#அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்:
========
ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம் இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப்புரட்டு அவர் செவியில் கேட்க வொண்ணாதென்றும், மகாகோடி தர்ம பாக்கியசாலியாய்ப் பூமியிலே அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ அலங்கார தர்மமணியாய் நிறுத்தி அந்தரவீடு லாடந் திறந்து
விளக்கம்:
=========
சான்றோர் சாதியில் வைகுண்டர் உதித்திருப்பதால், இப்பூமியில் ஒருவருக்கு ஒருவர் அடிபிடி தகராறு செய்தல், அநியாயம் புரிதல், இறைவனைக் குறை கூறிப் பேசுதல், கைக்கூலி கொடுத்தல், பொய்ப் புரட்டு செய்தல் போன்றவை அவருடைய புனித செவியில் கேட்கக் கூடாது. வைகுண்டர் அறம் வளர்த்த பூமியில் அதிகமான பாசத்தைப் பாவிக்கச் செய்து சான்றோர்கள் அவர் அருகில் சூழ அவர்களை அலங்காரத் தரும மணியாய் நிறுத்தி தமது அந்தர வீடாகிய லலாட வீட்டைத் திறக்கிறார்.
.
.
அகிலம்:
========
அதன்வழி அரனடனம் திருநடனம் ஆடல்பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும் பார்த்தாராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவிலிருக்கிற தெல்லாம் அவருக்குத் தெரியாம லிருக்கிறதல்லவே அதுகண்டு பதறி ஆரானாலும் அவரிட்டிருக்கிற சட்டம்போல் நடந்து கொள்வாராகவும்.
.
விளக்கம்:
=========
இவ்வாறு திறக்கப்பட்ட லலாட வீட்டின் வழியாக அரனின் நடநத்தையும், இலட்சுமியின் நடனத்தையும், ஆடல் பாடல்களையும், ஆங்காங்கே கண்டு களித்துச் சகல காரியங்களையும் பார்த்து ஆராய்ந்திருக்கிறார். எனவே ஒவ்வொருவரின் நினைவிலும் இருக்கின்ற நினைப்புகள் எல்லாம் அவருக்குத் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, இவற்றை எல்லாம் அறிந்து மனம் பயபக்தி அடைந்து, அரசர்முதல் ஆண்டிவரை யாராக இருப்பினும் அவர் இட்ட சட்டப்படி நடந்து கொள்ள வேண்டியது.
.
.
அகிலம்:
========
அங்ஙனே நடக்கிலென்னு வருகில் அவர் நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கு படியே வரும். அன்பாகிய மனுக்களுக்கு அனுகூலம். 1008 ஆமாண்டு மாசியில் தெச்சணம் பள்ளிகொண்ட அய்யா நாராயண அய்யா வைகுண்ட மாய் தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று மாமுனி எழுதி அவனியறியும்படி அயச்சான்.
.
விளக்கம்:
=========
அதற்கு மாறாக நடப்பதாக அறியவந்தால், அவர் முடிவு எடுத்துள்ள நாளில் அத்தகையோர் தண்டனை பெற்றுக் கீழ்ப்படிய வேண்டிவரும். அவர் உத்தரவுக்குக் கீழ்படிந்த அன்புள்ள மனிதருக்கு அனுகூலமாகும். அவர் அவதாரம் எடுத்த ஆயிரத்து எட்டாம் ஆண்டு மாசி மாதம் இருபதாம் தேதி, தெச்சணாபூமியில், தருமத்தை நிலை நாட்ட பள்ளி கொண்ட அய்யா நாராயணர் வைகுண்டராய்த் தோன்றுவார் என்று அவர் அனுக்கிரகத்தாலே எழுதிய அறிவுரை இது என்று மாமுனி இப்பூமியில் உள்ள மக்கள் அறியும்படிக்கு எழுதி அனுப்பி வைத்தான்.
.
.
அகிலம்:
========
ஆயிது வல்லாமல் அய்யா நாராயண அய்யா தர்மம் நித்திச்சுத் தவசிருக்கிற படியினாலே, இன்றுமுதல் அவர் நிச்சித்திருக்கிற நாள்வரையும் பூசை புனக்காரம் சேவித்தல் அர்ச்சனை ஆராடு நீராடு தீபரணை சாந்தி காளாஞ்சி கைவிளக்குக் காவடி காணிக்கை தெருமுகூர்த்தம் கோபுரமுகூர்த்தம் திருநாள் முகூர்த்தம் தேரோட்ட முகூர்த்தம் திருக்கொடி முகூர்த்தம் கொடிமர முகூர்த்தம் குருமுகூர்த்தம் குரவை குளாங்கூட்டம் கொலுவாரபாரம் ஆயுதம் அம்பு அச்சுநடை ஆனைநடை அலங்காரம் மஞ்சணைக் குளிநீராடல் இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம் வரையும் அவர்க்கானதல்லவே, ஆனதினால் நீங்கள் இதுவெல்லாம் இதுநாளைக்ககம் வீணில் செலவிடாமலும் விறுதாவில் நரகில் விழாமலுமிருக்கக் கடவுளிது நாராயண வைகுண்டசாமி திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி அயச்ச வாசகம் என்று எவரும் அறியவும்.
.
விளக்கம்:
=========
அதுமட்டுமல்லாமல், அய்யா நாராயணர் வைகுண்டமாய்ப் பிறந்து தருமத்தை நிலை நிறுத்த வேண்டித் தவசு புரிந்து வருகின்றார். எனவே, இன்று முதல் அய்யா வைகுண்டர் முடிவெடுத்து இருக்கிறபடி அவருடைய தவசு நிலை முடிகின்றவரைக்கும் பூஜை காரியங்கள், மந்திரம் சொல்லுதல், கோவிலைச் சுற்றுதல், அர்ச்சனை செய்தல், சுவாமியை ஆராட்டுதல், நீராட்டுதல், தீபாராதனை, சாந்தி பூஜை செய்தல், காளாஞ்சு, கைவிளக்கு, காவடி, காணிக்கை, தெருமுகூர்த்தம், கோபுர முகூர்த்தம், குருமுகூர்த்தம், குரவை முகூர்த்தம், திருவிழாக் கூட்டம், கொலு வைத்து ஆரவாரம் செய்தல், ஆயுதம், அம்பு அச்சு நடை, ஆனை நடை, அலங்காரம், மஞ்சணை, குழி நீராட்டுதல், சுபசோபனம் போன்றவை அவர் முடிவு எடுத்திருக்கின்ற தவம் முடியும் நாள்வரையும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தால், நீங்கள் பூஜை முதலியவற்றை எல்லாம் அம்முடிவு எடுக்கப்பட் நாள்வரை வீணாகச் செலவு செய்யாமலும், அவ்வாறு செலவு செய்து வீணாக நரகில் விழாமலும் இருக்க வேண்டும். இது நாராயணர் வைகுண்டசுவாமி திருவாக்கு உபதேசக் கருணையால் மாமுனி எழுதி அனுப்பிய திருவாசகம் என்பதை எல்லாரும் அறிவீராக.
.
.
தொடரும்... அய்யா உண்டு.