குருவாசகக்கோவை
19. ஊழ்வலித்திறன்
152. விளக்கடிக்கே நின்று விலகா விருள்போல்
அளக்கருஞா னாசா னடிக்கே - துளக்கமறக்
காத்துமகங் காரமயற் காரிருள்போ காதுடலம்
மூத்துவிளிந் தாலூழ் முறை.
பதச்சேதம்:-
விளக்கு அடிக்கே நின்று விலகா இருள்போல் அளக்கஅரு ஞானா ஆசான் அடிக்கே துளக்கம் அறக்
காத்தும் அகங்கார மயல் கார் இருள் போகாது உடலம்
மூத்து விளிந்தால் ஊழ் முறை.
அரும்பதவுரை:-
அளக்கரு - காலதேச எல்லைக்குட்படாத; துளக்கம் அற - அசைவு அற; ஊழ் - அபக்குவம்; காரியமான அபக்குவம் ஈண்டுக் காரணமான ஊழாக உபசரித்துக் கூறப்பட்டது.
ஶ்ரீ முருகனார் சுவாமிகள் உரை:-
விளக்கைச் சூழ்ந்திருந்த விருளும் அதனொளியால் விலகவும், அதனடிக்கண்ணே நின்றதுமட்டும் அதனாலகலாமை போன்று பூரணமான போத குருவைச் சேய்மைக்கணின்ற சீடருமுள்ளத்தா லுபாசித்துய்வாராக. தூலத்தில் அவனடிக்கண்ணே, அவன் சாயையைப் போலத் தாமசைவறக் காக்கப் பெற்றும் மற்றுஞ் சிலர் மட்டும் அவ்வாறகந்தை யிருளகன்று ஞான விருத்தராக நடவாமல் வயோ விருத்தராய் மட்டும் மடிவரேல், அஃது அவருழ் முறையாம்.
விசேடவுரை:- சொரூபத்தா லகவிருளகற்று மான்ம சூரியனான ஆசான் உண்மையில் உதயாத்தமனமற்ற சிதாகாயமேயாதலால், இடம் பொழு திரண்டாலுமே அளக்கரு ஞானாசானென்றார். அத்தகைய குருவை அதிட்ட வசத்தாற் குறுகினோர் அவனைத் தாமடைந்த கன்மத்தை யயர்ந்து விடாது அல்லும் பகலும் அதுவே கண்ணாய் அவனருளை முன்னிட்டான்ம லாபத்தையடைந்தே தீரவேண்டு மென்பதாம்.
''பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - என்னோ
பயனில் பொழுதாக் கழிப்பாரே நல்ல
நயமி லறிவி னவர்'' - நாலடியார்
"பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை" - குறள்.
ஶ்ரீ சாதுஓம் சுவாமிகள் உரை:-
(விளக்கைச் சுற்றிலும் சற்று தூரத்தில் நின்ற இருளெல்லாம் விளக்கொளியால் உடனே நீங்கப் பெற்றும்) விளக்கின் அடியில் நின்ற இருள் மட்டும் நீங்காமல் என்றும் இருப்பது போல, எல்லையற்ற ஞான சொரூபியான (சற்குருவின் திருவடி களினின்றும் உடலால் தூரத்திலும் உளத்தால் நெருங்கியும் உபாசித்தோர் பலரும் உய்வடையவும்), சற்குருவின் திருவடி யருகிலேயே அசையாமல் முதுமைப் பருவம் வரையிலும் வசித்துங்கூட அகங்கார மயக்கவிருள் நீங்காமல் மடிவோரின் நிலைக்கு அவர்களது முன் வினையாற் சூழ்ந்த அபக்குவமே காரணம் என்க.
இப்பாடலுக்கு ஶ்ரீ முருகனார் அளித்த விளக்கம்:- ஞான குருவை அதிருஷ்ட வசத்தால் அடைந்தோர் தாம் எதற்காக அவனை வந்தடைந்தோமோ அந்தக் காரியத்தை மறந்து விடாமல் அல்லும் பகலும் அதுவே கண்ணாய், அவன் அருளைத் துணை கூவிக் கொண்டு ஆன்ம லாபத்தை யடைந்தே தீரவேண்டும் என்பதாம்.
" பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - என்னோ
பயனில் பொழுதாக் கழிப்பாரே நல்ல
நயமி லறிவி னவர். - நாலடியார்.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️



