திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 10
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில் தரும்அற உரை விட்டு அழகாக ஏடுடை மலராள் பொருட்டு வன்றக்கன் எல்லையில் வேள்வியை தகர்த்த அருள் செய்து
காடு இடை கடிநாய் கலந்து உடன்சூழ கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை:
துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக்கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.
குறிப்புரை:
புறச்சமயிகளுடைய பொருந்தா உரைக்கு அப்பாற் பட்டுத் தக்கன் யாகத்தைத் தகர்த்து, வேட்டுவ வடிவந் தாங்கிய விகிர்தர் இவர் என்கின்றது. பாடு - துன்பம். பயில்தரும் மற உரை - சொல்லுகின்ற கருணையற்ற வார்த்தைகள். விட்டு - அவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு. ஏடு உடை மலராள் - தாட்சாயணியாகிய உமாதேவி. தகர்த்து - அழித்து. விளித்து - அழைத்து.
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்