் பணிக்காக 3,700 குடும்பங்களை அழைத்து வந்தார் மன்னர். அவர்களில் ஒருவர் இறந்துவிட, இறந்த ஒருவருக்கு பதிலாக 3,700 பேரில் ஒருவராக இருந்து 3,700 குடும்பக் கணக்குக்கு குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டு அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதாக உறுதி அளித்தார் திருமால். திருமால் அளித்த வரத்தின்படி செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்துகொண்டு திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்னர் பல்லக்கில் எழுந்தருளுகிறார். புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் ‘புண்டரீகாட்சப்பெருமாள்' ஆனார். பெருமாள் கிழக்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் என்று அழைக்கப்படுகிறது. 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் வெள்ளறை என்ற பெயர் பெற்று திருவெள்ளறை ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. இத்தல பெருமாளை தரிசிக்க 18 படிகளைக் கடக்க வேண்டும். (இது கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிக்கும்). கோபுர வாயிலில் இருக்கும் 4 படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலிபீடத்தை வணங்கி 5 படிகளைக் கடக்க வேண்டும். (இவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன) பெருமாளை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளன. இவை தட்சிணாயன வழி (ஆடி முதல் மார்கழி வரை) என்றும் உத்தராயண வழி (தை முதல் ஆனி வரை) என்று பெயர் பெறும். இத்தல பெருமாளை கருடாழ்வார், சிபி சக்கரவர்த்தி, மார்க்கண்டேய முனிவர், நான்முகன், ஈசன் தரிசித்துள்ளனர். திருவிழாக்கள் சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி (கஜேந்திர மோட்சம்) ஆவணி கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், பங்குனி திருவோணம் (பிரம்மோற்சவம்) தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இத்தலத்தில் பலிபீடத்தின் முன்பு முதலில் கோரிக்கையை முன் வைப்பது வழக்கம். கோரிக்கை நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து பொங்கல் படைத்து பிரார்த்தனையை நிறைவு செய்வது உண்டு. குழந்தை பேறு வேண்டி கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை உண்பது வழக்கம். அமைவிடம்: திருச்சியில் இருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கி.மீ., தொலைவில் மண்ணச்சநல்லூருக்கு அருகில் உள்ளது. குழந்தை பேறு அருளும் நான்காவது திவ்ய தேசமானதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
608 views
19 hours ago
AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-3* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் தொடர் பதிவில் இன்று மூன்றாவதாக தரிசனம் செய்ய இருப்பது உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில் திருச்சி மாவட்டம் உத்தமர்கோவில் (கதம்பவனம், பிச்சாண்டவர் கோயில், திருக்கரம்பனூர்) புருஷோத்தம பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 3-வது திவ்ய தேசம் ஆகும். நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி) இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண் கடல் ஏழு மலையேழுஇவ் வுலகேழுண்டு ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே மூலவர்: புருஷோத்தமன், தாயார்: பூர்ணவல்லி, சவுந்தர்ய பார்வதி தலவிருட்சம்: கதலி (வாழை), தீர்த்தம்: கதம்ப தீர்த்தம் விமானம்: உத்யோக விமானம்  தல வரலாறு ஈசனைப் போலவே பிரம்மதேவனும் ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒருசமயம் ஈசன் என்று நினைத்து பிரம்மதேவனுக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினார் பார்வதிதேவி. இந்த சம்பவத்தால், இனியும் குழப்பம் வரக்கூடாது என்று எண்ணி ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்தார். இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதோடு மட்டுமல்லாமல் பிரம்மதேவருடைய கபாலமும் (மண்டை ஓடு) அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. ஈசனுக்கு படைக்கப்பட்ட உணவு அனைத்தும் கபாலமே எடுத்துக் கொண்டது. பசியால் வாடினார் ஈசன். இதன் காரணமாக அந்த கபாலத்தையே யாசகம் வாங்கும் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனர் கோலத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அப்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தபோது, திருமால், ஈசனின் பாத்திரத்தில் உணவு அளிக்கும்படி திருமகளிடம் கூறினார். திருமகளும் ஈசன் வைத்திருந்த கபாலத்தில் உணவிட்டாள். அதுவே பூரணமாக நிரம்பி ஈசனின் பசியைப் போக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரைப் பெற்றார். திருமாலும் பள்ளி கொண்ட கோலத்தில் ஈசனுக்கு காட்சி தந்தார்.  பிரம்மதேவருக்கு பூலோகத்தில் தனக்கு ஒரு கோயில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. திருமால், பிரம்மதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மதேவரும் இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டு தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மதேவரின் பக்தியை சோதிக்க எண்ணிய பெருமாள், கதம்ப மரத்தின் வடிவமாக அங்கு நின்று கொண்டார். இதை உணர்ந்த பிரம்மதேவர் கதம்ப மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். பிரம்மதேவரின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள், பிரம்மதேவருக்கு காட்சி கொடுத்து எப்போதும்போல் இத்தலத்தில் இருந்து தன்னை வழிபட்டு வருமாறு கூறினார். மேலும் பிரம்மதேவருக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இத்தலத்தில் தனியாக பிரம்மதேவருக்கு வழிபாடு இருக்கும் என்று கூறினார் பெருமாள். பிரம்மாவும் இத்தலத்தில் தங்கினார். பிற்காலத்தில் பிரம்மதேவருக்கு சந்நிதி எழுப்பப்பட்டது. பிரம்மதேவருக்கு இடதுபுறத்தில் ஞான சரஸ்வதி தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞான சரஸ்வதியின் கையில் ஓலைச் சுவடி, ஜெபமாலை உள்ளது. பிரம்மதேவருக்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதி தேவிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் ஆயுள் கூடும். கல்வி சிறக்கும். குருப்பெயர்ச்சி காலத்தில் பிரம்மதேவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். இத்தல விமானத்தின் பெயர் உத்யோக விமானம். அதன் கீழ் கருவறையில் மூலவர் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். பூரணவல்லி தனிசந்நிதியில் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமிக்கும் தனிச்சந்நிதி உள்ளது. பெருமாளுக்கு பின்புறத்தில் மேற்கு பார்த்தபடி ஈசன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இவர் பிரகாரத்தில் பிட்சாடனர் கோலத்தில் (உற்சவர்) அருள்பாலிக்கிறார்.  சிவன், பிட்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் ‘பிச்சாண்டார் கோயில்' என்றும், திருமால் கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் ‘கதம்பனூர்' என்றும் ‘கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். ஈசன், பிரம்மதேவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சந்நிதிகள் அவர்கள் துணையுடன் அருள்பாலிக்கின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். இத்தலம் சப்தகுரு தலம் என்று அழைக்கப்படுகிறது. சிவகுரு தட்சிணாமூர்த்தி, திருமாலின் குரு வரதராஜர். குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்கிராச்சாரியர் ஆகிய 7 குரு சுவாமிகளும் குருவுக்குரிய இடத்தில் இருந்து அருள்பாலிக்கின்றனர். குருபெயர்ச்சியின்போது அனைவருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.  திருவிழாக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மும்மூர்த்திகளுக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக விதியுலா வருகின்றனர். தைப்பூசத்தில் ஈசனுக்கும் மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பெருமாளுக்கு சித்திரையிலும் ஈசனுக்கு வைகாசியிலும் தேர்த் திருவிழா நடைபெறும். திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கிரக தோஷங்கள் விலக தம்பதியர் ஒற்றுமை சிறக்க இத்தல பெருமாளை வணங்குவது நன்மை பயக்கும். அமைவிடம்: திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 8 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் மூன்றாவது திவ்ய தேசமான உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
668 views
19 hours ago
AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-2* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதொடர் பதிவில் இன்று இரண்டாவதாக தரிசனம் செய்ய இருப்பது *உறையூர் அழகிய* *மணவாளர் பெருமாள்* *கோயில்* 108 வைணவ திவ்ய தேச தலங்களுள், திருச்சி மாவட்டம், உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் இரண்டாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திருக்கோழி,உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படும். இத்தலம் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். சோழ நாட்டு யானை, உறையூர் வந்தபோது கோழி ஒன்று அந்த யானையைத் தாக்கி ஓடச் செய்ததால், இவ்வூருக்கு ‘கோழியூர்’என்றும் ‘திருக்கோழி’என்றும் பெயர் கிட்டியது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் : அழகிய மணவாளர் தாயார்: கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்: கமலபுஷ்கரிணி, கல்யாண தீர்த்தம் ஆகமம்: பாஞ்சராத்ரம் விமானம்: கமல விமானம் தான் எழுதிய பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தில் இத்தலத்தைப் போற்றி, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ இவர் வண்ணமெனில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா தல வரலாறு துவாபர யுகத்தில் தர்மவர்ம சோழரின் வம்சத்து அரசர் நந்த சோழர் உறையூர் பகுதியை ஆண்டு வந்தார். ரங்கநாதரின் பக்தரான இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. மன்னர், தன் வருத்தத்தை ரங்கநாதரிடம் தெரிவித்தார். அவரும், தன் பக்தருக்காக, மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்குமாறு பணித்தார். ஒரு சமயம் மன்னர் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில், தாமரை மலரில் படுத்திருக்கும் குழந்தையைக் கண்டார். மகிழ்ச்சி அடைந்த மன்னர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய மன்னர் எண்ணினார். ஒருநாள் தோழியருடன் கமலவல்லி வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குதிரையில் பயணிக்கும் ரங்கநாதரைக் காண்கிறார். அவரையே மணக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், கமலவல்லியை மணக்க விரும்புவதாகக் கூறுகிறார். மன்னரும், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியமானார். மன்னரும் தனது மகளுக்காக கோயில் எழுப்பினார். நாச்சியார் கோயில் தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இத்தலம் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இங்கு தாயாரே பிரதானமாகக் கருதப்படுகிறார். இங்கு பெருமாளுக்குரிய அனைத்து ஆராதனைகளும், கமலவல்லித் தாயாருக்கு நடைபெறுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் மணக் கோலத்தில் வடக்கு திசை நோக்கி ரங்கநாதரைப் பார்த்தவாறு நின்றபடி அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர தினத்தில் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் தாயார் மட்டுமே சொர்க்கவாசல் கடக்கிறார். ரங்கநாதர் மார்கழியில் வைகுண்ட வாசல் கடந்ததும், தை அல்லது மாசியில் வரும் ஏகாதசி தினத்தில், கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் கடக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின்போது, நம்பெருமாள் இத்தலத்துக்கு எழுந்தருளி, கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். மீண்டும் சுவாமி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். இவ்வாறு பங்குனித் திருவிழாவில்,பெருமாள் இரண்டு தாயாருடன் சேர்த்தி சேவை அருள்வதைக் காண கண்கோடி வேண்டும். 5 நிலை கோபுரம் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆலயத்திருவிழாக்கள் புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை திருப்பாணாழ்வார் 10 நாள் திருவிழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. திருமணத்தடை நீக்கும் இரண்டாவது திவ்ய தேசமான உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #108 திவ்ய தேசங்கள் #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
ரவிசங்கர் ராஜா, ஆரணி
606 views
20 hours ago
AI indicator
*108 திவ்ய தேசம்* *திரு ஊரகம்* தேவாரம், திருவாசகம், பிரபந்தம் இவற்றை எல்லாம் படிக்கும் போது, இதில் என்ன இருக்கிறது. கடவுள் பற்றிய வர்ணனை, அவர் இப்படி இருப்பார், அப்படி இருப்பார், இன்னது செய்வார், என்று கடவுள் பற்றிய குறிப்புகள் இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாழ்க்கை தத்துவங்கள் இருக்கும். என்னை காப்பாற்று, என்னை உன்னோடு அழைத்துக் கொள் , என்னை மன்னித்துக் கொள் என்ற பிரார்த்தனைகள் இருக்கும். இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால், அதில் வேறு ஒன்றும் தேறாது. அப்படியே தேர்ந்தாலும் , ஏதோ கொஞ்சம் இருக்கலாம். எப்படி இந்தப் பாடல்கள், பாசுரங்கள் காலம் கடந்து நிற்கின்றன? கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களையும் வசீகரிக்கின்றன? அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு தாயாகவும், காதல் வயப்பட்ட தன் மகளை பார்த்து பாடுவது போல ஒரு பாசுரம் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள், மகளுக்காக உருகும் ஒரு தாயின் மனம் தெரியும். ஒரு தந்தை எவ்வளவுதான் பாசத்தை மகள் மேல் கொட்டினாலும், ஒரு தாயின் அளவுக்கு தந்தையால் மகளை நெருங்க முடியாது. ஒரு பெண்ணின் உடல் கூறுகள், உணர்ச்சி கொந்தளிப்புகள், இவற்றை இன்னொரு பெண் தான் அறிந்து கொள்ள முடியும். கூச்சப் படாமல் எளிமையாக பேச முடியும். மகளின் உடல் கூறுகளைப் பற்றி ஒரு தந்தை பேசுவது நாகரீமாக இருக்காது. தாயின் இடத்தில் இருந்து, திருமங்கை ஆழ்வார் பாடுகிறார். மனதை என்னவோ செய்யும் பாடல்.... பாடல் கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூரகத்தாய் என்றும், வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும், அல்லடர்த்து மல்லரை யன்றட்டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும், சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளி சோரச் சோர்க்கின் றாளே. பொருள் கல்லெடுத்துக் = மலையை எடுத்து கல்மாரி = கல் மழையில் இருந்து காத்தாய் என்றும் = காப்பாற்றினாய் என்று கூறும் (கூறுகிறாள்) காமருபூங் = விரும்பும் பூவைப் போன்ற கச்சியூ ரகத்தாய் = காஞ்சி ஊரகத்தில் உள்ளவனே என்றும் = என்று கூறும் வில்லிறுத்து = வில்லினை அறுத்து மெல்லியல் தோள் = மென்மையான தோள்களை கொண்ட சீதையை தோய்ந்தாய் = அடைந்தாய் என்றும் = என்றும் கூறும் வெஃகாவில் = திரு வெஃகா என்ற இடத்தில் துயிலமர்ந்த = துயில் அமர்ந்த வேந்தே. = தலைவனே என்றும், = என்றும் கூறும் அல்லடர்த்து = இருள் சூழ்ந்த (கொடுமை நிறைந்த) மல்லரையன்றட் டாய் = மல்லரை அன்று வென்றாய் என்றும் = என்றும் கூறும் மாகீண்ட கை தலத்து என் = கேசி என்ற அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அவனை அழித்தாய் மைந்தா என்றும் = மைந்தனே என்றும் கூறும் சொல்லெடுத்துத் = சொல் எடுத்துக் கொடுத்து தங்கிளியைச் = தன்னுடைய கிளியை சொல்லே என்று = சொல் என்று கூறும் துணைமுலைமேல் = துணையான இரு முலைகள் மேல் துளிசோரச் = விழி நீர் வடிய சோர்க்கின்றாளே = சோர்ந்து போகின்றாளே,என் மகள். அவளுக்கு அவன் மேல் காதல். அவனைப் பற்றி யாராவது உயர்வாகச் சொன்னால், அவளுக்கு மகிழ்ச்சி. அதற்காக எல்லோரிடமும் போய் கேட்கவா முடியும்? அவன் நினைவு அவளை வாட்டுகிறது. அந்தப் பெண்ணின் தாய்க்குத் தெரிகிறது. தன் மகள் காதல் வசப் பட்டு இருக்கிறாள் என்று தெரிகிறது. மகளைப் பார்த்து, தாயும் உருகுகிறாள். மகளுக்கும், தாயிடம் சென்று நேரே சொல்ல வெட்கம். தயக்கம். தன்னுடைய கிளியை எடுத்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, அவன் பெயரை சொல்லுகிறாள். அந்த கிளியும் திரும்பிச் சொல்லுகிறது. அவள் சிலிர்த்துப் போகிறாள். ஆயர் பாடியில், இந்திரனின் ஏவலால் வருணன் கல் மழை பொழிந்தான். அங்கே இருந்த மலையை கையில் எடுத்து குடை போல பிடித்து அந்த மக்களை கண்ணன் காப்பாற்றினான். அவன் தூக்கியது மலையை. அவளுக்கு அது சாதாரண கல் போலத் தெரிகிறது. அவன் திறமைக்கு முன்னால், இது எல்லாம் சாதாரணம் என்பது போல. "கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்" என்கிறாள் யாராலும் தூக்கக் கூட முடியாத வில். சீதையின் மெல்லிய தோள்களை சேர விரும்பி, அவ்வளவு பெரிய வில்லை எடுத்து அதை முறித்தான். "வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்" பெண் மென்மையானவள் தான். ஆனால், அந்த மென்மை தான், ஆணுக்கு அவ்வளவு பலத்தைத் தருகிறது. பாலில் ஒரு துளி தயிரை விட்டு உறைய விடுவார்கள். அதற்கு தோய்தல் என்று பெயர். பாலும் தயிரும் ஒன்று சேர்ந்து முழுவதும் தயிராகி விடும். சீதையின் தோள்களோடு இராமன் தோய்ந்தான் என்கிறாள். பிரியாமல் இருந்து,இருவரும் இரண்டற கலந்தார்கள். இவள் அவன் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அதைக் கேட்ட கிளியும் அதையே சொல்கிறது. இது போன்ற பாடல்களை சொல்லி விளக்க முடியாது. அந்த உணர்ச்சிகளை அப்படியே உள் வாங்கினால், அந்தப் பாடலை உணரலாம். மீண்டும் ஒரு மு #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 றை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள். 🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #🙏கோவில் #108 திவ்ய தேசங்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.7K views
5 days ago
AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-1* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீரங்கம் ரங்கநாத* *சுவாமி கோயில்* 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் / உற்சவர்: ரங்கநாதர் / நம்பெருமாள் தாயார்: ரங்கநாயகி தலவிருட்சம்: புன்னை தீர்த்தம்: சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள் ஆகமம் / பூஜை: பாஞ்சராத்திரம் விமானம்: பிரணாவாக்ருதி பஞ்சரங்கத் தலங்களுள் (ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம், ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம், சாரங்கபாணி கோயில், குடந்தை, அப்பால ரங்கநாதர், கோவிலடி, பரிமள ரங்கநாதர் கோயில், மயிலாடுதுறை) ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் தவிர ஏனையோரால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை கம்பர் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்க்கான தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம்: பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே. ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் ஆருளர்களைக் கணம்மா அரங்கமா நகருளானே! தல வரலாறு திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை. கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார். ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. கோயில் சிறப்பு இத்தலத்து ராஜ கோபுரம், இந்தியாவின் மிகப் பெரிய ராஜ கோபுரம் ஆகும். பல ஏக்கர் (ஏறத்தாழ 156 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் அழகிய மண்டபங்கள், திருக்குளங்கள், தனி சந்நிதிகள், 21 கோபுரங்கள், 7 சுற்றுப் பிரகாரங்கள் அமைந்துள்ளன. மேலும் 7 மதில்கள், 7 தாயார்கள், 7 உற்சவங்கள், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என்று சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. பொன்னால் வேயப்பட்ட ஸ்ரீரங்க விமானம், ‘ஓம்’என்ற பிரணவ வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது. இதற்கு 24 கி.மீ தொலைவு சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும் இறைவனின் திருவடியை அடையக் கூடிய முக்தி நிச்சயம் என்று ஸ்ரீரங்க தலவரலாறு உரைக்கிறது. ரங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தை வணங்கி, உயர்ந்து நோக்கினால், கொடிமரம் அசைவது போன்று தோன்றும். தனது 120-வது வயதில் (கிபி 1137) சாயுஜ்யம் அடைந்தார் ஸ்ரீராமானுஜர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இக்கோயிலில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தேய்வதாக கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை ரங்கநாதரின் திருப்பாதத்தில் இருந்து காலணிகள் கழற்றப்படும்போது, அவரே பயன்படுத்தப்பட்டவை போல தேய்ந்து காணப்படும். ரங்கநாதரின் திருக்கண்கள், விபீஷணனால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டன. 20 அடி விட்டமும், 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் உள்ளன. எவ்வளவு நெற்கதிர்கள் கொட்டினாலும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரிவடையும் தன்மை கொண்டதாக நெற்குதிர்கள் அமைந்துள்ளன. ரங்கநாச்சியார் சந்நிதிக்கு வெளியில் அமைந்துள்ள ஐந்து குழி மூன்று வாசல் குறிப்பிடத்தக்கது. அர்த்த பஞ்சக ஞானத்தை ஐந்து குழி குறிப்பதாகவும், மூன்று வாசல் பிரம்மத்தின் வழி என்றும் கூறப்படுகிறது. ஐந்து குழிகள் வழியே ஐந்து விரல்களை வைத்து தென்திசை நோக்கினால் பரமபத வாசல் தெரியும் என்பதால் இவ்விதம், தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். இக்கோயில் சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்களைக் கொண்டுள்ளது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம், காடுகாண் காதை, அகநானூறு உறையூர் முதுகூத்தன்னார் பாடல்களில் திருவரங்கம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களில், 247 பாசுரங்கள் திருவரங்கம் மீது அமைந்துள்ளன. திருமங்கையாழ்வார் 73 பாடல்களையும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55, பெரியாழ்வார் 35, குலசேகராழ்வார் 31, திருமழிசையாழ்வார் 14, நம்மாழ்வார் 12, திருப்பாணாழ்வார் 10, ஆண்டாள், 10, பூதத்தாழ்வார் 4, பொய்கையாழ்வார் 1 பாடலையும், பேயாழ்வார் 2 பாடல்களையும் பாடியுள்ளனர். ரங்கநாதரும் 7 அதிசயமும் ரங்கநாதர் கோயில் உள்ள ஏழு மதில் சுற்றுகள் ஏழு உலகங்களாக கருதப்படுகின்றன. மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று - பூலோகம், திருவிக்கிரம சோழன் திருச்சுற்று - புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று - சுபர்லோகம், திருமங்கை மன்னன் திருச்சுற்று - மஹர்கோகம், குலசேகரன் திருச்சுற்று - ஜநோலோகம், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று - தபோலோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று - சத்யலோகம் என்று கருதப்படுகின்றன. பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம் (நைவேத்தியம்), பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்ற பெருமைகளைக் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என்று 7 நாச்சியார் உள்ளனர். ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்துக்கு 7 முறை (விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் - அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, பாரிவேட்டை, ஆதி பிரம்மோற்சவம்) நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். வருடத்துக்கு 7 முறை (சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, தை, மாசி, பங்குனி) நம்பெருமாள் கோயிலை விட்டு வெளியே எழுந்தருள்வார். ஏழு உற்சவத்தின்போது, 7-ம் நாள் (வருடத்துக்கு 7 முறை - சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி) நெல்லளவு கண்டருள்வார். தாயார் சந்நிதியில் வருடத்துக்கு 7 உற்சவங்கள் (கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி, ஊஞ்சல் உற்சவம், அத்யயநோற்சவம், பங்குனி உற்சவம்) நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் 7-ம் மாதமான ஐப்பசி 30 நாட்களும் தங்க குடத்தில் புனிதநீர் யானை மீது கொண்டு வரப்படும். திருமாலின் 7-ம் அவதாரமான ராமாவதாரம் பூஜித்த தலம் ஸ்ரீரங்கம் கோயில். பன்னிரெண்டு ஆழ்வார்களும் 7 சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். முதல் சந்நிதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இரண்டாம் சந்நிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார், மூன்றாம் சந்நிதியில் குலசேகர ஆழ்வார், நான்காம் சந்நிதியில் திருப்பாணாழ்வார், ஐந்தாம் சந்நிதியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆறாம் சந்நிதியில் திருமழிசை ஆழ்வார், ஏழாம் சந்நிதியில் பெரியாழ்வார், ஆண்டாள் எழுந்தருளியுள்ளனர். இராப்பத்து 7-ம் திருநாளில் பராங்குச நாயகி திருக்கோலத்தில் நம்மாழ்வார் அருள்பாலிப்பார். பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் (நாழிகெட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம், கார்த்திகை கோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம் தெற்கு கட்டை கோபுரம், தெற்கு கட்டை கோபுரம் - ஐஐ, ராஜ கோபுரம்) உள்ளன. 7 உற்சவ காலங்களில் (வசந்த உற்சவம், சங்கராந்தி, பாரி வேட்டை, அத்யயநோற்சவம், பவித்ரோற்சவம், ஊஞ்சல் உற்சவம், கோடை உற்சவம்) ரங்கநாதர் குறிப்பிட்ட மண்டபங்களில் மட்டும் எழுந்தருள்வார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாக 7 சேவைகள் உள்ளன. அவை பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி, சாலி அலங்காரம் ஆகும். ஆலயத்திருவிழாக்கள் ஆடிப்பெருக்கு உற்சவத்தின்போது பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். காவிரித் தாய்க்கு அவர் சார்பில் பட்டுப் புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை போன்றவை சீதனமாக அளிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம், 3 பிரம்மோற்சவ விழா, மாசி மாத தெப்பத் திருவிழா, தமிழ், ஆங்கில புத்தாண்டு, சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #திருச்சி ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏கோவில் #108 திவ்ய தேசங்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
888 views
9 days ago
AI indicator
#நவதிருப்பதி_தரிசனம் தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுமே நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றன. #திருவைகுண்டம், திருவரகுணமங்கை (நத்தம்), திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகியவை அந்தத் திருப்பதிகள். #திருவைகுண்டம்: திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது திருவைகுண்டம். மூலவரின் திருநாமம் வைகுந்தநாதன். நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். கிழக்கு பார்த்த திருமுக மண்டலம். மூலவருடன் தாயார் கிடையாது. உற்ஸவர் திருநாமம் கள்ளபிரான். தாயாரின் திருநாமம் வைகுண்டவல்லி, பூதேவி தனி சந்நிதியில் அருள்புரிகிறார். #திருவரகுணமங்கை (நத்தம்): ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் கிழக்கே உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் விஜயாசன பெருமாள். ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார். தாயார் வரகுணவல்லி, வரகுண மங்கை ஆகிய திருநாமங்களில் அழைக்கப்படுகிறார். #திருப்புளிங்குடி: திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் காய்சினவேந்தன். உற்ஸவர் திருநாமம் எம்இடர்களைவான். தாயார் மலர்மகள், திருமகள் என்று அழைக்கப்படுகிறார். உற்ஸவத் தாயாரின் திருநாமம் புளிங்குடிவல்லி. #பெருங்குளம்: திருப்புளிங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் இந்தத் தலம் உள்ளது. மூலவரின் திருநாமம் வேங்கடவானன். உற்ஸவர் மாயக்கூத்தன். தாயார் அலர்மேலு மங்கை, குளந்தை வல்லி என்று திருநாமங்களோடு அழைக்கப்படுகிறார். #திருத்தொலைவில்லி_மங்கலம் (இரட்டைத் திருப்பதி): பெருங்குளத்திலிருந்து கிழக்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வழியாக மேற்கு நோக்கி 4 கி.மீ. தொலைவு பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம். இருகோயில்களும் அருகருகே அமைந்துள்ளன. இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் நம்மாழ்வார் அவதரித்த அப்பன்கோயில் உள்ளது. தெற்கு கோயில்: மூலவர் திருநாமம் தேவர்பிரான். தாயார் - உபதாயார்களுக்கு தனி சந்நிதி இல்லை. வடக்கு கோயில்: மூலவர் திருநாமம் அரவிந்தலோசனன். உற்சவர் செந்தாமரைக் கண்ணன். தாயாரின் திருநாமம் கருத்தடங்கண்ணி. #தென்திருப்பேரை: தாமிரபரணிக்கரையின் தென்கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது. மூலவர் திருநாமம் மகரநெடுங்குழைக்காதன். உற்ஸவர் நிகரில் முகில் வண்ணன். தாயாரின் திருநாமம் குழைக்காத நாச்சியார் மற்றும் திருப்பேரை நாச்சியார். #திருக்கோளூர்: தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ. வந்து தெற்கே போகும் ஒரு கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். மதுரகவி ஆழ்வாரின் அவதார தலம் இது. மூலவரின் திருநாமம் வைத்தமாநிதிப் பெருமாள். தாயாரின் திருநாமம் குமுதவல்லி. #ஆழ்வார்திருநகரி : திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது ஆழ்வார்திருநகரி. மூலவரின் திருநாமம் ஆதிநாதன். பொலிந்து நின்ற பிரான். தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. இந்தத் திருப்பதிகள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தவை. 🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #108 திவ்ய தேசங்கள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
808 views
9 days ago
AI indicator
*நூற்றெட்டுத்திருப்பதி* *யந்தாதி-அன்பில்* பிள்ளைகள் வளர்ந்து அது அது வேறு வேறு ஊர்களுக்குப் போய் விடுகின்றன. சில சமயம் அயல் நாடுகளுக்குக் கூட போய் விடுகின்றன. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். பிள்ளைகளுக்கும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இருந்தாலும் , கிட்டத்திலா இருக்கு ஒரு எட்டு போய் விட்டு வரலாம் என்றால். நேரம், பண விரயம், உடல் உழைப்பு என்று ஆயிரம் சங்கடங்கள் வருகின்றன. வருடத்துக்கு ஒரு முறை வருவதே கடினமாக இருக்கிறது. ஒரு வழி இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி சென்று பார்த்து கொள்ளலாம் அல்லவா ? இங்கிருக்கும் ஊருக்கே இந்த பாடு என்றால், வைகுந்தத்துக்கு ? ஒரு நடை போயிட்டு வர முடியுமா ? ஆண்டவனுக்கும் அவன் பிள்ளைகளை பார்க்க ஆசை தான். பிள்ளைகளுக்கும் இறைவனை தரிசிக்க ஆசை தான். முடியுமா ? எனவே தான், பெருமாள், பக்தர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்து இருந்து கோவில் கொள்கிறாராம். பக்தனுக்கு சிரமம் வேண்டாம். நாம் அவன் பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி வந்து நம்மை பார்ப்பான். நாமும் அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று. கோவிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இறுதியில் அவன் மனதியிலேயே இடம் பிடித்துக் கொள்ளலாம் என்று ஆண்டவன் நினைத்துக் கொண்டிருப்பானாம். நான் சொல்லவில்லை, திருமழிசை ஆழ்வார் கூறுகிறார். பாடல் நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத் தணைப்பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனாவான். பொருள் நாகத் தணைக் = ஆதி சேஷனை படுக்கையாக கொண்ட (இடங்கள்) குடந்தை = திருக்குடந்தை வெஃகா = திரு வெஃகா திருவெவ்வுள் = திருவெள்ளுர் நாகத் தணையரங்கம் = நாகத்தை அணையாகக் கொண்ட திருவரங்கம் பேர் = திருப்பேரூர் அன்பில் = அன்பில் நாகத்தணைப்பாற் கடல் = பாம்பணையில் உள்ள பாற்கடல் கிடக்கும் = சயனித்து இருக்கும் ஆதி = மூலப் பொருளான நெடுமால் = நெடிய மால் அணைப்பார் = அணைத்துக் கொள்ளும் அன்பர்கள் கருத்தன் = கருத்தில், மனதில் ஆவான்= இருப்பான் அவனுக்கு இருக்க ஆசை உள்ள இடம் அன்பர்கள் மனம்தான். அங்கு வருவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து , பாற்கடலில் இருந்து எழுந்து வந்து பக்தன் இருக்கும் இடத்துக்கு அருகில் கோவில் கொண்டிருக்கிறானாம். அப்படி அவன் சயனம் கொண்ட இடங்கள் ஏழு திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் என்ற இந்த ஐந்து இடங்களில் பள்ளி கொண்டிருக்கின்றானாம். அப்படி அவன் சயனம் கொண்ட ஏழு இடங்களில் ஒன்றான இடம் அன்பில். அது தான் நாம் இன்று பார்க்க இருக்கின்ற இடம். நமக்கு வாழ்வில் எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன. பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக் குறைவு, உறவுகளில் சிக்கல், என்று எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன. இந்த ஆண்டவன் நினைத்தால் நமக்கு இந்த துன்பங்களை எல்லாம் நீக்கி எப்போதும் இன்பமாக இருக்க வழி செய்ய முடியாதா ? எதற்கு இவ்வளவு சோதனை என்று நாம் மனம் நொந்து கொள்வோம். தாயின் அன்பும், தந்தையின் அன்பும் வெளிப்படும் விதம் வேறு வேறாக இருக்கும். பிள்ளை கீழே விழுந்து விட்டால் , தாய் பதறி ஓடிப் போய் தூக்குவாள் . தந்தையோ பார்த்துக் கொண்டிருப்பார். அவனே எழுந்திரிக்கட்டும். வலி தாங்கட்டும் . அவன் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருக்கிறது. எத்தனையோ தரம் விழுவான். அவனே எழுந்து நிற்கப் பழக வேண்டும் என்று நினைத்து பேசாமல் இருப்பார். நான் இப்போது தூக்கி விட்டால், பின் அவன் தானே எழுந்திருப்பது எப்படி என்று அறியாமலேயே போய் விடுவான். வலிக்கும் தான், ஆனால் , ஒரு முறை எழ பழக்கிக் கொண்டால், பின் அவன் தன்னைத் தானே பார்த்துக் கொள்வான் என்று தந்தை நினைப்பர். பிள்ளை நினைக்கலாம், "என்ன தகப்பன் இவன். நான் இவ்வளவு துன்பப் படுகிறேன். பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறானே. இவனுக்கு என் மேல் அன்பே இல்லையா " என்று. அன்பு இருப்பதால்தான் சும்மா இருக்கிறார் என்பது பிள்ளைக்குத் தெரியாது. அது மட்டும் அல்ல, பல சமயங்களில் பிள்ளைகள் தந்தையை நினைப்பது கூட கிடையாது. அவர்களுக்கு அவர்கள் வேலை, குடும்பம், பிள்ளைகள் என்று நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. பெற்றோரை நினைக்க நேரம் இல்லை. அதற்காக பெற்றோர் பிள்ளைகளை நினைக்காமல் இருப்பதில்லை. பிள்ளை பெருமாள் அய்யங்கார் , பெருமாளை , "தந்தையே" என்று அழைக்கிறார். நான் உன்னை நினைக்கவிட்டாலும், நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாய் என்று கூறுவதைப் போல. அது மட்டும் அல்ல, இந்த பிறவிக்கு ஒரு தந்தை இருக்கிறார், எத்தனையோ பிறவிகள். என்னவெல்லாமாகப் பிறந்தோமோ ? பிறக்க இருக்கிறோமோ ? அங்கெல்லாம் யார் தந்தை ? ஆண்டவன் தான் எப்போதும் தந்தையாக இருப்பவன் என்று கூறுகிறார். அவன் தான் ஆதி முதலே தந்தை. அவனை தந்தை என்று அழைப்பதன் மூலம், அவனுடைய குடும்பத்தில் தானும் ஒருவன் என்று நிலை நிறுத்திக் கொள்கிறார். அவனுடைய திருவடிகள் மேல் அன்பு செலுத்துவதைத் தவிர காசு, பணம், அதிகாரம் என்று சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை என்கிறார். பாடல் போற்றி செயவோர் குடைக்கீழ்ப்பொன்னாடு மிந்நாடு நாற்றிசையுமாண்டாலு நன்கில்லை - தோற்றமிலா வெந்தையன்பிலாதியிணைத்தாமரையடிக்கே சிந்தையன்பிலாதார்சிலர். சீர்பொ பிரித்த பின் போற்றி செய ஓர் குடைக் கீழ் பொன்னாடும் இந்நாடும் நான்கு திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை - தோற்றமிலா எந்தை அன்பில் ஆதி இணை தாமரை அடிக்கே சிந்தை அன்பில்லாதார் சிலர் பொருள் போற்றி செய = எல்லோரும் போற்றும் படி ஓர் குடைக் கீழ் = ஒரே பெரிய அரசாக, சாம்ராஜ்யமாக பொன்னாடும் = மேல் உலகும் இந்நாடும் = பூவுலகம் ஆன இந்த பூமியையும் நான்கு திசையும் = நான்கு திசையும் சூழ்ந்த நிலப் பரப்பை ஆண்டாலும் = ஆட்சி செய்யும் அதிகாரம் இருந்தாலும் நன்கு இல்லை = நன்மை இல்லை தோற்றமிலா = தோற்றம் என்பது இல்லாத எந்தை = என் தந்தை என்பதன் மரூஉ அன்பில் = திரு அன்பில் என்ற தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி = அனைத்துக்கும் ஆதியான அவனின் இணை = இணையான இரண்டு தாமரை = தாமரை போன்ற அடிக்கே = அடிகளுக்கே சிந்தை = மனதில் கொள்ளாத அன்பில்லாதார் சிலர் = அன்பில்லாதர் சிலர் இறைவனை யார் நினைக்க மாட்டார்கள் என்றால், மனதில் அன்பு இல்லாதவர்கள் நினைக்க மாட்டார்களாம். இறைவனை நினைக்க படிக்க வேண்டாம், ஞானம் வேண்டாம், அன்பு இருந்தால் போதும். அன்பு இருந்தால் அவன் நினைவு வரும். அவனை நினைக்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம், அவன் உங்கள் மனதில் இருக்கிறான் என்று தானே அர்த்தம். அதுக்குத்தானே அவன் இந்த பாடு படுகிறான். அன்பு கொள்ளுங்கள். ஆண்டவன் உங்களைத் தேடி வருவான். 🚩🕉🪷🙏🏼 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள்