#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திண்டிவனம், ஜூன் 12: உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடைபெற்றது. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டிவனம் வட்டாட்சியர் மு. ஏழுமலை தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளியும், நிறுவனத் தலைவருமான முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட குழந்தைகள் உதவி மைய வழக்குப் பணியாளர் இலட்சுமிபதி, திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், மண்டல துணை வட்டாட்சியர் பச்சையம்மாள், துணை வட்டாட்சியர் மலர்விழி, அப்போலோ சமுதாயக் கல்லூரி தாளாளர் முரளிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அத்துடன், அப்போலோ சமுதாயக் கல்லூரி செவிலியர் மாணவ-மாணவிகள் மற்றும் ஒலக்கூர் சரஸ்வதி சட்டக் கல்லூரி மாணவி ஜை. ஆயிஷா பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் பேசியோர், குழந்தைகளின் கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை என்றும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
18 likes
9 shares

More like this