திருகோகர்ண நாயகி அம்மை ஆச்சியின் அமுது செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 79வது திருத்தலம்
திருக்கோகரணம்
அருள்மிகு கோகர்ணநாயகி உடனுறை மகாபலநாதர்
மரம்: வில்வம் கோடி தீர்த்தம்
பாடல் எண் : 6 பண் : சாதாரி
நீறுதிரு மேனி இசைஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலி செய ஏறுவிளை ஆட இசை கொண்டு இடு பலிக்கு
வரும் ஈசன் இடமாம்
ஆறு சமயங்களும் விரும்பிய அடி பேணி அரன் ஆகம மிக
கூறுமனம் ஏறி ரதி வந்த அடியர் கம்பம் வரு கோகரணமே.
பொழிப்புரை:
சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர். திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும், மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும்.
குறிப்புரை:
திருமேனிமிசை, நீறு ஆடி - விபூதி பூசி. வார் கழல் சிலம்பு நிறை ஒலி செய - கச்சிறுக்கிய கழலும் சிலம்பும் நிறைந்த ஒலி செய்ய. ஏறு - இடபமானது. விளையாட விசைகொண்டு - விளையாடுவதைப் போற் செல்ல விசையாகச் செலுத்தி. இடுபலிக்கு வரும் - மாதர் இடும் பிச்சைக்கு வருகின்ற, ஈசன் இடமாம். ஆறு சமயங்களும் - ஆறுசமயத்தவர்களும், விரும்பி, அடிபேணி - திருவடியைக்கருதி. அரன் ஆகமம் மிகக்கூறு - சிவபெருமானது ஆகம நெறிகளைப் பயன் மிகும்படி சொல்லுகின்ற கோகரணம். ( மனம் ) வேறு இரதி வந்து - உலக இன்பத்தின் வேறான சிவானந்தம் விளைய. அடியர் - அடியார்கள். கம்பம் வரு - அவ்வானந்தம் மேலீட்டால் உடல் நடுக்கம் வரப்பெறுகின்ற கோகரணம் - திருக்கோகரணமே. ` ஆகம் விண்டு கம்பம் வந்து ` ( தி.8 திருச்சதகம். 72)
#🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்