திரைபாரதி
ShareChat
click to see wallet page
@thiraibharathi
thiraibharathi
திரைபாரதி
@thiraibharathi
ஐ லவ் ஷேர்சாட்.
காங்கிரசின் பரிதாபகரமான நிலை... இதற்கு யார் காரணம் என்றால் யாரும் இல்லை. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது, அம்புட்டுத்தேன்! கிட்டத்தட்ட தவெகவின் நிலையும் அதுதான். அரசியலில் தவெகவின் வரவு யாரை பாதித்திருக்கிறதோ இல்லையோ காங்கிரசை வெகுவாக பாதிக்கிறது என்பதே உண்மை. கட்சியின் எதிர்காலத்தை முன்னிட்டும் சுதந்திரமான செயல்பாட்டை முன்னிட்டும் காங்கிரஸ் தவெகவுடன் சேர்வது நல்லது என்பது இளைஞர்களின் கருத்து. ஆனால், ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகை போன்ற தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். BJP சிறப்பான கூட்டணியை அமைப்பதற்கு எவ்வளவுதான் போராடினாலும், எடப்பாடி அதன் வியூகங்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கி வருகிறார். அதற்கு ஒன்றல்ல, பல உதாரணங்கள் உண்டு. * கட்சியில் ஓபிஸ் இணைவதற்கு எதிர்ப்பு. * கட்சியில் சசிகலா இணைவதற்கு எதிர்ப்பு * செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது. (அதாவது, விசுவாசத்திற்கு கட்சியில் EPS ஐ விட்டால் வேறு ஆளே இல்லை! * தேமுதிகவை அணைத்துக் கொண்டு செல்லத் தவறியது. (அதை திமுக பக்கம் திருப்பியதே இவரது ராஜதந்திரம்.) காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கிறது என வைத்துக் கொள்வோம். அத்துடன் சசிகலாவும் எடப்பாடியை பழிவாங்கும் நோக்குடன் தனிக்கட்சி ஆரம்பித்தால், NDA கூட்டணிக்கு மிகவும் சிக்கலாகிவிடும். மேலும், ஒருவேளை அப்படி நேர்ந்தால், தவெகவின் ஆட்டம் இந்த தேர்தலுடன் குளோஸ்! NDA கூட்டணியில் தவெக ஐக்கியமானால், நிச்சயம் நிலைமை தலைகீழாக மாறும், திமுக தோல்வி அடையும் என்பது களநிலவரங்களில் உறுதியாகத் தெரிகிறது. விஜய் மற்றும் EPS க்கு "இது வாழ்வா சாவா?" என்ற தேர்தலாக இருப்பதால் கடைசி நேரத்தில் BJPயின் முயற்சியில் கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்தப் பின்புத்தில் காங்கிரசின் நிலை பரிதாபமாகிறது. அதிமுகவும் தவெகவும் கூட்டணி அமைக்கிற பட்சத்தில், தேர்தலில் அதன் வெற்றி வாய்ப்பு பறிபோகிறது. மேலும், அடுத்த பாராளுமன்னத் தேர்தலிலும் இது எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரே மாற்றுவழி, காங்கிரஸ் தவெகவுடன் கூட்டு வைத்துக் கொள்வதே. காங்கிரஸ் தவெகவுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் போது தொங்கு சட்டசபை அமைவது சாத்தியமாகலாம். தேர்தலுக்குப் பின் கூட்டணி நிலவரங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்போது, ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் ஆசை நிறைவேறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பின்குறிப்பு: விஜய் காங்கிரசை நம்பி காரியத்தில் இறங்குவதை விட NDAவுடன் கூட்டு வைத்தால் துணை முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்! "கரணம் தப்பினால் மரணம்" என்பது அரசியலுக்கும் பொருந்தும்! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05
உலகமே எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் (ஆவலுடன்?) போர் எப்போது தொடங்கும்? பிறகு? மண்டைகள் உடையாமல் வெறும் கூப்பாடுகளில் நடக்கும் சாதாரண தெருச்சண்டைகளில் என்ன சுவாரசியம் இருக்கிறது? ஈரானுக்கு டிரம்ப் பத்து நாள் கெடு! (கெடுவுக்கு முன்பே டிரம்ப் எதுவும் செய்யலாம் என்பது எழுதப்படாத விதி) இவர் என்ன கெடு விதிப்பது? எப்போது போர் தொடங்க வேண்டும் என்பதை டிரம்ப்தான் முடிவு செய்வாரா? அதன்படி டிரம்ப் ஈரானுக்கு கெடுவிதிப்பாரா? எல்லாமே அமெரிக்காவின் திட்டப்படியே நடக்க வேண்டுமா என்ன? ஏன் இப்படி நடக்கக் கூடாது? அமெரிக்காவின் வசதிப்படி அது ஒரு நாளை நிர்ணயித்து போர் தொடங்கும் வரை ஈரான் காத்திருக்க வேண்டுமா? எமது நாட்டைச் சுற்றி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போர்க் கப்பல்கள் 24 மணி நேரத்தில் பின் வாங்கா விட்டால் நாங்கள் போர் தொடுப்போம் என்று ஈரான் கூறலாமே? இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. ஏனென்றால், முதலில் தாக்கும் நாட்டுக்கே போர் சூழ்நிலை சாதகமாக இருக்கும். ஏனென்றால், அடுத்த நாடு அப்படி ஒரு தாக்குதல் நிகழும் பட்சத்தில், தற்காப்பு வேலைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, அமெரிக்க நிபந்தனைகள் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல என்ற நிலையில் ஈரான் உடனடியாக போரில் இறங்குமா? இப்படி ஏராளமான கேள்விகள் நமக்கு எழுகின்றன. அங்கேதான் சிக்கல் உள்ளது. ஈரான் அமெரிக்க போர்க் கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா அணு ஆயுதங்களை ஏவி ஈரானையே துவம்சம் செய்வதற்கு வழி கோலியது போல் ஆகிவிடும். டிரம்பும் அந்த சாக்கைத்தான் எதிர்பார்க்கிறார். ஈரான் அப்படி அழிவதில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இலாபம் இல்லை. எனவே, ரஷ்யா மற்றும் சீனா, கையறுநிலையில் வேடிக்கை பார்க்கின்றன. ஈரான் உடன்படிக்கைக்கு வராவிட்டால் அதன் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா சொல்கிறது. போர் தொடங்கிய பின்னர் அமெரிக்காவுக்கு எப்படி இழப்பை ஏற்படுத்தலாம் என்ற கணக்கில் சீனாவும் ரஷ்யாவும் காத்துக்கொண்டு இருக்கின்றன. சமூக ஊடகங்களில் வலம் வரும் "பாதுகாப்பு நிபுணர்கள்" அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போரடிக்கிறது. உலகமே எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் (ஆவலுடன்?) போர் எப்போது தொடங்கும்? அல்லது, அமெரிக்காவின் விருப்பத்தின் படி அதன் நிபந்தனைகளை ஏற்று ஈரான் ஓர் உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ளுமா? அதுவும், டிரம்புடன் உடன்படிக்கை என்பது சாத்தியமா? அதேசமயம், ஏற்கனவே இருக்கிற பிரச்சினைகளில், அமெரிக்காவினால் நீண்ட நாட்களுக்கு போர் முஸ்தீபுகளை நீட்டித்துக் கொண்டே போவதும் சாத்தியம் இல்லை. கௌரவமாக இந்த சிக்கலில் இருந்து மீள்வது எப்படி என்பதே இன்று அமெரிக்காவின் கவலையாக இருக்கும். ஆனால் ஈரானை அழிப்பதற்கு இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என இஸ்ரேல் நினைக்கலாம். இன்று அதுதானே டிரம்பின் ஒரே நட்பு? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
தமிழகம் எதில் முதலிடம் வகிக்கிறது? "உலகம் பிறந்தது எனக்காக" என்று நாடாள்பவர்கள் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கண்ட மேனிக்கு கடன்களை வாங்குவது, ஊரார் வீட்டுப் பிள்ளைகளை தமதூ வசதிக்காக அடகு வைப்பதைப் போன்றது என்றால் அது மிகையில்லை. பிறகு? கடன் வாங்கி தானம் செய்கிறவர் கொடை வள்ளலா? யாரை அடமானம் வைத்து தமிழ்நாடு அரசு கடன் வாங்குகிறது? எதற்காக கடன் வாங்குகிறது? இதை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு யார் தலையில் விழுகிறது? தமிழகம் எதில் முதலிடம் வகிக்கிறது என்ற கேள்வி இன்று அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படுகிறது. இந்தியாவில் அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பல தரவுகள் கூறுகின்றன (₹10.62 - 10.71 லட்சம் கோடி 26-27 இடைக்கால பட்ஜெட்). தமிழ்நாடு FY25-ல் கடன்களின் YoY வளர்ச்சியிலும் முதலிடத்தில் உள்ளது (18.5%), பீகார் (15.5%) மற்றும் உத்தரப் பிரதேசம் (15%) ஆகியவற்றைத் தாண்டி! கடன் வாங்குவது தவறு இல்லை. தனிநபர் வாங்கும் கடன்னைவிட அரசின் மூலமாக ஒரு தனிநபரின் தலைமீது விழும் கடன் வகைதொகையின்றி எகிறிக்கொண்டே போனால் எப்படி? மக்களின் ஓட்டு என்பது அரசாங்கம் கடன் வாங்குவதற்காக அவர்கள் லைசன்ஸ் கொடுப்பதற்கான அனுமதி என்று அர்த்தமா? இந்த கடன் எதற்காக வாங்கப் படுகிறது, அதை எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறோம், அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்பதே முக்கியம். ஒரு மாநிலம் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்பேட்டைகள் போன்ற நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்குவது இயல்பானது. இத்தகைய முதலீடுகள் எதிர்காலத்தில் வருமானத்தை உருவாக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். வரி வருவாய் உயரும். இப்படியான கடன் “உற்பத்தி கடன்” எனக் கருதப்படுகிறது. இது பொருளாதாரத்திற்கு பலன் தரும். ஆனால் கடன் சுமை ஏற்ற இறக்கம் இல்லாமல் வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே போவது ஆபத்தானது. மாநிலத்தின் வருமானத்தை விட கடன் வேகமாக உயர்ந்தால், வட்டி செலுத்துவதற்கே பெரிய தொகை ஒதுக்க வேண்டி வரும். அதனால் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் போன்ற துறைகளுக்கு நிதி குறைந்து போகும். பட்ஜெட்டில் பெரும் பகுதி கடன் திருப்பிச் செலுத்துவதற்கே ஒதுக்கப்படுகிற நிலை உருவாகும். கடன் சுமை அதிகமாகிக் கொண்டே போவதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. முதலில், மாநிலத்தின் நிதி மேலாண்மையின் மீது நம்பிக்கை குறையலாம். முதலீட்டாளர்கள் இது ஓர் எச்சரிக்கையாக மாறலாம். இரண்டாவது, மேலும் மேலும் வரிகளை உயர்த்த வேண்டிய நிலை உருவாகலாம். மூன்றாவது, புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்க முடியாமல் போகலாம். இதனால் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாவது கடினமாகிறது. உள்கட்டமைப்பிற்கான அரசொன் திட்டச் செலவுகள் குறைந்தால் கட்டுமானம், சேவைத் துறை, சிறு தொழில்கள் போன்றவை பாதிக்கப்படலாம். அரசுகள் ஏழைகளின் ஓட்டுகளை குறிவைத்து கடன் வாங்கி இலவசங்களை வழங்குவது (மேலும் அதை பெருமையுடன் விளம்பரம் செய்வது) குறுகிய காலத்தில் அரசியல் பலன் தரலாம். ஆனால் நீண்டகாலத்தில் இது பொருளாதார சுமையை அதிகரிக்கிறது. இலவசங்கள் முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. உண்மையில் ஏழைகளுக்கு சமூக பாதுகாப்பு அவசியம். ஆனால் உற்பத்தி திறனை உயர்த்தாத, வருமானம் உருவாக்காத செலவுகள் அதிகமாக இருந்தால், அது எதிர்கால தலைமுறைகளுக்கு கடன் சுமையாக மாறும். வளர்ச்சித் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? புதிய தொழிற்சாலைகள் வராது. அடிப்படை வசதிகள் மேம்படாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும். திறமையான மனித வளம் மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் செல்லக்கூடும். இதனால் வளர்ச்சி மந்தமாகும். ஆகவே கடன் வாங்குவது தவறல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டுடனும் திட்டமிட்ட முறையிலும் இருக்க வேண்டும். கடன் வளர்ச்சியை உருவாக்க வேண்டும்; சுமையை அல்ல. நல்ல நிர்வாகம், வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு ஆகியவை இருந்தால்தான் மாநிலத்தின் நிதி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:10
ஓர் உயிலைத் தேடி... நமச்சிவாயத்தின் நண்பர் சித்தையனுடைய அப்பாவுடன் பிறந்தவர்கள் ஏழு ஆண்கள், ஒரே ஒரு பெண் பச்சை. மாமா ராமைய்யா இறந்து விட்டார், குழந்தை குட்டி இல்லை. உறவுகளைத் தாண்டி ராமைய்யாவும் சித்தையனுடைய அப்பாவும் நல்ல நண்பர்கள். அவருடன் பிறந்த ஆண்களில் அவரைத்தவிர இருவர்தான் இன்று உயிருடன் இருக்கிறார்கள். ஒருவர் வாத்தியார், ஒருவர் கிராம அதிகாரி. எல்லோரும் சொந்த ஊரான வேப்பங்குளத்தில் இருக்கிறார்கள். ராமைய்யா பேருக்கு இருந்த பத்து ஏக்கர் நிலத்தை அவர் சித்தையனுடைய அப்பா பேருக்கு உயில் எழுதி வைத்துவிட்டு போனவாரம் காலமானார். உயில் பச்சையிடம்தான் இருக்கிறது. சித்தையனுடைய அப்பா சென்னையில் செட்டிலாகி விட்டதால் சித்தப்பாமாருக்கு நிலத்தின் மேலே ஒரு கண். மாமா இறந்த நான்கு நாட்களில் தந்தையின் மறைவு. அதன் பிறகு சித்தையன் மாமாவின் நிலத்தை விற்று விட்டு அத்தையை தன்னுடன் சென்னையில் வைத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். போனில் முடிவை சொன்னபோது பச்சை அத்தையும் அதற்கு ஒப்புக் கொள்ளவே, நிலத்தை கிரயம் பேசி முடித்துவிட்டு அத்தையை கூட்டி வர சித்தையன் வேப்பங்குளத்திற்கு சென்றார். பிறகு நடந்ததை அவரே கூறுகிறார். பொழுது சாய ஊர் போய் சேந்துட்டேன். அத்தைக்கு கருப்பட்டி மிட்டாயும் சீனிச்சேவும் வாங்கிட்டுப் போனேன். சின்னையாமாரு வீடுகளுக்கு போயி ஒப்புக்குதான் பாத்துட்டு வரணும்னு நினைச்சேன். ஏன்னா, அப்பாவுக்கு அவங்ககூட பேச்சுவார்த்தை இல்லாமதான் இருந்துச்சி. சரி, அலுப்பா இருக்கு, வேத்து இடம் வேறே, அதனால எதுக்கும் இருக்கட்டும்னு ஓரு குவாட்டரை (சரக்கு) வாங்கிட்டுப் போனேன். ராத்திரி சுடச்சுட கும்பா நிறைய கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும். அப்பிடியே ஆத்தா கைப்பக்குவம் மாதிரியே இருந்துச்சி. நல்லா சாப்டுட்டு நாலு லோட்டா தண்ணி குடிச்சேன். லோட்டால பெரிய படிக்கு ஒரு படி (நாழி) தண்ணி பிடிக்கும், அத்தந்தண்டி! சரக்கை நாளைக்கு அடிச்கலாம்னு, வெளிய எடுக்கலை. காலைல எந்திரிச்சி காப்பித் தண்ணிய குடிச்சிட்டு அத்தை எடுத்துத் தந்த பொட்டியத் தொறந்து பாத்தா உயிலு இல்லை. எனக்கு உசுரே போயிருச்சி. வாத்தியாரு சம்சாரத்துகிட்டதான் நான் வர்ற சமாச்சாரத்த அத்தை சொல்லிருக்காம். மக்காநாத்து அது வீட்டுக்கு வந்துட்டுப் போச்சின்னு அத்தை சொல்லிச்சி. சரி, எதுக்கும் முன்சீப் அண்ணன போய் பாப்பம்னு அத்தை சொன்னத வச்சி அங்கன போனோம். நம்மள வான்னு, கூப்டுட்டதோட சரி, காப்பித்தண்ணி சாப்புடுறியான்னு கூட சின்னாத்தா கேக்கல. விஷயத்தச் சொன்னதும் சின்னையாவுக்கு திக்குன்னு ஆய்ப்போச்சி. ஆனாலும், சித்தப்பா சமாளிச்சிக்கிட்டே உயில்ல நிலத்தையும் வீட்டையும் அண்ணந்தம்பிக எட்டுப் பேருக்கும்தான் எழுதிருக்கேன்னு மாமா எங்கிட்ட சொன்னாரு. நீ எதுக்கும் கவலைப்படாதே தாயி, அப்பிடியே செஞ்சிப்புடலாம்னு அத்தைகிட்ட ஒரே போடா போட்டுட்டாரு. பேசுனத எல்லாத்தையும் கேட்ட பிறகு சின்னாத்தாவுக்கு எம்மேல பாசம் பொங்கிருச்சி. சாப்டுத்தான் போகணும்னு சும்மானாச்சும் ஒத்தக்கால்ல நின்னது! எங்கூடப் படிச்ச ஒருத்தர் வக்கீலா இருக்கார். அவர போன்ல கூப்புட்டு, அன்னிக்கு ராத்திரியே விவரத்த சொன்னதும், உடனே அத்தையக் கூட்டிக்கிட்டு மெட்ராசுக்கு வந்துரு. அங்கன இருந்தா அத்தை உசுருக்கு பாதுகாப்பு இல்லன்னு சொன்னார். ஏன்னு கேட்டா, நீ இங்கன வா, எல்லாத்தையும் வெலாவாரியா பேசிக்கலாம்னு சொல்லிட்டார். "இன்னிக்கு உயில் இல்லாத பட்சத்துல மாமா சொத்துக்கு அத்தைதான் வாரிசு. இருக்கிற சொத்தை அவங்க உன் பேருக்கு எழுதி வைக்கலாம். அப்பிடி எழுதி வைக்கலன்னா, வேற நேரடி வாரிசு இல்லாத பட்சத்துல, அவங்க காலத்துக்குப் பிறகு எல்லா அண்ணந்தம்பிகளும் உரிமை கொண்டாட முடியும். உயிலை எழுதி ரிஜிஸ்தர் பண்ணி வச்சிட்டா, பிறகு பிரச்சினையே இல்லை, அத்தைக்கும் பாதுகாப்பு. நீயும் வேணும்கிறப்ப வித்துக்கிடலாம்" ன்னு வக்கீல் சொன்னார். "காலமான இன்னார் மனைவி இன்னாருக்கு" ன்னு எழுதுன உயிலை ரிஜிஸ்டர் செஞ்சது தெரியாம, VAO சின்னய்யா ஓரு கட்சி புள்ளி மூலமா கமுக்கமா நிலத்த மாமா விக்கிற மாதிரி போலியை கையெழுத்து போட்டு கைமாத்தி விட ஏற்பாடு செஞ்சார். (வித்ததுக்குப் பிறகு மாமா செத்ததா டெத் சர்டிபிகேட் எடுக்குறது பிளான்!) வில்லங்க பத்திரம் வாங்குறப்ப உயில் ரிஜிஸ்தரான விவரம் தெரிஞ்ச புள்ளி பின்வாங்கிட்டு சொன்னது: "எல்லாம் திருட்டுப் பசங்க!" உயிலை எழுதுன நாலஞ்சி மாசத்துல அத்தை செத்துப் போயிருச்சி. ஆனா காரியத்துக்கு சின்னய்யாமாரு வரலை. எப்பிடி வருவாக? VAO சின்னய்யா நல்ல முறையில பேசியிருந்தா மாமா சொத்தை எல்லாரும் பகுந்துட்டு போயிருக்கலாம். இப்ப பாருங்க, எனக்கு பிள்ளையில்லை. ஆனா, வீடு, நிலம், நகைன்னு சொத்து கிடக்கு. அதை யாருக்கு குடுக்கிறது? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
இது வாழ்க்கையின் ஓர் உண்மை மட்டும் அல்ல — இதுவே வாழ்க்கையின் தத்துவம். வறுமை. பகைமை. வாய்ப்பின்மை. இவை நிரந்தர நிலைகள் அல்ல; கருத்துகள். அந்த கருத்துகள் உங்கள் மனதில் இடம் பிடித்துவிட்டால், நீங்கள் எவ்வளவு தூரம் யோசிக்க முடியும் என்பதையும் எதை அடையலாம் என்று நம்புவதையும், நீங்கள் காணக்கூடிய கனவுகளையும் அவை கட்டுப்படுத்தும், வடிவமைக்கும். வறுமையின் மறுபக்கம் செழிப்பு. பகைமையின் மறுபக்கம் நட்பு. வாய்ப்பு என்பது தானாக கிடைப்பது அல்ல — முயற்சியில் இருந்து பிறப்பது. நீங்கள் ஆக விரும்பிய அனைத்தும் முதலில் உங்கள் மனதில் தான் உருவானது. அது உலகில் வெளிப்படுவதற்கு முன் ஓர் எண்ணமாக — பலவீனமாக, சந்தேகங்களால் சிதறக் கூடியதாக இருந்தது. பயனற்ற எண்ணங்களே பயம், தன்னிரக்கம், ஒப்பீடு, வருத்தம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளம். அவை உங்களை நின்ற இடத்திலேயே கட்டிப் போடுகின்றன. உடைந்து வெளியே வாருங்கள். பெருமையுடன் கிளர்ச்சி செய்யுங்கள். ஆர்வத்துடன் புரட்சி செய்யுங்கள். உங்கள் கடந்த காலம் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள். வறுமை, பகைமை, வாய்ப்பின்மை என்ற மாயைகள் நீங்கள் எதிர்த்து நின்ற அந்த நொடியிலேயே மறையத் தொடங்கும். அது உலகம் மாறியதால் அல்ல — நீங்கள் மாறியதால். இப்போது உங்கள் முன் ஒரு புதிய ஓவிய வரைதிரை உள்ளது. இந்த முறை, தூரிகை உங்கள் கையில். சிலர் பொறாமைப்படுவார்கள். பலர் வியந்து பார்ப்பார்கள். சிலர் புரிந்து கொள்ளமாட்டார்கள். பரவாயில்லை, இது வெற்றி பெறும் எல்லோருக்கும் நடக்கக்கூடியதுதான். வெற்றி உங்களது உழைப்பிலும் நம்பிக்கையிலும் திறமையினாலும் உருவானது என்பதே உண்மை. அதில் அதிர்ஷ்டம் என்பது இல்லை! மேலும், இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: வாழ்க்கை 40, 50, 60-இல் முடிவதில்லை. பலருக்கு, அங்கேதான் வாழ்க்கை மறுபடியும் தொடங்குகிறது. இது ஓர் உண்மை மட்டும் அல்ல. இதுவே வாழ்க்கை. #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05
திருவாளர் பானாசீனாவின் பலே கணக்கு! ஒரு முறை ஜனநாயகப் பேரவை என்ற பெயருடன் காங்கிரஸ் கோட்டையில் ஊடு செங்கல் உருவிய ப. சிதம்பரம் மீண்டும் அதே கைங்கரியத்தை ரிபீட் செய்வதற்கு நாள் குறித்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. அது எந்த நாள்? அது, ஒருவேளை, காங்கிரஸ் கட்சி 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால், அந்த கூட்டணி அமையும் நாள் என்க. இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெல்லுமா அல்லது தவெக வெல்லுமா என்பது ப.சி. அவர்களுக்கு முக்கியமில்லை. இவருக்கு மீண்டும் ராஜ்யபா MP ஆக வேண்டும். இவரது மகன் கார்த்தி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று MP ஆக வேண்டும். அம்புட்டுதேன். அவருடைய கணக்கில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதாவது, தவெகவே சட்ட மன்றத் தேர்தலில் வென்றாலும் அந்தக் கட்சியில் இவருக்கு எந்த விதமான மரியாதை கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அதாவது, அங்கே அப்பா பிள்ளை இருவரும் MP க்கள் ஆவதற்கு தவெக எதிர்காலத்தில் உதவும் என்ற கேரண்டி இல்லை. அதே சமயம், எதிர்வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்றாலும், அதனால் இவருக்கு பாதகம் எதுவும் இல்லை. ஆனால், திமுக ஒரே தேர்தலில் அழிந்துவிடப் போவதில்லை என்பது உறுதி. எனவே, அப்பா பிள்ளை இருவருக்குமே திமுக தயவில் நாளை மீண்டும் MP ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், சிதம்பரம் அவர்களுக்கு திமுக மேலிடத்திடம் நல்ல நெருக்கம் உள்ளது. இதெல்லாம் போக, இந்த 2026 தேர்தலில் தன்னை நம்பி இருக்கும் சிலருக்கு திமுக கூட்டணியில் சீட்டுகள் வாங்கிக் கொடுக்கவும் இவரால் முடியும். அதாவது ஒரே கல்லில் இரண்டல்ல மூன்று காய்களை அடிப்பதற்கு அப்பச்சி 'காய்' நகர்த்துகிறார் என்று சொல்லப் படுகிறது. என்னே ஒரு தொலை நோக்குப் பார்வை! முன்னாள் நிதியமைச்சரின் மூளை சாதாரணமான மூளை இல்லை! அவர் மட்டுமல்ல, காங்கிரசின் பெரும்பாலான தூண்கள் இப்படிப்பட்டவைதான். இவர்களை நம்பித்தான் ராகுலும் கட்சியை நடத்துகிறார். அதனால்தான் சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது! பின் குறிப்பு: MLA ஆக விரும்பும் சில காங்கிரஸ் சிட்டிங் MLA க்கள் ப.சி. அவர்களுடன் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி MLA ஆகிறவர்கள் தேர்தலுக்குப்பின் அப்போதைய நிலவரத்தைப் பொறுத்து, குதிரை பேரங்களின் மூலம் ஏதாவது ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கு உதவக்கூடும். இந்தத் தேர்தலில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கக் கூடும் என சொல்வதற்கில்லை. #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
தேர்தல் 1967 to 2026 மாறாத விஷயங்களின் மாறிய கோணங்கள்! 1967 தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பாகிறது. தி. நகர் பனகல் பார்க்கில் அமைந்துள்ள ரேடியோவில் இரவு 7-00 மணி செய்தியைக் கேட்க திருவிழா போல் கூட்டம். "ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி" என்று செய்தி ஆரம்பித்ததும் 'பின் ட்ராப்' சைலன்ஸ். "நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விருதுநகர் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தொடர்கிறது. முடிவு பின்னர் அறிவிக்கப்படும்" என்று செய்தி வரும்போது மக்களுக்கு சப்பென்று இருக்கும். சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்டுகளும் திராவிட இயக்கத்துடன் கைகோத்து களத்தில் நின்றன. பச்சைத் தமிழன் காமராஜருக்கு ஓட்டுப் போடுங்கள் என பெரியார் பிரச்சாரம் செய்தார்!பூவராகன் ஒருவரைத் தவிர மற்ற மந்திரிகள் எல்லாம் தோற்ற போது, காமராஜர் என்ன ஆனார் என்ற கேள்வியே ரேடியோ செய்திகளை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் மனதில் பிரதானமாக இருந்தது. கடைசியில் காமராஜரும் தோற்றார். 1967 தேர்தல் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓர் யுகப்புரட்சி ஆகும். அது, அகில இந்திய அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மாநிலமான தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்த வரலாறு. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் 2026 தேர்தலில் அதே பிரச்சினைகள் பேசப்பட்டாலும், அவற்றின் கோணங்கள் மாறுபட்டுள்ளன. இந்தி எதிர்ப்பு: இந்தியை எதிர்த்து தமிழை காப்போம், தமிழரைக் காப்போம் என்ற அதே 1967 பல்லவியை 2026 லும் திமுகவினர் பாடுகிறார்கள். இவர்கள் காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழ் என்றுமே இருந்தில்லை. இலங்கைத் தமிழர் விவகாரதில் கருணாநிதியை வசைபாடிய வைகோவும் திருமாவும் இன்று திமுக பக்கம். தமிழ் தானே வளர்ந்த மரம், தனியாக நின்ற மரம். இன்று கூகுள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) போன்றவை மொழிபெயர்ப்பு, புதிய தமிழ் சொற்கள், பிழை திருத்தல் போன்று பல்வேறு வேலைகளை திறம்பட செய்து தமிழ் மட்டுமல்லாமல், அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கின்றன. திமுக தமது குடும்ப நிறுவனங்களின் பெயர்களில் தமிழை வளர்த்த இலட்சணத்தை தமிழர்கள் அறிவார்கள். ஊழல்: 67இல் காங்கிரஸ் மந்திரிகளை ஊழல் பெருச்சாளிகள் என திமுக பிரச்சாரம் செய்தது. ஆனால், உண்மை நிலை என்ன?பக்தவத்சலம், கக்கன் போன்ற தலைவர்களின் வழித்தோன்றல்கள் யாரும் இன்று இருக்கிற இடம் தெரியவில்லை. காமராஜர் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டிருக்கிறார், காங்கிரஸ் ஆட்சி என்பது தொழிலதிபர்கள் மற்றும் மிட்டா மிராசுகளின் ஆட்சி என்றெல்லாம் பிரச்சாரம் செய்து திமுக ஆட்சியை பிடித்தது. ஓட்டுக்கு துட்டு: காங்கிரஸ் ஓட்டுக்கு துட்டு தந்தால், அதை வாங்கிக் கொண்டு ஓட்டை எங்களுக்குப் போடுங்கள் என்று திமுக பிரச்சாரம் செய்தது. அப்படி செய்ததில் ஒரு சூட்சுமம் இருந்தாக சொல்வார்கள். அதாவது, ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும், "காங்கிரஸ் பணம் தருவதாக சொல்லப்படுகிறதே, நமக்கு ஏன் வரவில்லை" என்ற கோபத்தில் மக்கள் திமுகவிற்கு போடட்டும் என்ற நல்லெண்ணம்தான்! இன்று, பணத்தை தேர்தல் கமிஷனுக்குத் தெரியாமல் எப்படி மக்களுக்கு வினியோகிப்பது என்று "திருமங்கலம்" போன்றபல பார்முலாக்களை கண்டுபிடித்து விட்டனர்! வேட்பாளர் தேர்வில் கேட்கப்படும் முதல் கேள்வியே "உங்களால் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?" என்பதுதான். இன்றைய தேர்தலில் காமராஜர், கக்கன்களுக்கு இடமில்லை. வாரிசு அரசியல்: இந்தியாவில் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியல் நடக்கிறது என்று 1967 தேர்தலில் மேடைதோறும் திமுக தலைவர்கள் முழங்கினார்கள். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திமுகவில் வாரிசு அரசியல் என்று எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வதை திமுக தலைமையினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொழில் வளர்ச்சி: தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும் 1967 தேர்தலில் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. இன்றைய நிலை என்ன? 16-வது நிதிக் குழுவின் அறிக்கையின் படி, 2022-23 ஆம் ஆண்டில், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் (SPSEs) கடும் நஷ்டத்தில், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக, தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழலும்தான். சினிமா கவர்ச்சி: 1967 இல் திமுகவின் வளர்ச்சிக்கும் பிரச்சாரத்திற்கும் பத்திரிகை மற்றும் சினிமா துறை பக்கபலமாக இருந்தது. இன்று, பத்திரிகை, டிவி, சினிமா, சமூக ஊடகங்கள் அனைத்திலும் கட்சித் தலைமையின் 'குடும்ப' ஆதிக்கமே கோலோச்சுகிறது! இன்று மீண்டும் 'பராசக்தி'! 1967 தேர்தலில் பேசப்பட்ட அதே விஷயங்களே 2026 தேர்தலில் மீண்டும் பேசப்படுகின்றன. அவற்றின் கோணங்கள்தான் வேறாக இருக்கின்றன. பிரச்சார பலத்தை வைத்தும், பண பலத்தை வைத்தும் ஆட்சியை பிடிக்கமுடியுமா என்ற கேள்விக்கு எதிர்வரும் சட்டட மன்றத் தேர்தலில் மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். மற்றப்படி, மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு, சாதி வன்கொடுமை, பெண்கள் பாதுகாப்பு, பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம், மணல் கொள்ளை, வணிகமயமான கல்வி, அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சமாச்சாரங்களைப் பற்றி யாராவது பேசிவிட்டால், அவர்கள் மதவாதிகள், பிற்போக்குவாதிகள்! #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:05
ராமதாஸ்-பாமகவை திமுக உதாசீனப்படுத்தியது எதைக்காட்டுகிறது? அதன் பின்விளைவுகள் திமுக கூட்டணிக்கு எப்படி இருக்கும்? எவ்வளவோ மன்றாடிய பின்னும் ராமதாஸ்-பாமகவிற்கு திமுக கூட்டணியில் இடம் இல்லை. ஏனென்றால், அதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அன்புமணியின் பின்னால்தான் பாமகவின் தொண்டர்களும் அனுதாபிகளும் நிற்கிறார்கள் என்பதை திமுகவின் உதாசீனம் உறுதிப்படுத்துகிறது. அதாவது, ஒன்றுபட்ட பாமகவில் டாக்டர் ராமதாசுக்கு குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு செல்வாக்கு இருந்திருந்தாலும் ஓட்டுக் கணக்கை கருத்தில் கொண்டு விசிகவை உதறித் தள்ளிவிட்டு, ராமதாஸ்-பாமகவை திமுக அணைத்துக் கொண்டு போயிருக்கும். இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லப்போனால், திருமாவளவனால் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது, அல்லது ராமதாசை விலக்கி வைக்க மறைமுகமாக நிர்ப்பந்திக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் 2026 தேர்தலில் டாக்டர் ராமதாசைவிட திருமாவளவனுக்கு ஓட்டுக்கள் அதிகம் கிடைக்கும் என்ற கணக்குதான். ஒன்றுபட்ட பாமகவின் கிட்டத்தட்ட தொண்டர்கள் 90 சதவீதம் பேரும், ஆதரவாளர்களில் 80 சதவீத மக்களும் அன்புமணி-பாமக வின் பக்கமே நிற்கிறார்கள். அன்புமணியே பாமகவின் எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்பது நிதர்சனம். இது அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கும் ஒருபடி மேலே போய், ஒன்றுபட்ட பாமகவின் தொண்டர்களும் சரி, பாமகவின் அனுதாபிகளும் சரி, திமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களை ரசிக்கவில்லை. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது பழைய சொல்லாடல். இது தேர்தலில், திமுக கூட்டணிக்கு பாதகமாக, முக்கியமாக விசிகவுக்கு வரவேண்டிய திமுக வாக்குகளில், எதிரொலிக்கும். திருமாவளவனுடைய கண்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தவாக போன்ற கட்சிகளை விட பாமகதான் சாதிமத அடிப்படையிலான கட்சியாகத் தெரிகிறதா? இது வெறுப்பு அரசியலின் உச்சமாகத் தெரியவில்லையா? என்ன இருந்தாலும், டாக்டர் பாமகவின் ஸ்தாபகர். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தியவர் என்ற வகையில் வன்னியர்கள் மட்டுமல்லாமல், பிற சமுதாயத்தை சேர்ந்வர்களிடமும் அவருக்கென தனி மரியாதை உண்டு. திமுக கூட்டணியில் ராமதாசின் வருகையை திருமாவளவன் ஆதரித்திருந்தால், சாதிகளால் பிளவுபட்ட தமிழகத்தில், அது சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திருக்கும். அந்த வாய்ப்பினை திருமாவளவன் தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரிடம் அப்படி ஒரு பரந்த மனப்பான்மை இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்! எதிர்வரும் தேர்தலில் இந்த கூட்டணி சலசலப்புகள் நிச்சயம் வடதமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு சாதகமாக ஏதிரொலிக்க வாய்ப்புள்ளது. #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05
“கடல்கள் யாருடைய சொத்தும் அல்ல!” – அட்லாண்டிக் பெருங்கடலில் இந்தியாவின் துணிச்சலான தடம் ஒரு காலத்தில், சோழர்கள் பரந்துபட்ட உலகின் அன்றைய முக்கிய கடல் வழிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்பது வரலாறு. அதன் பின்னர் சமீப காலம் வரை இந்திய கடற்படை இந்தியப் பெருங்கடல் பகுதியில் மட்டுமே செயல் படுகிறது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது; இந்தியா தனது கடற்படையின் திறனை உலகத்திற்கு காட்டிக் கொண்டிருக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் – அட்லாண்டிக் பெருங்கடலில் இந்திய போர்க் கப்பல்களின் ரோந்து ஆகும். INS Trikand, INS Tushil, INS Tarkash போன்ற நவீன ஸ்டெல்த் ஃபிரிகேட் கப்பல்கள் தற்போது அட்லாண்டிக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவை சாதாரண பயணங்கள் அல்ல. கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டு ராணுவப் பயிற்சிகள், மற்றும் சர்வதேச நட்பு உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை இதன் நோக்கமாகும். INS Tushil என்ற ஏவுகணை ஃபிரிகேட் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் கடற்கொள்ளை எதிர்ப்பு பணியில் ஈடுபட்டது. அதோடு, இங்கிலாந்து, பிரான்ஸ், மொராக்கோ போன்ற நாடுகளில் துறைமுகங்களுக்கு வருகை புரிந்து பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் கடற்படை திறனை உலக நாடுகளுக்கு முன் வெளிப்படுத்துகிறது. INS Tarkash 4,315 கடல் மைல்கள் தாண்டி மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு அட்லாண்டிக் பகுதிகளில் கடல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டது. இது கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு திறன் மேம்பாடு மற்றும் கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக கினி வளைகுடா (Gulf of Guinea) பகுதியில் கடற்கொள்ளை பிரச்சினை அதிகம் உள்ளதால், இந்தியாவின் பங்கு அந்த பிராந்தியத்திற்கு பெரும் ஆதரவாக உள்ளது. INS Trikand மத்தியதரைக் கடல் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளில் பயணித்து, பல நாடுகளுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டது. இது இந்தியாவின் கடற்படை நடவடிக்கைகள் இந்தியப் பெருங்கடலைத் தாண்டி உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு முக்கிய செய்தியை உலகிற்கு தெரிவிக்கின்றன: “கடல்கள் எந்த ஒரு வல்லரசு நாட்டின் சொத்தும் அல்ல.” கடல்களில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து என்பது உலகின் அனைத்து நாடுகளின் உரிமை. எந்த ஒரு நாடும் கடற்பரப்பில் தனிப்பட்ட அதிகாரம் செலுத்த முடியாது. இந்தியா இந்தக் கொள்கையை உறுதியாக நம்புகிறது. உலகளாவிய கடல் பாதுகாப்பு என்பதில் கூட்டுப் பொறுப்பு என்ற புரிதலுடன் இந்தியா செயல்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், “புதிய இந்தியா” உலக அரங்கில் தன்னம்பிக்கையுடன் குரல் கொடுக்கிறது. பாதுகாப்பு, தன்னாட்சி, மற்றும் சர்வதேச நட்பு – இவை மூன்றையும் இணைத்து இந்தியா தனது பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் இந்தியக் கப்பல்கள் பயணம் செய்வது ஒரு ராணுவச் செயல்பாடு மட்டுமல்ல - * அது ஓர் அரசியல் பிரகடனம். * அது ஒரு தன்னம்பிக்கை அறிவிப்பு. * அது ஒரு உலக ஒத்துழைப்புக்கான அழைப்பு. இந்தியாவின் இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் உலக கடல் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்பதற்கான வலுவான சான்றாகும். கடல்கள் எல்லையற்றவை. இந்தியாவின் பார்வையும் அதேபோல் எல்லையற்றது. #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
தினம் ஒரு அறிவிப்பு, தினந்தோறும் தீபாவளி! இன்றைய செய்தி சிறப்பு உதவி: தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் சிறப்பு உதவியாக பிப்ரவரி 13, 2026 அன்று ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாதம் ₹1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய சிறப்புத் திட்டமாக இந்த கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பயனாளிகளின் கணக்கில் பணம் சேர்ந்ததற்கான குறுஞ்செய்திகள் (SMS) வரத் தொடங்கியுள்ளன.  இன்றைய செய்தி (13 பிப். 2026) தொடர்கிறது... "₹32,000 கோடி முதலீட்டில் 52 பணிகள் தொடக்கம்: 82,000 பேருக்கு வேலை வாய்ப்பு. மேலும் 71 புதிய திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்." (தினத்தந்தி). நேற்றைய செய்தி (12 பிப். 2026) "பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் தீவிரம்." (தினத்தந்தி). இவைல்லாம் சாம்பிள்கள்தான். இந்த மாதிரியான அறிவிப்புகளை ஆளும் கட்சியினரால்தானே (அறிவிப்புகளை மட்டுமே!) வெளியிட முடியும் என்பதால், காற்றுள்ளபோதே திமுக தூற்றிக்கொள்கிறது. பிற கட்சிகள் வயிறெரிந்து பார்க்க வேண்டியதுதான். தேர்தல் நெருங்க நெருங்க செய்திகள் மேலும் தூள் பறக்கும். தேர்தல் முடிந்து ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், தமக்குத்தாமே பாராட்டு விழாக்களை நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும். ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களாக தீர்க்கமுடியாமல் இருந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம், சாலைகள், பாலங்கள் போன்ற பல பிரச்சினைகள் அசுர கதியில் இரண்டே மாதங்களுக்குள் தீர்க்கப் படுகின்றன. பணத்தை தண்ணீராக வாரி இறைப்பதற்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு ஜனநாயக நாட்டில் கடன்களை வாங்கி இப்படி சிறப்பு உதவி, இலவசத் திட்டங்கள், நஷ்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இலவச பயணங்கள் போன்ற உறுப்படியில்லாத வேலைகளை பொறுப்பற்ற முறையில் அரசுகள் செய்வதைத் தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லையா? இதெல்லாம் எங்கே போய் முடியும்? தற்போது சட்டத்தில் அதற்கு இடம் இல்லாவிட்டால், அப்படி ஒரு சட்டத்தை இயற்ற வேண்டியது அவசியம் இல்லையா? இல்லையென்றால் அரசியல்வாதிகள் நாட்டையே அடகு வைத்து விடுவார்களே! மன்னிக்கவும், இப்போதும் அதுதான் நடக்கிறது... இந்த நிலை நீடித்தால் பிற மாநிலங்களிலும் இருக்கும் ஆளும் கட்சிகளும், வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதற்கு தமிழகம் தொடங்கி வைத்த இதே நடைமுறையை பின்பற்ற ஆரம்பித்தால் அதற்கு முடிவேது? ஊழலை திறம்பட செய்வதற்கும், தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை வாரி வழங்குவதற்கும் திமுகதானே பிற மாநிலங்களுக்கு வழிகாட்டி? ஒருபக்கம் பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள். மறுபக்கம் தோல்விகளுக்கு மத்திய அரசைக் கைகாட்டுகிற மனப்பாங்கு. அது போதாது என்று திராவிட மாடல் என்கிற பிரிவினைவாதம் வேறு. விளங்கின மாதிரிதான். பிறகு? ரேஷனில் அரிசி முதற்கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், வளர்ச்சி மட்டும் திராவிட மாடலுக்கு சொந்தம். பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மத்திய அரசு என்றால், அதற்கு என்ன பொருள்? தேர்தலுக்கு முதல்நாள் வரை அறிவிப்புகளும் அன்பளிப்புகளும் தொடரும்! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:10