கர்த்தாதி கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 18.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=========
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு
இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன்
பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால்
நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று
வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார்
மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை
.
விளக்கம்
==========
உமையவள் சொன்ன உபாயத்தை உடனே செயல்படுத்தும்படி தேவர்களிடம் உத்தரவிட்டார் சிவபெருமான். தேவர்கள் கலிநீசனைக் குனிய நிறுத்தி அவனுடைய இடுப்போடு சேர்த்து ஒரு கயிற்றால் வரிந்து கட்டினார்கள். கட்டி முடித்ததும் கலிநீசனை நிமிர்ந்து நில் என்றனர். தேவர்கள் சொன்னதுபோல் கலிநீசன் நிமிர்நதான். அவன் திமிறி நிமிர்ந்தபோது அவனுடைய இடது விலாப்புறத்திலிருந்து ஒரு எலும்பு சதையைக் கிழித்துக் கொண்டு தெறித்து வெளியே வந்தது.
அந்த எலும்பைக் கண்ட சிவபெருமான், வெளிகொண்ட இந்தக் கலிநீசனின் விலாவிலிருந்து இந்த எலும்பை எடுத்ததினால் இது அவனுடைய பலத்தில் நேர்பாதிபலம் பொருந்தியதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே, அந்த எலும்பைக் கலிநீசனின் உடலிலிருந்து கழற்றி எடுக்கச் செய்து, அந்த எலும்பை மணம் மிகுந்த மங்கையாக உருவாக்க வேண்டுமென்று மன்மதனை நினைத்தார். உடனே அந்த எலும்பு வனப்புடைய நங்கையாக உருமாறியது.
.
.
அகிலம்
========
நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை
பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன்
அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து
நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம்
கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக்
கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான்
பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன்
மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி
ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி
நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல்
.
விளக்கம்
==========
கலிநீசன் நினைத்தது போல் அழகுடையதோர் ஆரணங்கை, அவனுடைய இடது புறத்து விலா எலும்பின் மூலமாக சிவபெருமான் சிருஷ்டித்தார். அவளோ, பாசத்தைப் பிரதிபலிக்கும் பாசாங்குடன் தன் கயல்விழிப் பார்வையால் கலிநீசனின் மோகத்தை மும்மடங்காக்கும் அழகும் பகட்டும், அலங்காரப் பளபளப்போடும், கட்டுப்படுத்த முடியாத காம இச்சை கரைபுரளப் பிறந்தாள்.
அந்த கட்டழகு நங்கையைக் கண்ட கலிநீசனோ, ஏதோ கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுவிட்டதுபோல் மெய்மற்நத கோலமாக அவள் அருகே சென்று அவளுடைய முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக்கொண்டான். நாள்தோறும் நல்ல பல தர்மங்களைச் செய்தோருக்கு வைகுண்டலோக வாழ்வு கிட்டியதும் பேரின்பத்தில் திளைப்பார்களே அதுப்போல் அந்த பெண்ணைக் கண்டதும் கலிநீசன் பேரின்பம் அடைந்தான். அதனால் அவனை அள்ளி அணைத்து அங்கமெல்லாம் முத்தமிட்டான்.
.
அவளுடைய அழகான மார்பகங்களைக் கண்டு ஆசைப் பெருக்கினால் அங்கலாய்த்தான். அவளை அலாக்காகத் தூக்கித் தன் இடுப்பிலே வைத்துக்கொண்டு படுத்துக்கொள்வோமா என்று பாய் விரிக்க ஆயத்தமானான். இவ்வண்ணமாக அந்தப் பெண்ணோடு உறவாடி மனம் பேதலித்த கலிநீசன் மண்ணோடு மண் மருவுததைப் போல் அந்தப் பெண்ணுடன் கலந்துவிட வேண்டுமென்றுதான் அவனுடைய அங்கமெல்லாம் உருகியதே தவிர அந்தப் பெண்ணையும், அவனையம் படைத்தருளி வைத்தாரே அந்தப் பரம்பொருளைப் பற்றிய சிந்தனையே அந்த கலிநீசனிடம் சிறிதளவும் இல்லை.
.
.
அகிலம்
========
தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான்
அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை
இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப்
பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி
மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம்
.
விளக்கம்
==========
இப்படி சிவபெருமானும், பல்வேறு தேவர்களும், வானவர்களும் அமர்ந்திருக்கும் அந்தச் சபையில் அங்கிருப்போர் யாரைப்பற்றியும் நினைக்காமல், அந்தப் பெண்ணைத் தூக்கி வைத்து முத்தமிடுவதிலேயே முனைப்பாக இருந்த அந்தக் கலிநீசனைப் பார்த்து, தேவர்களும், வானவர்களும், சொல்கிறார்கள், மாநீசா ! மண்ணாளப்போகும் மனிதா! உனக்குப் பெண்ணைப் படைத்துத் தந்த பெரியோனாகிய சிவபெருமானை வணங்கி உனக்குத் தேவையான வரங்களைக் கேளு என்றார்கள்.
.
.
அகிலம்
=========
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித்
தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே
இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம்
கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான்
.
விளக்கம்
==========
சிவபெருமானை வணங்கி அவரிடம் உனக்கு தேவையான வரங்களைக் கேளு என்று தேவர்கள் கலிநீசனிடம் கொன்னதுமே, கபடனாகிய அந்தக் கலிநீசன், சிவபெருமானின் பாதங்களில் விழுந்து வணங்கி, ஈசனே ! என்னுடைய எண்ணத்திற்கு இணங்கி எனக்கு ஏற்புடையதோர் இளம் நங்கையை படைத்துத் தந்த நாயகா, சர்வ லோகங்களுக்கும் கிருபைபுரிகின்ற பேரருளே ! இனிமேல் எனக்கு விருப்பமான வரங்களை, கனிவாகப் பேசும் உதடுகளையுடைய தங்களின் திருவாயால் உடனடியாகப் பலனளிக்கும் வகையில் தந்தருளுங்கள் தயாபரனே என்றான்.
.
.
தொடரும்….. அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩