#அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே
இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும்
அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு
மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி
வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும்
ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே
நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு
என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ
அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும்
மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய்
இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால்
கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ
பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர்
தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி
இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து
மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு
எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால்
வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து
இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால்
அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே
செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும்
என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும்
நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம்
இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி
அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக
.
விளக்கம்
=========
பிரம்மதேவன், மகாவிஷ்ணுவைப் பார்த்து, திருமாலே, இறந்த பிள்ளைகள் இரண்டுபேரும் தங்களின் மக்கள் என்பதால் மனம் தளர்ந்த நான் பதற்றம் அடைந்துவிட்டேன். அவை இரண்டும் பரலோகத்து மனிவரின் உயிரும், தேவலோக வானவர் உயிரும் ஆகையால் மீண்டும் பிறவி அமைக்கலாகாதே என்று எண்ணி, மேலான அவ்விரண்டு உயிர்களையும் தர்மம் நிறைத்து இயங்குகின்ற உயர்வான கயிலாசத்தில் ஒரு திருவிடத் திருவறைக்குள் அடைத்து வைத்துள்ளேன் என்றார்.
.
பிரம்மதேவன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட மகாவிஷ்ணு, பிரம்மதேவனைப் பார்த்து, அடடே அவ்விரண்டு உயிர்களையும் அன்றே மறுபடியும் பிறவி செய்யாமல் விட்டு விட்டீரே. உடனே பிறவி செய்திருந்தால் அநேக மக்களாகப் பெற்றுப் பெருகி இருப்பார்களே. எஞ்சிய ஐந்து மக்களின் பிள்ளைகளும், தேசம் ஐம்பத்து ஆறிலும் பெற்றுப் பெருகிப் பரந்து இருப்பதைப் போன்று இவ்விரண்டு பிள்ளைகளின் பிற்கிளைகளும் கிளை கிளையாகப் பெருகிக் கோடிக்கணக்காக இருந்திருப்பார்களே.
.
அன்று சோழனென்ற பாவி அவர்களைக் கொன்று கெடுத்தான். நீரோ அவர்களை மீண்டும் படைக்காமல் கெடுத்துவிட்டீர். வஞ்சகக் கலி நீசப் பாவியோ என் மக்களை வலித்துப் பிடித்து வதைத்துக் கெடுக்கிறான்.
இதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அந்த இரண்டு உயிர்களையும் வைகையில் மடிந்த அந்த உடலோடு மனுவோராய் எழுப்ப வேண்டும் என்று நான் நிச்சயித்து இருக்கிறேன். ஆகவே, அவ்வுயிர்களை பத்திரமாக வைத்துப் பாதுகாக்க வேண்டியது உம்முடைய பொறுப்பாகும்.
.
அத்துடன் அவ்விருவரின் வாரீசாகப் பிறந்து கள்ளங் கபடமில்லாமல் பூலோகக்தில் வாழ்ந்து கொண்டிருப்போரின் பிற்கிளைகளாக, கயிலாசத்திலும், தேவலோகத்திலும் இன்னும் பூவுலகில் பிறப்பிக்காமல் எஞ்சி இருப்போரை எல்லாம் திடீர் திடீர் எனப் பிறவி செய்து இவ்வழிக்குலத்தோர் பெருகிடச் செம்மையாகச் செயல்படுவீர் என்று பிரம்ம தேவனிடம் மகாவிஷ்ணு சொல்லுகிறார்.
.
மூலம் உரைப்பதை முற்றுணர்ந்த வேதா நல்லதென இசைந்து, கைலாச வாசிகளையும், தேவலோக வாசிகளையும் இறந்த இருவரின் பிள்ளைகளின் சந்ததிகளாகத் துரிதமாகப் பிறவி செய்யலானார்.
.
.
அகிலம்
=======
சப்த மாதர்கள் பூலோகப் பிறவி
===============================
உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து
திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார்
நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே
இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர்
உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில்
நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால்
ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும்
மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி
எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே
செங்கருட வாகனவா தேவி மணவாளா
நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும்
சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே
எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில்
மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர்
பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால்
இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ
அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால்
வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும்
மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல்
சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல்
மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல்
பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல்
நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல்
தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல்
கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல்
மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல்
கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல்
செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல்
பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல்
மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல்
சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல்
ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல்
அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல்
தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல்
இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச்
சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து
இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி
நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும்
என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே
அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி
வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார்
.
விளக்கம்
========
பிரம்மதேவன், சிவலோகத்தாரையும், தேவலோகத்தாரையும் பூலோகத்தில் விரைவாகப் படைக்க முற்பட்டதால் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, மனஉறுதி உடைய மடந்தையர்களான சப்தமாதர்களைப் பார்த்து, பெண்ணரசிகளே ! நீங்கள் என்னிடம் கேட்டதற்கு நான் எடுத்த நடவடிக்கைகளையும், தீர்மானத்தையும் கண்கூடாகக் கண்டீர்கள். இனி நான் உங்களிடம் கேட்டேனே அதுபற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
.
உங்களைப் பூலோகத்தில், நீங்கள் பெற்ற பிள்ளைகளின் வழிக்குலத்தில் பிறவி செய்யலாம் என்று நிச்சயித்து இருக்கிறேன். இதைப்பற்றி உங்களுடைய விருப்பம் என்ன? என்பதை உடனே சொல்லுங்கள் என்று மகாவிஷ்ணு சப்தமாதர்களிடம் கேட்டார்.
.
அதனால் மனம் மகிழ்ந்த சப்தமாதர்கள், அந்த சந்தோசப் பெருக்கோடு மகாவிஷ்ணுவிடம், எங்களுடைய நாதா ! எங்களை ஆளுகின்ற மாமணியே ! தாங்கள் நிச்சயித்த எண்ணத்தில் எள்முனை அளவுகூட சிவபெருமான் முதற்கொண்டு உலகில் எவரும் அறிய முடியாத அளவில் வலிமைமிகு சூட்சுமம் உடையவரே ! எங்களைப் பூலோகத்தில் எங்களுடைய வழிக்குலத்தில் மங்களமாகப் பிறவி செய்கிறோம் என்று சொன்னீர்களே, நாங்கள் பூலோகத்தில் உள்ள மனுக்குலத்தில் பெண்பிள்ளைகளாகப் பிறந்தால் அங்கே எங்களுக்கு மரணம் ஏற்படாமல் இருக்க அருள்புரிவீரோ...
.
அப்படி அருள் புரியாத பட்சத்தில் நாங்கள் பூலோகத்தில் மனுக்குலத்தில் பிறந்தால், வலிமை பொருந்திய நாயகமாகிய தாங்கள் பூலோகத்தில் வந்து எங்களை ஏற்றுக் கொள்கின்ற காலம்வரை, எங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமலும், திருமணம் நடந்துவிடாமலும், பருவகால மயக்கம் இல்லாமலும், சிற்றின்ப சேர்க்கை இல்லாமலும், தோல்சீலை அணிய வேண்டிய அவசியம் இல்லாமலும், சிகை அழகு ஏற்படாமலும், பொழுது சாயும் வேளையில் முணுமுணுத்துப் பாடாமலும், அந்நேரம் படுத்துத் தூங்காமலும், நல்லது கேட்டது பற்றி அறியாத நிலையிலும் யாரும் எங்களைக் கேலி செய்யாத முறையிலும், சுவையான உணவுகளில் நாட்டம் வராமலும், முறைப்படி கொசுவம் மடித்துப் புடவைக்கட்டத் தெரியாத நிலையிலும், கூந்தல் வளர்க்கும் எண்ணம் இம்மியும் இல்லாமலும், மார்பகங்கள் வளர்ச்சி அடையாத வண்ணமும், அழகை மிளிரச் செய்யும் சதை மினுக்கம் இல்லாமலும், பருவகாலத் தேமல் உடலில் ஏற்படாத வண்ணமும், பருவப்பெண் என்ற நிலை எங்களைச் வந்து அணுகாமலும், மிகுதியான திரண்ட வாழ்வு எங்களைச் சேராத நிலையிலும், சுற்றமோ, உறவோ எங்களிடம் அலாதி அன்பு கொள்ளாத அளவிலும், யாரைப் பற்றியும் கோள் சொல்லாத நிலையிலும் யாருடைய முகத்தையும் மோகித்துப் பார்க்க வேண்டியதில்லாவண்ணமும் துன்பமோ, நோய், நொம்பலங்களோ சிறிதளவு கூட இல்லாதவாறும், தொந்தரவுகளானாலும், நல்லவையானாலும் பெரிய அளவில் இல்லாத வகையிலும் தாங்கள் எங்களைப் பூலோகத்தில் பிறவி செய்யுங்கள்.
.
இவ்வண்ணமாக எங்களைப் பூலோகத்தில் படைத்து, தாங்களும் பூலோகத்தில் வந்து அவதரித்து, எங்களை உங்கள் மனைவியர்களாக்கி, எங்களுக்கு வாழ்வு தந்து காத்தருள்வேன் ஏன்று எங்களுக்கு வாக்குறுதி அளித்து, இவற்றை எல்லாம் மனதிற்கொண்டு எங்களுடைய வழிக்குலத்தில் எங்களைப் பிறவி செய்யுங்கள் என்று ஏழு மாதர்களும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
.
ஏழு மாதர்களின் வேண்டுகோளையும் கேட்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவர்களைப் பார்த்து. நிங்கள் எம்மிடம் நல்ல வேண்டுகோளை வைத்துள்ளீர்கள். உங்களுடைய இந்த வேண்டுகோளின்படியே உங்களைப் பூலோகத்தல் பிறவி செய்ய உடன்படுகிறேன். இவை எவ்வகைக் காரணத்தாலும் மாற்றம் ஏற்படாது என்று சப்தமாதர்களிடம் மகாவிஷ்ணு வாக்களித்தார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.