குருவாசகக்கோவை
147. குற்றமறு ஞானங் குலவுநூ லாமென்னக்
கற்றலுறு மார்வத்தாற் கற்றாலும் - கற்றுச்
சிறந்தகலை யெல்லாஞ் செறிவுமுய லுங்கால்
மறந்தகல வேண்டி வரும்.
பதச்சேதம்:-
குற்றம் அறு ஞானம் குலவு நூல் ஆம் என்னக் கற்றல் உறும் ஆர்வத்தால் கற்றாலும் கற்றுச் சிறந்த கலை எல்லாம் செறிவு முயலுங்கால் மறந்து அகல வேண்டி வரும்.
அரும்பதவுரை:-
குலவு - பொருந்திய; கற்றல் உறும் - கற்கின்ற; செறிவு - நிஷ்டை.
ஶ்ரீ முருகனார் சுவாமிகள் உரை:-
அறிவு விளங்கற்காதாரமாய நூல்கள் கற்கக்கடவனவேயா மென்று தனக்குக் கல்வியின் மீதுள்ள காதலால் எத்துணை யூக்கமா யொருவன் கற்கினும் பரிபாகப்பட்டு மூலத்து ளொடுங்கலைப் பின்னர் முயலும் பொழுது, முன்னர்த்தானரிதிற் கற்று மேம்பட்ட கலை ஞான மெல்லாம் முற்றும் மறந்தொழிய வேண்டியே நேரும்.
விசேடவுரை:- குற்றமறு ஞானமென்றேனும் குற்றமறு நூலென்றேனுங் கூட்டுக.
ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:-
"இவை குற்றமற்ற ஞான நூல்கள்" என்று அவை களைக் கற்கும் பேராவலுடன் ஒருவன் கற்றுத் தேர்ந்த ஞான நூல்களைக் கூட, இதயத்தில் நிலை (நிஷ்டை) பெற முயலும் நிதித் தியாசன காலத்தில், மறந்து, அவைகளை விட்டு, தான் தனிப்பட வேண்டியே வரும்!
விளக்கக் குறிப்பு:- 'குற்றமறு ஞானம்' என்றாவது, 'குற்றமறு நூல்' என்றாவது மூலத்தைப் பொருள் கொள்ளலாம். 'செறிவு முயலுங்கால் - சிரவண காலத்தில் ஞான நூல்களின் மேல் பெருகிய காதல் தோன்ற வேண்டுவது அத்தியாவசியமே. மனன காலத்தில் அந்நூல்களின் கருத்துக்களில் (முடிபுகளில்) நாம் மனம் ஒப்பி, நம் இயல்பை அவைகளுக்கேற்ப மாற்றிக் கொள்வதால், அவை புதுமையற்றுப் போகின்றன. அதனால் அவைமேல் காதல் நீங்கி மீண்டுங் கற்கும் அவா ஓய்கின்றது. பிறகு நிதித்தியாசன காலத்தில் மனம் உண்முகப் படுவதற்கு, கற்றவைகளால் ஏற்பட்ட சாஸ்திர வாசனைகள் பெருந்தடையாய் அமைவதை உணரும் முமுக்ஷுவால் நூல்கள் நிராதரவு செய்யப்பட்டு (உதாசீன பாவத்தால்) அகன்று மறைய, சகல அறிவும் சகல மனத் தொழிலு மற்றுத் தான் மாத்திரமாக மிஞ்ச வேண்டியது அவசிய மாகின்றது. அதனால் ஞானநூல்களும் மறக்க வேண்டியவைகளே யாகின்றன!!
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி