#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! குப்பை குவியலை உடனே அகற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கு முஸ்லிம் மக்கள் கழகம் கோரிக்கை விழுப்புரம், ஜூலை 22: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் அலட்சியமான செயல்பாடால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகக் குற்றம்சாட்டி, உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், குறிப்பாக ராஜாங்குளம் பெருமாள் கோவில் தெரு, ஈராச்சந்து பூங்கா சுற்றுப்பகுதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் குப்பைகள் தேங்கி அசுத்தமான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குப்பைக் குவியல்களால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் சுகாதார பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதுடன், தொற்று நோய்கள் பரவும் சூழலும் உருவாகியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். திண்டிவனம் நகராட்சியின் மெத்தனப் போக்கை முஸ்லிம் மக்கள் கழகம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பித்து, நகரின் அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், திண்டிவனத்தை குப்பையற்ற, தூய்மையான நகரமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
17 likes
10 shares

More like this