சிவமணியம் கேள்வி: குருவோட உபதேசம் அவசியமா? பகவான்: ஏதாவது புதுசா படிக்கணும்னாத்தான் குருவும் உபதேசமும் அவசியம். இங்கே எல்லாம் மறக்கறதுதான். கேள்வி: ஆனாலும் குரு அவசியம் தானே? பகவான்: நீங்க எதைத் தேடறேளோ அது ஏற்கனவே இருக்கு. அதனாலே குரு அவசியம் இல்லை. கேள்வி: உண்மைய உணர்ந்தவனாலே தேடறவங்களுக்கு ஏதாவது பிரயோஜனம் உண்டா? பகவான்: உண்டு. நாம இன்னும் அடையலேங்கற மயக்கத்தைப் போக்குவான். கேள்வி: அப்போ எப்படின்னு சொல்லுங்க? பகவான்: இது மயக்கத்திலே இருக்கறவனைத் தெளிவிக்கற வழி. கேள்வி: அப்போ என்னை தெளிங்க. நான் என்ன செய்யணும். பகவான் : நீங்க இப்போ எங்கே இருக்கேள்? எங்கே போகணும்? கேள்வி: என்னை தெரியும்.... ஆனா நான் யார்ன்னு தெரியாது.... பகவான்: இரண்டு நான் இருக்கா? கேள்வி: என் கேள்வியையே திருப்பி போட்டுர்றீங்க. பகவான்: யார் இதை சொல்றது? இருக்கறவன் சொல்றானா? யார்னு என்னைத் தெரியலேங்கறவன் சொல்றானா? கேள்வி: நான்தான். எப்படின்னு தெரியலே பகவான்: நான்கறது எப்பவும் இருக்கே! கேள்வி: நான்கறது மரணத்துலே ஏதாவது மாறுமா? பகவான்: யார் மாறுவதைப் பாக்கறது? கேள்வி: நீங்க பேசறது ஞானயோகம். பகவான்: ஆமாம். கேள்வி: சரணடையறது பக்தியோகம். பகவான்: இரண்டும் ஒண்ணுதான். கேள்வி: அப்போ இப்படித்தான் முடிவுக்கு வர வேண்டியது இருக்கு. நான்கறதுதான் இங்கே இருக்கு. நான் அறிவு. நான்கறது இல்லாம எதுவும் இல்லை. பகவான்: இந்த முடிவுக்கு விசாரிச்சும் வரலாம். இல்லே சரின்னு கேட்டுக்கொண்டாலும் போறும். கேள்வி: நீங்க இறைவனை பாத்துருக்கிங்களா? எந்த உருவத்துல? பகவான்: கடவுளைப் பாக்க யாரு இருக்கப்போறா? இந்தக் கேள்வியை இப்படிக் கேட்டா நல்லாயிருக்கும். நான் என்னைப் பாத்திருக்கேனா? நமக்கு நம்மளத் தெரியுமா? கேள்வி: நான் என்னை பாத்துருக்கேன். எனக்கு என்னை தெரியும். பகவான்: உங்களுக்கு உங்களை எப்போ தெரியும்? கேள்வி: உடம்பாத் தெரியும். நான்கறது உடம்ப விட வேறான்னு பகவானே சொல்லணும். எப்படி ஆத்மாவை உடம்புல இருந்து பிரிச்சு அறியறது? பகவான்: ஏன் பிரிச்சு அறியணும்? உடம்பு அது பாட்டுக்கு இருக்கட்டுமே! கேள்வி: எல்லோரும் கடவுளை உணர்ந்துகொண்டேதான் இருக்காங்களா? பகவான்: ஆமாம். கேள்வி: அப்போ ஞானம்ன்னா என்ன? பகவான்: நாம ... ஞானம் அடையலேங்கற தப்பான எண்ணம் போறதுதான். கேள்வி: எனக்குப் புரியலே. பகவான் மெளனமாயிருந்தார். கேள்வி: விஸ்வரூப தரிசனம்னா என்ன? பகவான்: உலகத்தை கடவுளா பாக்கறது. பகவான் பொதுவாக சொன்னது. பகவான்: எல்லாரும் விவேகானந்தர் புஸ்தகத்தை படிச்சுட்டு அவர் ராமகிருஷ்ணர்கிட்டே கேட்ட மாதிரியே என்கிட்டே வந்தும் கேக்கறா. நீங்க ஞானமடைஞ்சிருக்கேளா? எனக்கும் ஞானம் கொடுக்க முடியுமா? நீங்க கடவுளைப் பாத்துருக்கேளா? எனக்குக் காட்ட முடியுமா? நான் 'ஞானமன்னா என்ன'ன்னு கேக்கறேன். கேள்வி: நான்கறது விழிப்புலேயும் கனவிலேயும் தெரியுது. ஆனா தூக்கத்திலே தெரிய மாட்டேங்குதே! பகவான்: அப்போ அது தூக்கத்திலே இல்லையா? கேள்வி: இராமன் கேக்கறான், 'பிரம்மம் பரிசுத்தமா இருக்கும்போது, மாயை எப்படி அதுல இருக்கும். பிரம்மத்தையே மறைக்கும். வசிஷ்டர் ‘தீவிர வைராக்கியத்தோட இருக்கற சுத்தமான மனசுலே இந்தக் கேள்வி வராது'ன்னு சொல்றார். அத்வைதத்திலே ஜீவன், ஈஸ்வரன், மாயைக்கு இடமில்லை. ஆத்மாவிலே ஒருத்தன் கரைஞ்சுட்டான்னா வாசனைகள் அழிஞ்சுடும். கேள்விக்கே இடம் இல்லை. இதுக்கு சரியான பதில் என்ன? பகவான்: சாதகனோட பக்குவத்தைப் பொறுத்துதான் இந்தக் கேள்விக்குப் பதில். கீதையிலே கிருஷ்ணர் இரண்டாவது அத்தியாயத்திலே, 'யாரும் பிறக்கலே யாரும் இறக்கலே'ங்கறார். நான்காவது அத்தியாயத்திலே, 'உனக்கும் எனக்கும் நிறையப் பிறப்புகள் வந்து போயிடுத்து... அதெல்லாம் எனக்குத் தெரியும், உனக்குத் தெரியாது'ங்கறார். இந்த ரெண்டுலே எது உண்மை ரெண்டும் உண்மை. வேற வேற பார்வையிலே. இப்போ ஒரு கேள்வி வர்றது... ஒரு ஜீவன் எப்படி ஆத்மாவிலே இருந்து வர்றது ? நீ யார்ன்னு பார். அப்போ இந்தக் கேள்வியைக் கேக்கமாட்ட...ன்னு சொல்றேன். ஏன் ஒருத்தன் தன்னை எதிலே இருந்தோ வந்ததா நினைக்கணும் ? பிறக்கறதுக்கு முன்னாடி எப்படி இருந்தான்? இறந்ததுக்கு அப்புறம் எப்படி இருப்பான்? ஏன் இந்தத் தேவையில்லாத ஆலோசனைகள்லே நேரத்தை வீணாக்கணும். ஏன் உன்னைத் தனித்துவத்தோடு கூடிய ஆள்ன்னு பாக்கறே? தூங்கும்போது உனக்கு என்ன வடிவம்? பக்கம்:432 - 436. அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள்

More like this