#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 14ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.08.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
------------
அய்யா முட்டப்பதி அடைதல்:
===========================
கைக்குள்ளே நின்ற கரியசீ சன்மாரில்
மெய்க்குள் ளறிய விளம்பினா ரெம்பெருமாள்
இன்றைத் திவசம் இசைந்தமுட் டப்பதியில்
நன்றிப்போ போக நல்மணிக ளாகுதெனச்
.
விளக்கம்:
=========
வைகுண்டர் தம் அருகில் நின்ற கருமை நிறம் பொருந்திய சீடர்களை நோக்கி, சீடர்களே, இன்றைக்கு நம் மனதுக்கு விருப்பமான முட்டபதியை நோக்கிச் செல்ல நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் மட்டும் அறியும்படியாக சொன்னார்.
.
.
அகிலம்:
========
சொல்ல அறிந்து சீசன்மார் தாமகிழ்ந்து
நல்லதெனச் சொல்லி நாடி யவரிருக்க
அன்றிரா தன்னில் ஆரு மறியாமல்
நன்றினிய சீசன் நாலுபேர் தாமறிய
வந்த முனியும் வளர்ந்த இருமுனியும்
சொந்தமுடன் நாதன் தொட்டில் மிகஏறி
சீசன்மார் காவிச் சிணமாய் மிகநடக்க
வாசமுள்ள மாமுனிவர் வலமிடமுஞ் சூழ்ந்துவரத்
துடியாகத் தொட்டில் சுவாமி மிகஇருந்து
வடிவான முட்டப் பதிதலத்தில் வந்தனரே
.
விளக்கம்:
==========
இந்த இரகசியத்தை அறிந்த சீசன்மார் மகிழ்ச்சியுற்று மிகவும் நல்லது எனச் சொல்லி அங்கே காத்து இருந்தனர். அன்று இரவு யாரும் அறியாதவண்ணம் இனிய சீசர்கள் நான்கு பேர்களும், அவர்கள் அறியும்படியாகத் தம்மை அழைக்க வந்த முனிகளும் தம்முடனேயே இருந்து வளர்ந்து வந்த இரண்டு முனிவர்களும் தாம் தன்னந்தனியாகத் தொட்டிலின் மேல் ஏறிட சீசன்மார் தொட்டிலைச் சுமந்தவண்ணம் மிகவும் விரைவாக முட்டப்பதி நோக்கி நடந்தனர். அதிக வாசம் பொருந்திய முனிவர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ச்சியாகச் சுவாமி தொட்டிலில் இருந்து முட்டப்பதி இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தார்.
.
.
அகிலம்:
========
முட்டப் பதியில் முகுந்த னரிநாதன்
கிட்ட வருகும் கிருஷ்ணர்வந்து சேர்ந்திடவே
மகனை மிகக்கண்டு மாவிருப்பத் தோடிளகி
உகமாள வந்த உடையமக னேயுனத
சடமெல்லாம் வாடி சடைப்பானே னென்மகனே
வடவெல்லா மென்னோடு வகுத்துரைநீ யென்மகனே
கண்ணே மணியே கருத்துள்ள நாயகமே
.
விளக்கம்:
=========
இவ்வாறு வைகுண்டர் முட்டப்பதி வந்தடைந்தவுடன் நாராயணர் தம் அருகில் வந்து கொண்டிருந்த தம் மகன் வைகுண்டரைக் கண்டு மிகுந்த விருப்பத்தோடு தம் இடத்தை விட்டு எழுந்து வைகுண்டரை நோக்கி, இக்கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை ஆள வந்த என் மகனே, உன் உடம்பு முழுவதும் வாடிக் களைப்பாய் இருப்பதன் காரணம் என்ன? என் மகனே, உன்னுடைய துன்பங்களை எல்லாம் என்னிடம் வகை வகையாகப் பிரித்துக் கூறுவாயாக, என் கண்ணே, மணியே, என்மேல் கருத்துள்ள தலைவனே என்றார்.
.
.
அகிலம்:
=========
விண்ணே வொளியே வேதத் திருவிளக்கே
கலியில் மிஇருந்து கலக்க மிகஅடைந்த
மெலிவெல்லாஞ் சொல்லி விளம்புநீ யென்மகனே
அடித்ததா ருன்னை அவனிதனில் பேயனென்று
கடுத்தமது செய்தக் கலக்கமெல்லாஞ் சொல்லுவென்றார்
.
விளக்கம்:
==========
ஆகாயமே, ஒளியே, வேதத் திருவிளக்கே, கலியினுள் இருந்து நான் அடைந்த மனக் கலக்கத்திற்குக் காரணமான துன்பங்களை எல்லாம் தெளிவாக என்னிடம் எடுத்துக் கூறுவாயாக. உலகில் உன்னைப் பேயன் என்று கூறி அடித்தவன் யார்? என்பது போன்ற கடினமான கொடுமைகளையும், துன்பங்களையும் என்னிடம் எடுத்துக் கூறுவாயாக என்று கூறினார்.
.
.
அகிலம்:
========
சொல்லென்று மாலும் சிவமு மெடுத்துரைக்க
வல்லபெல மான வைகுண்ட ரேதுரைப்பார்
செந்தூர்க் கடலில் செகலதுக்குள் ளென்னைவைத்து
முந்த எனக்கு மொழிந்த வுபதேசம்
கப்பாம லாறு வருசந் தவசாக
மெய்ப்பாவின் பாலருந்தி வீடுசொத் தெண்ணாமல்
கலிக்காசி யாசை கனாவில் நினையாமல்
அலிக்கியானப் பெண்ணின் ஆசை யணுகாமல்
பக்கக் கிளையாசை பாவித் தினிதாசை
அக்கத்தி னாசை அனுப்போல் நினையாமல்
.
விளக்கம்:
=========
இவ்வாறு திருமால் கூறவும், சிவனும் அதை ஆமோதித்தார். எனவே வைகுண்டர் நாராயணரை நோக்கி,
தந்தையே, திருச்செந்தூர்க் கடலினுள் வைத்து என்னை உமது மடி மீது இருத்தி, முன்பு எனக்குக் கூறிய உபதேசங்களில் எந்த வகைத் தவறும் வராவண்ணம் ஆறு வருடங்களாகத் தவமிருக்கத் தொடங்கினேன். அப்பொழுது உண்மையாகவே, நான் பசுவின் பாலை அருந்தினேன். வீடு, சொத்து போன்றவற்றை எண்ணாது, கலியுகத்தில் உள்ள காசு, பணத்திற்காக என் கனவில் கூட ஆசை கொண்டு நினையாது, ஞானத்திற்கு எதிரான பெண் ஆசை என்னிடம் அணுகாதவாறு அகற்றி, பக்கத்தில் வாழும் சுற்றத்தாரின் மேல் உள்ள ஆசை, வேறு இனிய ஆசைகள், பொன்னாசை ஆகியவற்றைச் சிறு அணு அளவுகூட நினைத்துப் பார்க்காமல் வாழ்ந்தேன்.
.
.
அகிலம்:
========
நல்ல துணியாசை நளின மொழியாசை
சொல்லினிய ஆசை தீன்பண்டத் தினாசை
தேய்ப்புக் குளிப்புச் சிறந்த பொருளாசை
தாற்பரிய மானச் சந்தோசத் தினாசை
பூமியா சைமுதலாய்ப் பேராசை யும்வெறுத்துச்
.
விளக்கம்:
==========
நல்ல துணி அணியும், ஆசை, நளினமான மொழி பேசும் ஆசை, இனிய சொல் கேட்கும் ஆசை, தின்பண்ட ஆசை, நன்றாகக் குளிக்கின்ற ஆசை, சிறப்பான பொருள்கள் மேலுள்ள ஆசை, உண்மை உள்ளவரோடு சந்தோசம் கொள்ளும் ஆசை போன்ற ஆசைகளையும் பூமி ஆசை முதல் பேராசைகளையும் வெறுத்தேன்.
.
.
அகிலம்:
========
சாமி யுமதருளால் தொல்புவியி லுள்ளோர்க்குத்
தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல்
மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான்
நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன்
வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன்
தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன்
பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன்
கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன்
.
விளக்கம்:
=========
சுவாமியின் அருளால் மக்களுக்குத் தண்ணீரால் எல்லா வியாதிகளையும் எனக்கு வாய்த்த அறமாக கொண்டு நீக்கி வந்தேன். அப்படி அல்லாமல் நான் எனக்காக எந்தவிதப் பொருளைச் சேர்ப்பதிலும் கருத்துக் கொள்ளவில்லை. அப்படித் தேடிய ஒரு காசைக்கூட நான் அறியவில்லை. வாழ்வு இல்லா மக்களுக்குச் சிறந்த வாழ்வு செய்து கொடுத்தேன். வாழ்வில் தாழ்வு அடைந்த அன்பர்களுக்குத் தாழ்வை நீக்கி வைத்தேன். பிள்ளை இல்லா பெண்களுக்குப் பிள்ளை உருவாக அருளைக் கொடுத்தேன். கள்ளத் தனமான எண்ணத்தை எல்லாம் மாறச் செய்து பேய்களிடம் இருந்த வரங்களை என்னிடம் ஒப்படைக்கச் செய்தேன்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.