குருவாசகக்கோவை
17. வேதாந்தவுண்மைத்திறன்.
148. புலவிடய மன்றிப் பொருள்வேறு தேறார்
கிலமடையும் புந்திக் கிறுக்கர் - புலத்தின்
திறத்துவிரா கத்தாற் செழிப்புறுஞா னத்தை
வறட்டுவே தாந்தமென் பார்.
பதச்சேதம்:-
புல விடயம் அன்றிப் பொருள் வேறு தேறார் கிலம் அடையும் புந்திக் கிறுக்கர் புலத்தின் திறத்து விராகத்தால் செழிப்பு உறு ஞானத்தை வறட்டு வேதாந்தம் என்பார்.
அரும்பதவுரை:-
புலவிடயம் - இந்திரிய விஷயங்கள்; கிலம் - அழிவு; புந்திக்கிறுக்கர் - கிறுக்குப் புத்தியுடையோர்.
ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:-
அழிவைத் தரும் புத்திமயக்க முற்ற இலௌகிக மக்கள் ஐம்புல விஷயானுபவங்களைத் தவிர, மற்றொரு அழிவற்ற மெய்ப்பொருள் உண்டு என்பதை அறிய மாட்டார்கள். ஐம்புல விஷயங்களில் தீவிர வைராக்கியம் அடைவதால், அத்தகையோர் முமுக்ஷுக்களிடம் செழித்து ஓங்கும் ஞான வளத்தை 'வறட்டு வேதாந்தம்' என்று சொல்வர்!
விளக்கக் குறிப்பு:- ஞானம் வறண்ட தென்பதும், புல விஷயங்கள் செழிப்பானவை என்பதும் பாமரர் கூற்று. அதற்கு நேர்மாறாக 'செழிப்புறு ஞானம்' என்றும், புல விடயங்கள் பொருளல்லாத 'புந்திக் கிறுக்கு - வறண்டது' என்றும் கூறினார். கூகைக்கு (கோட்டானுக்கு)ச் சூரியன் இருளாவது போல் புல விஷயப் புல்லர்கட்கு வைராக்கிய விளைவான ஞானம் வறட்சியாய்க் காணப்படும். 'தத்துவங் கண்டவற்கு.....' என்ற உள்ளது நாற்பது - அநுபந்தம் 29வது வெண்பாவில் ஞானத்தை வசந்த ருதுவிற்கு ஒப்பிட்டிருப்பது இங்குக் காணத் தக்கது.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி



